#தசகம்_75
கம்ஸ மோக்ஷம்
1. மறுநாள் அதிகாலையில், பயந்த கம்ஸனின் ஆணைப்படி, மல்யுத்தத்திற்கான போட்டிகள் முரசொலி செய்து அறிவிக்கப்பட்டது. அதனைக் காண பல அரசர்கள் வந்தனர். நந்தகோபரும் உப்பரிகைக்குச் சென்றார். கம்ஸனும் உப்பரிகைக்குச் சென்றான். நீ அழகிய அலங்காரங்களுடன் பலராமனுடனும்,
கோபர்களுடனும் மல்யுத்த களத்தை அடைந்தாய். அங்கு, குவாலயாபீடம் என்ற யானை உன்னை வழிமறித்து நின்றது.
2. வழிவிட்டுச் செல் என்று அந்த யானையைப் பணித்தாய். கோபமடைந்த யானைப் பாகனான ‘அம்பஷ்டன்’, யானையை உன்னை தாக்க ஏவினான். அந்த யானை விரைந்து உன்னைப் பிடித்தது. அதனிடமிருந்து விடுவித்துக்
கொண்டு அதன் மத்தகத்தில் அடித்தாய். கோபியரின் கலசம் போன்ற கொங்கைகளுடன் போட்டியிடும் அந்த யானையின் மத்தகத்தை அடித்து, அதன் காலடியில் மறைந்து, பிறகு சிரித்துக்கொண்டு வெளியே வந்தாய்.
3. யானைக்கு அருகில் இருந்தாலும், அதன் பிடியில் அகப்படாமல் நழுவி, வெகுதூரம் ஓடி, விளையாட்டாய் விழுவது
போல் கீழே விழுந்தாய். உடனே அந்த யானையும் உன்னைத் தாக்க எதிரே வந்தது. அதன் தந்தங்களை வேருடன் பிடுங்கி எறிந்தாய். தந்தத்தின் அடிப்பகுதியிலுள்ள உயர்ந்த முத்துக்களை எடுத்து, இவற்றை அழகிய முத்து மாலையாகச் செய்து ராதையிடம் கொடு என்று உன் நண்பர் ஸ்ரீதாமனிடம் கூறினாய்.
4. மக்களின் மனம்
உன் தேககாந்தியால் அபகரிக்கப் பட்டது. யானையின் தந்தத்தைத் தோளில் சுமந்துகொண்டு பலராமனுடன் மல்யுத்த களத்திற்குச் செல்லும் உன்னைக் கண்ட மக்கள், ஆச்சர்யம் என்றும், நந்தகோபன் மஹாபாக்கியசாலி என்றும், சிலர் யசோதை பாக்கியசாலி என்றும், வேறு சிலர், இல்லை இந்த நகரத்து மக்களாகிய நாம்தான்
பாக்கியம் செய்தவர்கள், என்றும் உவகையுடன் கூவினார்கள்.
5. பூர்ண ஸ்வரூபமான நீ, கோபிகைகளுக்கு நேரில் காணத் தகுந்தவனாய் விளங்கினாய். ஆனால், அந்நகர மக்களோ உன்னை பரப்ரம்மமாக அறியவில்லை. முதன்முதலாய் உன்னை பார்த்த அவர்கள், உடனேயே பாபம் நீங்கியவர்களாய் ஆனார்கள். உன்னுடைய செய்கைகளைப்
பற்றிப் போற்றிப் பாடினார்கள்.
6. கம்ஸனுடைய ஆணையின்படி, மல்யுத்தத்தில் சிறந்த சாணூரன் என்ற மல்லன் தங்களையும், முஷ்டி யுத்தத்தில் சிறந்த முஷ்டிகன் என்பவன் பலராமனையும் சவாலுக்கு அழைத்தார்கள். பலவிதமான தாக்குதல்களுடன் யுத்தம் தொடங்கியது. சாணூரனுக்கு மரணத்திற்கு முன்பே பந்த
மோக்ஷங்களிலிருந்து விடுதலை கிடைத்தது. அதாவது, உன் பிடிபடுதலும், அதிலிருந்து விடுதலையும் கிடைத்தது. என்ன ஆச்சர்யம்!
7. இது என்ன போட்டி? ஒரு புறம் அழகான சிறுவர்கள். மல்லர்களோ கடினமானவர்கள். இந்த யுத்தத்தை நாம் பார்க்க வேண்டாம், போய் விடுவோம் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது
சாணூரனைத் தூக்கிச் சுற்றி உயிரிழக்கச் செய்தாய். உயிரிழந்த அவனை பூமியிலே ஓங்கி அடித்தாய். பலராமனும் முஷ்டிகனை அடித்துக் கொன்றார். மீதமிருந்த மல்லர்கள் அங்கிருந்து ஓடினர்.
8. திகைத்த கம்ஸன், முரசுகளையும், வாத்தியங்களையும் முழங்க விடாமல் தடுத்தான். உக்ரசேனன், நந்தகோபன், வசுதேவன்
ஆகியோரைக் கொல்லும்படியும், உன்னை வெகு தூரத்திற்கப்பால் விரட்டும்படியும் உத்தரவிட்டான். இதைக் கேட்டுக் கோபமடைந்த நீ, கருடன் மலைக்குச் செல்வதைப் போல் உப்பரிகையில் வீற்றிருந்த கம்ஸனை நோக்கிப் பாய்ந்தாய். கம்ஸன் வாளெடுத்துச் சுழற்றினான். அவனைப் வலுவாகப் பிடித்தாய்.
9. அவனுடைய
அங்கங்களை நொறுக்கி, பூமியில் தள்ளி, அவன் மேல் பாய்ந்து குதித்தாய். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். கம்ஸன் எப்போதும் உன்னையே மனதில் நினைத்திருந்த படியால் மோக்ஷத்தை அடைந்தான். பூர்வ ஜன்மத்தில் காலநேமி என்ற அசுரனாக இருந்தபோது நீ அவனைக் கொன்றாய். கம்ஸனாகப் பிறந்த பின்னும் எப்போதும்
உன்னையே நினைத்துக் கொண்டிருந்ததாலேயே, இவ்வாறு முக்தி அடைந்தான்.
10. பிறகு, நீ கம்ஸனுடைய 8 சகோதரர்களையும் கொன்றாய். உன் பெற்றோரான வசுதேவரையும், தேவகியையும் சிறையிலிருந்து மீட்டு, அவர்களை நமஸ்கரித்தாய். கம்ஸனின் தந்தையான உக்ரசேனனை அந்த நாட்டிற்கு அரசனாக ஆக்கினாய். யாதவ குலத்தினர்
மிக்க மகிழ்ந்தார்கள். தேவர்களின் குருவான பிருகஸ்பதியிடமிருந்து வித்தைகளைக் கற்ற உத்தவரை நண்பராக ஏற்றுக் கொண்டாய். மிக்க மகிழ்ச்சியுடன் மதுரா நகரில் வசித்து வந்த நீ என் எல்லா நோய்களையும் போக்கி அருள வேண்டும்.
#தசகம்_76
கோபியருக்கு உத்தவர் மூலம் செய்தி அனுப்புதல்
1. பிறகு பலராமனுடன், ஸாந்தீபனி முனிவரிடம் 64 நாட்களிலேயே பல வித்தைகளையும், கல்விகளையும் கற்றாய். குருதக்ஷிணையாக, இறந்த அவரது மகனை யமலோகத்திலிருந்து மீட்டு, அவரிடம் கொடுத்தாய். பாஞ்சஜன்யம் என்ற உன் சங்கை ஊதிக் கொண்டு மதுரா
நகரத்தை அடைந்தாய்.
2. கோபிகைகள், அன்பினால் உன்னை நினைத்து மிகவும் துயரம் அடைந்தனர். அவர்கள் மீது கருணை கொண்ட நீ, உன் நண்பரும், சிறந்த பக்தருமான உத்தவரை அவர்களிடம் சேதி சொல்ல அனுப்பினாய். எவ்வுலகிலும் காண முடியாத கோபிகைகளின் அன்பையும், பக்தியையும் உத்தவருக்குக் காட்ட நினைத்து,
அவரை அங்கு அனுப்பினாய்.
3. உன் மகத்துவத்தினால் செழுமையாய் இருந்த கோகுலத்திற்கு உத்தவர் மாலையில் சென்றார். உன்னைப் பற்றிய செய்திகளைக் கூறி நந்தகோபரையும், யசோதையையும் சந்தோஷமடையச் செய்தார். காலையில் தேர் நிற்பதைப் பார்த்த தாமரை போன்ற கண்களுடைய கோகுலத்துப் பெண்கள், உன் நண்பரான
உத்தவர் வந்திருப்பதை அறிந்து, எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு நந்தனின் வீட்டை அடைந்தனர்.
4. உன்னைப் போன்றே உத்தவர் அணிந்திருந்த அழகான ஆடைகள் மற்றும் ஆபரணங்களைப் பார்த்த அவர்கள், உன் பல்வேறு செயல்களையும் விளையாட்டுகளையும் மீண்டும் நினைத்துப் பேச முடியாமல் ஆனார்கள். மற்றவர்களுக்கும்
தமக்கும் உள்ள பேதங்களை மறந்தார்கள். தடுமாற்றத்துடன் தயங்கிக் கொண்டு உத்தவரிடம் பேச முயன்றார்கள்.
5. உத்தவரே! இரக்கமற்ற அந்தக் கண்ணன், தன் பெற்றோரைப் பார்ப்பதற்காக உன்னை அனுப்பினானா? நகரத்துப் பெண்களால் கவரப்பட்ட அவன் எங்கிருக்கிறான்? நாதனே! காக்க வேண்டும். உன் முத்தங்களையும்,
தழுவல்களையும், பேச்சுக்களையும், அழகிய விளையாட்டுக்களையும் யாரால் மறக்க முடியும் என்று அரற்றினார்கள்.
6. கருணைக் கடலே! மன்மதனைப் போன்ற அழகனே! ராஸக்ரீடையினால் கலைந்த கேசத்துடன், வாடி வியர்த்திருக்கும் உன் திருமேனியை ஒரு முறையாவது தழுவ மாட்டோமா? என்று புலம்பினார்கள்.
7. இவ்வாறு பல
விதமாய்ப் புலம்பிய கோபிகைகளிடம், உத்தவர் தத்துவங்கள் பொதிந்துள்ள உன் சேதியைக் கூறி, சமாதானம் செய்தார். அதனைக் கேட்ட கோபியர்கள் மகிழ்ந்தனர். உத்தவர், அவர்களோடு உன் செய்கைகளையும், விளையாட்டுக்களையும் பற்றிப் பேசிக்கொண்டு சில தினங்களைக் கழித்தார்.
8. கோகுலத்தில், எப்பொழுதும்,
எல்லாரும் தங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வேலைகள் செய்யும்போது கூட, தங்கள் லீலைகளையே பாடிக் கொண்டிருந்தார்கள். தூக்கத்திலும் உம்மைப் பற்றியே பேசினார்கள். அவர்களது செய்கைகள் யாவும் உம்மை அனுசரித்தே இருந்தன. அனைத்து செயல்களும் தங்கள்மயமாக இருந்தது. இதைக் கண்ட
உத்தவர் மிகுந்த ஆச்சர்யம் அடைந்தார்.
9. உத்தவர் ராதையிடம், ராதையே! உன் கிருஷ்ணன் பூக்களைக் கண்டால், இது என் ராதைக்கு மிகவும் பிரியமானது என்பார். நான் பேசினால் ராதையும் இவ்வாறுதான் பேசுவாள் என்றும், நான் பேசாவிட்டால், கோபம் கொண்ட ராதையைப் போல் என் பேசாமல் இருக்கிறாய்? என்றும்
என்னைக் கேட்பார் என்று கூறி, உனக்குப் பிரியையான தாமரைக் கண்களுடைய ராதையை ஆனந்தமடையச் செய்தார்.
10. நான் சீக்கிரமே திரும்பி வருவேன். மிகுந்த கார்யங்களினால் வரமுடியவில்லை. பிரிவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். என்னைப் பற்றிய நினைவுகள் எப்போதும் உங்களுக்கு இருப்பதால் வெகு விரைவில்
உங்களுக்கு பிரும்மானந்த சுகம் கிட்டப் போகிறது. அப்போது உங்களுக்கு பிரிவும், சேர்க்கையும் சமமான ஆனந்தத்தை அளிக்கும் என்று நீ கூறியதை, உத்தவர் கோபிகைகளிடம் கூறி சமாதானப் படுத்தினார்.
11. இவ்விதமான அன்பையும், பக்தியையும் எந்த உலகிலும் கண்டதில்லை, கேட்டதில்லை. தவம் செய்வதாலோ,
வேதங்களைக் கற்பதாலோ என்ன பயன்? கோபிகைகளை நமஸ்கரித்துத் தொழுதாலே போதும் என்று மெய்மறந்து, ஆனந்தத்துடன் கூறிக்கொண்டு கோகுலத்திலிருந்து திரும்பி வந்த உத்தவரைப் பார்த்து மகிழ்ந்தாய். நீ என்னையும் வியாதியிலிருந்து காத்து அருள வேண்டும்.
#தசகம்_77
உபஸ்லோக உற்பத்தி, ஜராஸந்த யுத்தம்
1. ஸைரந்திரி உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் உன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தன் இல்லத்தையும், தன்னையும் நன்கு அலங்கரித்துக் கொண்டு காத்திருந்தாள். நீ உத்தவருடன் அவளது இல்லத்திற்குச் சென்றாய்.
2. நீ
வந்ததால் அவளது நீண்டநாள் எண்ணம் நிறைவேறியது. அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த அவள், பூரித்து அசையும் ஸ்தனங்களுடன், உன்னைப் பலவிதமாகப் பூஜித்தாள். தனிமையில் அவளை ஆனந்திக்கச் செய்தாய்.
3. நீ அவளிடம் வேண்டிய வரம் கேள் என்று கூறினாய். அவளும், பல இரவுகள் உம்மோடு கழிக்கும் விஷய
சுகத்தையே வரமாக வேண்டினாள். ஞானம் உடையவளாய் இருந்தால் மோக்ஷத்தைக் கேட்டிருப்பாள். எப்போதும் உன் அருகிலேயே இருக்கும் வரத்தைக் கூட அவள் கேட்கவில்லை. அனைத்தும் நீ சங்கல்பித்தபடி தானே நடக்கும்!
4. பிறகு, சில இரவுகள் அவளுடன் தங்கி அவளுக்கு ஆனந்தத்தை அளித்தாய். அவளுக்கு உபஸ்லோகன் என்ற
புத்திரனையும் அளித்தாய். அவன் நாரத முனிவரிடம் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்தை உபதேசம் பெற்று அதில் பிரசித்தனாக விளங்கினான்.
5. பின்னர், நீ பலராமருடனும், உத்தவரோடும் அக்ரூரரின் வீட்டை அடைந்தாய். உன் வரவால் மிகவும் மகிழ்ந்த அக்ரூரர், அனைவரையும் நன்கு வரவேற்று உபசரித்து, பூஜித்துத்
துதித்தார். அவரை நகரத்திற்கு அனுப்பி, குந்தியின் புத்திரர்களான பாண்டவர்கள் காட்டிலிருந்து நகருக்குத் திரும்பி வந்ததைப் பற்றியும், திருதராஷ்ட்ரனின் கெட்ட செயல்களைப் பற்றியும் அறிந்தாய்.
6. ஜராஸந்தன் என்பவன், தன் நண்பனும், மாப்பிள்ளையுமான கம்ஸனின் வதம் பற்றிக் கேள்விப்பட்டு,
மிகுந்த கோபம் கொண்டு, மதுராநகரத்தை அழித்தான். சிறிய படையையுடைய நீ, தேவலோகத்தில் இருந்து பலராமனுக்குக் கிடைத்த தேர் முதலியவற்றால், அவனது இருபத்திமூன்று அக்ஷௌஹிணிப் படைகளை முறியடித்தாய்.
7. பலராமன் ஜராஸந்தனைக் கட்டி வைத்தார். அவனோடு யுத்தம் செய்ய ஆசைகொண்டு அவனை விடுவித்தாய்.
ஏனெனில், அனைத்து அரசர்களையும் வென்று, அவர்களது சேனைகளையும் அடைந்த ஜராஸந்தனைப் போன்ற வீரன் அப்போது யாரும் இல்லை.
8. தோல்வியடைந்த ஜராஸந்தன், மற்ற அரசர்களின் உதவியுடன் 16 முறை உன்னோடு யுத்தம் செய்தான். விஷ்ணுவே! அவனது முன்னூற்று தொண்ணூற்று ஒன்று அக்ஷௌஹிணிப் படைகளை அடித்துக்
கொன்றாய். என்னே உன் மகிமை!
9. அவனுடன் பதினெட்டாவது முறை யுத்தம் ஆரம்பிக்கும்முன், மூன்று கோடி யவனர்களுடன் ஒரு யவனன் படையெடுத்து வருவதை அறிந்தாய். உடனே, விஸ்வகர்மாவைக் கடலின் நடுவில் ஒரு நகரை உருவாக்கச் சொல்லி, அதில் மக்கள் அனைவரையும் குடியேறச் செய்தாய்.
10. தாமரை மாலையணிந்து,
நகரத்திலிருந்து வெளியே வந்தீர்கள். யவனர்களின் தலைவன் பின் தொடர்ந்து வந்தான். உடனே நீ ஒரு மலைக்குகையில் மறைந்தாய். தொடர்ந்து வந்த யவனன், நீ என்று நினைத்து, குகையில் தூங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் என்ற அரசனைக் காலால் உதைத்தான். விழித்த முசுகுந்தன், உன் கையால் வதம் பெறப்
புண்ணியமற்ற அந்த யவனனை, தன் பார்வையால் சாம்பலாக்கினான். அப்போது குகையில், பக்தனான முசுகுந்தனின் எதிரில் அழகாகக் காட்சியளித்தாய்.
11. இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த எனக்கு அரச வாழ்வில் விருப்பம் இல்லை. உன் அனுக்ரஹம் ஒன்றே வேண்டுகிறேன் என்று முசுகுந்தன் உன்னைத் துதித்தான். அதைக்
கேட்ட நீ மகிழ்ந்து, எல்லா துக்கங்களையும் போக்கும் பக்தியையும், அதன் பின் முக்தியையும் அவனுக்கு வரமாக அளித்தாய். வேட்டையாடி உயிரினங்களைக் கொன்ற தோஷம் நீங்க அவனைத் தவம் செய்யச் சொன்னாய்.
12. பின் மதுராநகரம் சென்றாய். யவனன் அழைத்து வந்த சேனைகளை அழித்தாய். வழியில், ஜராஸந்தன்
தடுத்தான். அவனுக்கு மமதை ஏறுவதற்காக, அவனுக்குக் கடைசியான வெற்றியைக் கொடுத்து, கடலின் நடுவே உள்ள துவாரகா நகருக்குச் சென்று ஓடி ஒளிந்து கொள்வது போல பாவனை செய்தாய். குருவாயூரப்பா! என்னைக் காத்து அருள் புரிய வேண்டும்.
#தசகம்_78
துவாரகா வாழ்க்கை, ருக்மிணியின் சேதி
1. விஸ்வாகர்மாவால் உருவாக்கப் பட்டதும், தேவர்கள் அளித்த ஐஸ்வர்யங்களை உடையதும், கடலின் நடுவே உள்ளதுமான அந்தப் புதிய துவாரகா நகரமானது உன் தேக காந்தியால் மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் விளங்கியது.
2. பிரமனின் ஆக்ஞைப்படி, ரேவத நாட்டு
அரசன், தன் பெண்ணான ரேவதியை, பலராமனுக்கு மணம் செய்து கொடுத்தான். யாதவர்களோடு சேர்ந்து அந்தத் திருமணத்தில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தாய்.
3. விதர்ப்ப நாட்டு அரசனின் பெண்ணான ருக்மிணி உன்மீது அன்பு கொண்டாள். அவளுடைய அண்ணன் ருக்மி. சேதி நாட்டு அரசன் சிசுபாலன் அவனுடைய
நெருங்கிய நண்பன். தீய எண்ணம் கொண்ட சிசுபாலனுக்கு, ருக்மிணியை மணம் செய்து கொடுக்க ருக்மி முடிவு செய்தான்.
4. ருக்மிணி உன்னிடம் வெகு நாட்களாகக் காதல் கொண்டு இருந்தாள். தன் விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்று அஞ்சினாள். மன்மதனால் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை உன்னிடம் தெரிவிக்குமாறு
ஓர் அந்தணரைத் தூது அனுப்பினாள்.
5. அந்த அந்தணர், தீயவர்களால் அடையமுடியாத உன் நகரத்தை, விரைவாக அடைந்தார். ஸம்ஸாரத்தில் உழலும் மக்களின் துயரத்தைப் போக்கும் நீ, அந்த அந்தணரை வரவேற்று உபசரித்தாய். அவரும் மிகுந்த சந்தோஷமடைந்தார்.
6. அவர், கிருஷ்ணா! குண்டின தேசத்து இளவரசியான ருக்மிணி
உன்னிடத்தில் காதல் கொண்டு உள்ளாள். நான் அவளுடைய தூதுவனாக, அவள் அனுப்பிய சேதியோடு இங்கு வந்திருக்கிறேன் என்று கூறினார்.
7. உலகிற்கெல்லாம் நாயகனே! உன்னுடைய குணங்களால் கவரப்பட்டு உன்னையே கணவனாக வரித்து விட்டேன். தற்போது, சிசுபாலன் என்னை அடைந்து விடுவானோ என்று அஞ்சுகிறேன். கருணைக்
கடலே! என்னைக் காக்க வேண்டும் என்று ருக்மிணி கூறிய சேதியை அந்தணர் உன்னிடம் தெரிவித்தார்.
8. வேறு கதியில்லாத என்னைக் கைவிட்டீரானால் நான் உடனே என் ஜீவனை விட்டுவிடுவேன் என்று ருக்மிணி கூறியதை அந்தணர் சொன்னதும், உன் மனத்திலும் மிக்க சஞ்சலம் உண்டானது
9. பின்னர் நீ அந்த அந்தணரிடம்,
அவளுடைய வேதனையைக் காட்டிலும் என் மனத்தில் அதிகமான மன்மத வேதனை ஏற்பட்டுள்ளது. நான் சீக்கிரமாக வந்து, அரசர்கள் முன்னிலையில், கருவிழிகளை உடைய என் பிரியையான ருக்மிணியைக் கரம் பிடிக்கிறேன் என்று கூறினாய்.
10. மிகவும் களிப்படைந்த அந்த அந்தணருடன் ரதத்தில் ஏறிக் கொண்டு. சீக்கிரமாகக்
குண்டின தேசத்தை அடைந்தாய். குருவாயூர் நாதனே! நீ தான் என் எல்லா நோய்களையும் போக்கி, என்னைக் காப்பாற்றி அருள வேண்டும்.
#தசகம்_79
ருக்மிணி கல்யாணம்
1. நீ குண்டின தேசத்தை அடைந்தாய். பலராமன் சேனைகளுடன் பின் தொடர்ந்து வந்தார். அரசனான பீஷ்மன் உன்னை வரவேற்று உபசரித்தான். நீ வந்த செய்தியைக் கூறிய அந்தணருக்கு, ருக்மிணி மிகுந்த அன்புடன் நமஸ்காரம் செய்தாள்.
2. உலகிலேயே அழகான உன் திருமேனியைக் கண்டும்,
ருக்மி எடுத்த முடிவைக் கேட்டும், குண்டின தேசத்து மக்கள் துயரமடைந்தார்கள். இரவும் கழிந்தது.
3. மறுநாள் காலை, நிலவைப் போன்ற முகமுடைய ருக்மிணி, மங்களகரமான ஆடை ஆபரணங்களுடன், காவலர்கள் சூழ, பார்வதிதேவியை வணங்கக் கோவிலுக்குக் கிளம்பினாள். உன்னிடத்திலேயே அவள் மனத்தை அர்ப்பணித்து
இருந்தாள்.
4. உயர்குலப் பெண்களுடன் பார்வதி தேவியின் ஆலயத்திற்குள் சென்று, நன்கு வழிபாடு செய்து, அவள் பாதங்களில் நமஸ்கரித்தாள். கிருஷ்ணனையே கணவனாக அளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டினாள்.
5. ருக்மிணியைக் காண வேண்டும் என்ற ஆவலில் பல நாட்டு அரசர்கள் கோவில் வாசலில் கூடி
இருந்தார்கள். நீயும் ருக்மிணியைக் கிரஹிக்க எண்ணம் கொண்டு காத்திருந்தாய். அப்போது ருக்மிணி, மிகுந்த அழகுடன் எல்லா திசைகளையும் ஆனந்தமுறச் செய்து கொண்டு, ஆலயத்திலிருந்து வெளியே வந்தாள்.
6. அவள் அழகு உலகையே மயங்கச் செய்வதாய் இருந்தது. அவளது தேக காந்தியால் எல்லா அரசர்களும் மயங்கினர்.
அவளது கடைக்கண் பார்வையால் நீயும் மோகித்தாய்.
7. நிலவைப் போன்ற முகம் உடையவளே! எங்கே போகிறாய் என்று கேட்டு, நொடிப் பொழுதில் அவள் அருகே சென்று, அவளைக் கைகளினால் அன்புடன் பற்றி, ரதத்தில் ஏற்றிக் கொண்டு கவர்ந்து சென்றாய். உடனே, அனைத்து திசைகளில் இருந்தும் எதிரிகளின் கூச்சல் அதிகமானது.
8. இந்த இடைச்சிறுவன் எங்கிருந்து வந்தான் என்று கூடியிருந்த அரசர்கள் கோபமடைந்து போர்புரியத் தொடங்கினார்கள். யாதவர்கள் அவர்களை ஜயித்தார்கள். நாய்க் கூட்டங்களைப் பார்த்த சிங்கம் போல், அந்த அரசர்களைக் கண்ட நீ சிறிதும் அசையவில்லை.
9. ருக்மி எதிர்த்துப் போர்புரிய வந்தான். அவனைக் கட்டி
இழுத்து, அவன் தலையை மொட்டை அடித்து, மீசையைக் கத்தரித்து அவன் கர்வத்தை அடக்கினாய். பலராமனின் வேண்டுதலால் அவனை விடுவித்துக் கொல்லாமல் விட்டாய். பிறகு, மகாலக்ஷ்மியான ருக்மிணியுடன் துவாரகைக்குச் சென்றாய்.
10. உன் சேர்க்கையால் ருக்மிணி மிகுந்த நாணத்தை அடைந்தாள். புதிய காதல்
அனுபவத்தால் மிகுந்த சந்தோஷம் அடைந்தாள். அவள் முகம் மந்தஹாஸப் புன்னகையுடன் விளங்கியது. தனிமையில் ருக்மிணிக்குப் பலவகையில் ஆனந்தம் அளித்தீர்கள்.
11. இரவும் பகலும் விளையாட்டுப் பேச்சுக்களால் மகிழச் செய்தாய். ஒரு முறை பரிகாஸமாகப் பேசி, ருக்மிணியைக் கலங்கச் செய்தாய். பிறகு சமாதானமும்
செய்தாய்.
12. முன்பை விடப் பலவிதமாய் அரவணைத்து, அவளை சந்தோஷம் அடையச் செய்தாய். முகுந்தனே! உன் பெருமைகளையும், சரித்திரங்களையுமே சொல்லிக் கொண்டிருக்கும் எனக்கு, நோயினால் உண்டான தாபத்தையும், சோர்வையும் போக்கி அருள வேண்டும்.
#தசகம்_80
ஸ்யமந்தக மணியின் கதை
1. ஸத்ராஜித் என்பவன் சூரியனிடமிருந்து ஸ்யமந்தகம் என்ற மணியைப் பெற்றான். அதை நீ கேட்டாய். அப்படிக் கேட்டதற்குப் பல காரணங்கள் உண்டு. உன்னிடம் அன்பு கொண்ட அவனுடைய மகளான ஸத்யபாமாவை மணப்பதற்காகக் கேட்டிருக்கலாம்.
2. குறுகிய மனம் படைத்த அவன் அந்த மணியைக்
கொடுக்கவில்லை. ஸத்ராஜித்தின் தம்பி ப்ரஸேனன். அவன் அந்த மணியைக் கழுத்தில் அணிந்து கொண்டு வேட்டையாடச் சென்றான். ஒரு சிங்கம், அந்த மணியை மாமிசம் என்று நினைத்து, அவனைக் கொன்று அந்த மணியை எடுத்துச் சென்றது. வானரங்களின் தலைவனான ஜாம்பவான் என்ற கரடி, அந்த சிங்கத்தைக் கொன்று, மணியைத் தன்
குழந்தையிடம் கொடுத்தது.
3. நீ அந்த மணியைத் திருடியதாக ஸத்ராஜித் கூறியதைக் கேட்ட மக்களும் அவ்வாறே கூறினர். நற்குணம் படைத்தவர்களிடத்தில் சிறு பிழையைக் கண்டாலும் மக்கள் அதையே பேசுவார்கள். அனைத்தையும் அறிந்திருந்தும் நீ அம்மணியைத் தேடிப் புறப்பட்டாய். வழியில், ப்ரஸேனனும், ஒரு
சிங்கமும் இறந்து கிடப்பதைக் கண்டாய். மேலும் தேடிக்கொண்டே ஜாம்பவானின் குகையை அடைந்தாய்.
4. வயது முதிர்ந்த ஜாம்பவான், உன்னை ஸ்ரீஹரி என்று அறியாமல், முகுந்தனை சரணடைந்து வாழும் என்னை எதிர்க்க யாரால் முடியும்? பிரபுவே! ராமனே! நீ வெற்றியுடன் விளங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வெகு
நேரம் உன்னுடன் மல்யுத்தம் புரிந்து, தமது முஷ்டிகளால் குத்தி, உனக்கு சிறந்த பூஜை செய்தார்.
5. உன்னைத் தன் தெய்வம் என அறிந்ததும், ஜாம்பவான் அந்த ஸ்யமந்தக மணியையும், தன் மகளாகிய ஜாம்பவதியையும் உனக்கு அளித்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டு, ஜாம்பவானை ஆசீர்வதித்து, ஸ்யமந்தகமணியை
ஸத்ராஜித்திடம் ஒப்படைத்தாய்.
6. ஸத்ராஜித் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான். தன் பெண்ணான ஸத்யபாமாவையும், ஸ்யமந்தக மணியையும் உனக்கு அளித்தான். நீ ஸத்யபாமாவை மட்டும் ஏற்றுக் கொண்டு, அந்த மணியை அவனிடமே திருப்பிக் கொடுத்தாய்.
7. மிகுந்த நாணத்தை அடைந்த ஸத்யபாமாவுடன் மகிழ்ச்சியாய்
வாழ்ந்து வந்தாய். அரக்கு மாளிகையில் பாண்டவர்கள் எரிக்கப் பட்டதாகக் கேள்விப்பட்டு, ஹஸ்தினாபுரத்திற்குச் சென்றாய். சததன்வா என்பவன் அக்ரூரர், கிருதவர்மா ஆகியோர் கூறியதால் ஸத்ராஜித்தைக் கொன்று ஸ்யமந்தகமணியைக் கவர்ந்தான்.
8. தந்தை இறந்ததை அறிந்த ஸத்யபாமா, மிகுந்த துக்கத்துடன்,
ஹஸ்தினாபுரம் வந்தாள். நீயும் சததன்வாவை அழித்து, ஸத்யபாமாவிற்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்தாய். பலராமன் மிதிலாநகரம் சென்று, துரியோதனனுக்கு கதாயுதத்தைக் கற்றுக் கொடுத்தார்.
9. அக்ரூரர் உன் மீது கொண்ட அன்பினால், நீ மணியைத் திருடியதாகக் கூறிய ஸத்ராஜித்தைக் கொல்லும்படி கூறினார் என்றும்
அக்ரூரர் ஐஸ்வர்யம் பெற வேண்டும் என்றே நீயும் அம்மணியை அவரிடமிருந்து பெறவில்லை என்றும் ஞானியர் கூறுகின்றனர்.
10. உன்னிடம் அசையாத பக்தி கொண்டவர் அக்ரூரர். ஸத்ராஜித்தைக் கொல்லும் தீய எண்ணம் அவருக்கு எப்படித் தோன்றியது? தன் அறிவைப் பற்றி அவர் கொண்ட கர்வத்தைப் போக்கவே அவ்வாறு
தோன்றும்படி செய்தாய். நிச்சயம்.
11. அக்ரூரரும், க்ருதவர்மாவும் அஞ்சி வேறு தேசம் சென்றனர். அவரை வரச்சொல்லி, அவரிடம் சததன்வா கொடுத்திருந்த ஸ்யமந்தகமணியை, பலராமன் முதலியவர்களிடத்தில் காட்டச் சொன்னாய். நற்காரியங்களையே செய்யும் அக்ரூரரிடமே அந்த மணியைத் திருப்பிக் கொடுத்தாய்.
குருவாயூரப்பனே! ஸத்யபாமாவுடன் ஆனந்தமாய் வசிப்பவனே! நீ என்னைக் காக்க வேண்டும்.
#தசகம்_81
நரகாசுர வதம், பாரிஜாத ஹரணம்
1. அன்புடைய, அழகிய ஸத்யபாமாவை மிகுந்த சந்தோஷமடையச் செய்தாய். ஸத்யபாமாவுடன் திரௌபதியின் திருமணத்திற்காக ஹஸ்தினாபுரம் சென்றாய். பாண்டவர்களை மகிழ்விக்க அங்கேயே சில தினங்கள் தங்கினாய். விஸ்வாகர்மாவைக் கொண்டு இந்திரப்பிரஸ்தம் என்ற நகரத்தை
உருவாக்கி, பின் துவாரகைக்குத் திரும்பினாய்.
2. உன் சகோதரியான சுபத்திரையை துரியோதனன் மணந்து கொள்ள விரும்பினான். உன் ஆலோசனைப்படி, அர்ஜுனன் சன்யாசி வேடமிட்டு அவளைக் கவர்ந்து சென்றான். அதனால் பலராமன் மிகவும் கோபமடைந்தார். அவரை சமாதானம் செய்தாய். பின்னர், உன் நண்பனான அர்ஜுனனின்
சந்தோஷத்திற்காக, பலராமனுடனும், ஸத்யபாமாவுடனும் இந்திரப்பிரஸ்தம் சென்றாய்.
3. யமுனைக்கரையில் கண்ட காளிந்தீயை மனைவியாக ஏற்றுக் கொண்டாய். காண்டவ வனத்தை அக்னிக்கு உணவாக அளித்துவிட்டு, துவாரகைக்குத் திரும்பினாய். உன் அத்தையின் பெண்ணும், அவந்தி தேசத்து இளவரசியுமான மித்ரவிந்தை, உன்னிடம்
காதல் கொண்டாள். அவள் தனது சகோதரர்களிடத்தில் பயந்து கதியற்று இருந்தாள். அவளைப் பல அரசர்கள் முன்னிலையில் கவர்ந்து சென்றாய்.
4. கோசல தேசத்து அரசன் நக்னஜித்தின் பெண்ணான ஸத்யை என்பவளை மணப்பதற்காக, ஏழு காளைகளை ஏழு உருவம் எடுத்து அடக்கி, பின்னர் அவளை மணந்து கொண்டாய். வரதனே! பத்ரை
என்பவளை, அவளது சகோதரன் ஸந்தர்தனனும், மற்றவர்களும் உனக்கு மணம் செய்து கொடுத்தனர். அவளும் உன் அத்தை அருத்கீர்த்தியின் பெண்தான்.
5. அர்ஜுனன் முதலியவர்களால் கூட அடிக்க முடியாத, தண்ணீரில் மட்டுமே பிரதிபலிக்கும் மீன்குறியை அடித்து, மத்ர அரசனின் மகளான லக்ஷ்மணை என்பவளை மனைவியாக அடந்தாய்.
இப்போது உமக்கு எட்டு மனைவிகள் இருந்தார்கள். நரகாசுரன் என்ற அசுரன் உலகைக் கொடுமைப் படுத்துவதாக இந்திரன் கூறக் கேட்டாய்.
6. நீ நினைத்த மாத்திரத்தில் உன் வாகனமான கருடன் பறந்து வந்தது. அதன் மீது ஏறி, ஸத்யபாமாவை மடியில் வைத்துக் கொண்டாய். பூந்தோட்டத்திற்குச் செல்வது போல் எதிரியான
நரகாசுரனின் நகரத்திற்குச் சென்றாய். அந்நகரின் கோட்டைகளை இடித்துத் தரைமட்டமாக்கி, சேனைகளை அழித்தாய். பெருகிய ரத்தத்தால் ப்ராக்ஜ்யோதிஷம் என்ற அந்த நகரை, சோணிதபுரம், அதாவது ரத்தம் நிறைந்த நகரமாக மாற்றினீர்.
7. ஐந்து முகங்களைக் கொண்ட முரன் என்ற அசுரன், கடலைப் போன்ற பெரிய மடுவில்
இருந்து உம்மை எதிர்த்துப் போரிட வந்தான். உன் சக்ராயுதத்தால் அவன் தலையை வெட்டி வீழ்த்தினாய். பிறகு, நரகாசுரன், நான்கு தந்தங்களை உடைய யானைகளுடன் போர் புரிய வந்தான். நீண்ட யுத்தத்திற்குப் பின்னர், அவனுடைய தலையை சக்ராயுதத்தால் வெட்டி, அவனை நரகத்தைத் தாண்டியவனாகச் செய்து மோக்ஷம்
அளித்தாய்.
8. நரகாசுரனின் தாயான பூமாதேவி உன்னைத் துதித்தாள். அவனுடைய பிள்ளையான பகதத்தன் என்பவனுக்கு ராஜ்ஜியத்தையும், ஒரு யானையையும் அளித்தாய். மற்ற யானைகளையும், நரகாசுரனால் சிறைப்படுத்தப்பட்ட உன் மீது அன்புகொண்ட பதினாறாயிரம் பெண்களையும், அளவற்ற செல்வங்களையும், உன் நகரமான
துவாரகைக்கு அனுப்பினாய்.
9. இந்திரனின் தாயான அதிதியிடம் இருந்து நரகாசுரன் கவர்ந்து சென்ற குண்டலங்களைப் பெற்று, அதை அதிதியிடம் கொடுப்பதற்காக, ஸத்யபாமாவுடன் தேவலோகம் சென்றாய். தன் அழகால் தேவப் பெண்களையும் வெட்கப்படச் செய்யும் ஸத்யபாமாவுடன் வந்த உன்னை இந்திரனும், தேவர்களும்
வரவேற்றுப் பூஜித்தார்கள். ஸத்யபாமா விரும்பியதால், கல்பவ்ருக்ஷமான பாரிஜாத விருக்ஷத்தை எடுத்துச் சென்ற உன்னை இந்திரன் எதிர்த்தான். அவனை வென்று உன் இருப்பிடம் அடைந்தாய். செல்வங்களின் மேல் உள்ள ஆசையால் தீய எண்ணம் உண்டாகும் என்பதை உலகிற்கு விளக்கவே இவ்வாறு செய்தாய்.
10. கல்பவ்ருக்ஷத்தை ஸத்யபாமாவின் தோட்டத்தில் நட்டாய். உன் மீது அன்பு கொண்ட பதினாறாயிரம் பெண்களை மனைவியராக ஏற்று, தனித் தனியே வசிக்கச் செய்து, நீயும் பதினாறாயிரம் உருவங்கள் எடுத்துக் கொண்டு அவர்கள் அனைவரையும் ஆனந்தமடையச் செய்தாய். நீ ஒவ்வொரு வீட்டிலும், ஒரே நேரத்தில் தோன்றி, பூஜை
முதலிய கர்மாக்களைச் செய்து கொண்டிருப்பதைக் கண்ட நாரதர் ஆச்சர்யம் அடைந்தார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பத்துக் குழந்தைகள் பிறந்தன. குருவாயூரப்பனே! தாங்கள் என்னைக் காக்க வேண்டும்.
#தசகம்_82
பாணாசுர யுத்தம், ந்ருக மோக்ஷம்
1. ருக்மிணியின் மகன் ப்ரத்யும்னன் உன் அம்சம். ப்ரத்யும்னன் பிறந்ததும், அவனை சம்பரன் என்ற அசுரன் கடத்திச் சென்றான். ப்ரத்யும்னன் வளர்ந்த பிறகு, சம்பரனைக் கொன்று, தன் மனைவி ரதியுடன் துவாரகைக்குத் திரும்பினான். தன் மாமன் மகளும், குணவதியுமான
ருக்மவதியைக் கவர்ந்து மணம் செய்து கொண்டான். ப்ரத்யும்னனின் பிள்ளை அநிருத்தன் நற்குணங்கள் நிரம்பியவனாய் இருந்தான். அநிருத்தன், ருக்மியின் பேத்தியான ரோசனையை மணந்து கொண்டான். நீயும் அந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்தாய். அந்தத் திருமணத்தில் சூதாட்டத்தின் போது நடந்த சண்டையில்
பலராமர் ருக்மியைக் கொன்றார்.
2. மகாபலியின் மகன் பாணாசுரன், சிறந்த சிவபக்தன். அவனுக்கு ஆயிரம் கைகள். அவனுடைய பெண் உஷை. அவள் உன் பேரனான அநிருத்தனை நேரில் கண்டதில்லை. ஆயினும், அவன் மீது காதல் கொண்டாள். அவனைக் கனவில் கண்டு, விழித்ததும் காணாமல் துயரம் அடைந்தாள்.
3. அவளுடைய தோழி
சித்ரலேகா என்பவள், யோகத்திலும், சித்திரம் வரைவதிலும் தேர்ச்சி பெற்றவள். அவள் பல இளைஞர்களின் ஓவியங்களை வரைந்தாள். அநிருத்தனை சித்திரமாக வரைந்ததும், உஷை அடையாளம் கண்டு கொண்டாள். சித்ரலேகா, தன் யோக சக்தியால், அன்றிரவே அநிருத்தனை உன் அரண்மனையிலிருந்து அழைத்துச் சென்றாள்.
4. அநிருத்தன் உஷையோடு அந்தப்புரத்தில் சுகமாய் வாழ்ந்து வந்தான். அவனை, பாணாசுரன் கயிற்றால் கட்டிச் சிறையிலிட்டான். நாரதர் மூலம் அச்செய்தியை அறிந்த நீ, மிகுந்த கோபத்துடன், யாதவர்களோடு சென்று, பாணாசுரனின் சோணிதபுரத்தை முற்றுகையிட்டாய்.
5. பாணாசுரனின் நகரத்தை மலைமகளின் கணவரான
பரமசிவன் பாதுகாத்து வந்தார். அவர், பூதகணங்களோடு யாதவப் படைகளை பயமில்லாமல் தடுத்தார். பாணாசுரன் யுயுதானனோடும், குகன் ப்ரத்யும்னனோடும், நீ சிவபெருமானோடும் யுத்தம் செய்தாய்.
6. சிவனின் எல்லா பாணங்களையும் தடுத்த நீ, மோகனாஸ்திரத்தைத் தொடுத்து அவரை மயங்கச் செய்தாய். அதைக் கண்ட பூத
கணங்கள் பயந்து ஓடின. குகனும் ப்ரத்யும்னன் எறிந்த மன்மத அம்பால் தோல்வியடைந்தார். கும்பாண்டன் என்ற பாணாசுரனின் மந்திரியை, பலராமர் அடித்துக் கொன்றார்.
7. பாணாசுரன் தன் ஆயிரம் கைகளிலும் ஐந்நூறு விற்களையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு போருக்கு வந்தான். நீ அவனுடைய ஆயுதங்கள்
யாவற்றையும் நொறுக்கினாய். அதனால் அவன் பின்வாங்கித் திரும்பினான். சைவ ஜ்வரம் முன்னே வந்தது. வைஷ்ணவ ஜ்வரம் அதை முறியடித்தது. உன் மகிமையை அறிந்த பிறகு, அந்த சைவப் படையானது உன்னைப் போற்றிப் புகழ்ந்தது. உன் சரித்திரத்தைப் படிப்பவர்களுக்கோ, கேட்பவர்களுக்கோ ஜ்வரபீடை நீங்க வேண்டும் என்று
வேண்டிக்கொண்டு திரும்பிச் சென்றது. சிவனுடைய அடியார்கள் ஞானம் நிறைந்தவர்களாக இருந்தாலும், தமோ குணத்தால் மூர்க்கமான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
8. ஆணவத்துடன் பாணாசுரன், மீண்டும் பல ஆயுதங்களுடன் வந்து உன்னை எதிர்த்தான். அவனுடைய எல்லாக் கைகளையும் அறுத்து எறிந்தாய். உன்னைப் பற்றி
அறிந்த பரமசிவன் உன்னை துதித்தார். அவர் வேண்டிக் கொண்டதன் பேரில் பாணாசுரனுக்கு இரு பக்கத்திலும் இரண்டு கைகளை மட்டும் மீதமாக வைத்து சிவபக்தனான அவனை விடுவித்தாய். அவன் அன்புடன் அளித்த பொருட்களையும், உஷையுடன் அநிருத்தனையும் அழைத்துக் கொண்டு துவாரகைக்குச் சென்றாய்.
9. நீ பல முறை
இந்திரனை வென்றாய். நந்தனைக் கவர்ந்து சென்ற வருணனை ஜயித்தாய். குருவின் மகனை மீட்டு வந்து யமனை ஜயித்தாய். காட்டுத் தீயைக் குடித்து அக்னியை வென்றாய். கன்றுகளைக் கவர்ந்த பிரமனை வென்றாய். பாணாசுர யுத்தத்தில் சிவனையும் ஜயித்தாய். பிரபுவே! உன் இந்த அவதாரம், எல்லா அவதாரங்களையும் விட
சிறந்ததாக விளங்குகிறது.
10. ந்ருகன் என்ற அரசன் பிராம்மண கோபத்தால் பச்சோந்தி உருவம் அடைந்தான். அவனது சாபத்தைப் போக்கி, அவனைத் தூய்மைப்படுத்தி ஸ்வர்க்கத்திற்கு அனுப்பினாய். புனிதமான உன் மக்களிடம், பிராம்மணர்களிடம் வைக்க வேண்டிய மரியாதையை உபதேசம் செய்தாய். குருவாயூரப்பனே! என்னைக்
காப்பாற்ற வேண்டும்.
#தசகம்_83
பௌண்ட்ரகன் முக்தி
1. பலராமன் கோகுலம் சென்று அங்குள்ள பெண்களோடு விளையாடிக் கொண்டு, யமுனையின் வழியைத் திருப்பி விட்டு, போதையில் மதி மயங்கியிருந்தார். அப்போது, பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன் கூடியிருந்தவர்களின் சொல்லால் தன்னையே பகவான் வாசுதேவன் என்று எண்ணிக்கொண்டு ஒரு தூதனை
உன்னிடம் அனுப்பினான்.
2. நான்தான் இந்தப் பூமியில் அவதரித்துள்ள நாராயணன். நீ என்னுடைய சின்னங்களான சங்கு, சக்கரம் ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கிறாய். அவைகளை விட்டுவிட்டு என்னிடம் சரணடைய வேண்டும் என்று பௌண்ட்ரக வாசுதேவன் சொல்லியதை அந்தத் தூதன் கூற, கூடியிருந்த அனைவரும் அவனைப்
பரிகாசம் செய்தனர்.
3. தூதன் சென்றதும், யாதவப் படைகளுடன் அவன் இருப்பிடம் சென்றாய். உன் மார்பில் உள்ள ஸ்ரீவத்ஸத்தைப் போல, பௌண்ட்ரக வாசுதேவன் தன் மார்பில் சூடு போட்டுக் கொண்டிருந்தான். கௌஸ்துபம் என்ற மாலையைப் போல விலையுயர்ந்த மாலையையும், குண்டலங்களுடனும், பீதாம்பரத்தையும் தரித்துக்
கொண்டிருந்தான்.
4. பௌண்ட்ரக வாசுதேவன் தன் இரும்பினாலான சக்கரத்தைத் உன் மீது எறிந்தான். உடனே நெருப்புப் பொறிகளைக் கக்குகிற உன்னுடைய சக்ராயுதத்தால் அவனுடைய தலையைத் துண்டித்தாய். அவன் படைகளையும் அழித்தாய். அவன் நண்பனான காசிநாட்டு அரசன் காசிராஜனின் தலையையும் வெட்டி, காசியில் விழச்
செய்தாய்.
5. முட்டாள்தனத்தினாலும், சிறுவர்களின் பேச்சுக்களாலும், அவன் தன்னையே ஸ்ரீ வாசுதேவன் என்று வெகுநாட்களாய் எண்ணிக் கொண்டிருந்தான். எப்போதும் உன்னையே நினைத்துக் கொண்டிருந்ததால் மோக்ஷத்தை அடைந்தான். யாருடைய நல்ல செயல்கள் என்ன பலன் தரும் என்று யாருக்குத் தெரியும்?
6. காசி
நாட்டு அரசனின் மகன் சுதக்ஷிணன், தன் தந்தையின் மரணத்தால் கோபம் கொண்டான். அவன் பரமசிவனைப் பூஜித்து பலம் பெற்றான். பாணாசுர யுத்தத்தின்போது ஓடிப் போன பூதகணங்களை நிர்ப்பந்தித்து அழைத்து வந்தான். உன்னை அழிக்க ஆபிசார அக்னியை ஏவினான்.
7. ஆபிசார அக்னியில் இருந்து தோன்றிய ‘க்ருத்யை’ என்ற
பிசாசு, பனைமரம் போன்ற உயர்ந்த கால்களுடன் வழியில் தென்பட்ட எல்லாவற்றையும் எரித்தது. அதைக் கண்ட நகர மக்கள் பயந்து தங்களிடம் கூறினார்கள். பகடை விளையாட்டில் ஈடுபட்டிருந்த நீ, சிறிதும் கலங்காமல், அருகிலிருந்த சுதர்சன சக்கரத்தை ஏவினாய்.
8. சுதர்சன சக்கரம் ஒளிவீசிக் கொண்டு எதிர்த்து
வருவதைக் கண்ட அந்தக் கொடிய தேவதை, கோபமாக சப்தமிட்டுக் கொண்டு, தன்னை ஏவிய சுதக்ஷிணனையே எரித்தது. உன் சக்ராயுதம் காசி நகரையே எரித்தது.
9. திரேதா யுகத்தில், ராமாவதாரத்தின் போது, ராவண வதத்தில் உதவி செய்த விவிதன் என்ற வானரம், கிருஷ்ணாவதாரத்தின் போது பலராமனால் கொல்லப்படவேண்டும் என்று
விரும்பியது. நரகாசுரனுக்கு மந்திரியாய் இருந்து கொண்டு, துவாரகைக்கு அருகே பல தீமைகளைச் செய்து கொண்டு இருந்தான். பலராமன் அவனோடு போர் புரிந்து, கைகளால் அடித்து எளிதாக அவனைக் கொன்றார்.
10. துரியோதனனின் பெண்ணான லக்ஷ்மணையைக் கவர்ந்த சாம்பன் என்றவனைக் கௌரவர்கள் சிறைப் படுத்தினர். அதை
அறிந்த பலராமன் சமாதானம் செய்ய அங்கு சென்றார். கௌரவர்களின் பேச்சால் கோபமடைந்த பலராமர், ஹஸ்தினாபுரத்தை கலப்பையால் மேலே கிளப்பி, சாம்பனை விடுவித்தார். கௌரவர்கள் பாண்டவர்களால் கொல்லப் படவேண்டும் என்பதால், நீ யாதவப் படையை அங்கு அனுப்பவில்லை. உன் லீலைகளை யாரால் அறிய முடியும்?
குருவாயூரப்பா! பிணிகளால் உண்டான என்னுடைய தாபம் நீங்குவதற்காக உம்மை நான் வணங்குகிறேன்.
#தசகம்_84
ஸமந்தபஞ்சக யாத்திரை
1. ஒருமுறை, சூரியகிரஹணத்தன்று, க்ருதவர்மாவையும் அநிருத்தனையும் துவாரகையில் விட்டுவிட்டு, யாதவர்களுடனும், யாதவகுலப் பெண்களுடனும் ஸமந்தபஞ்சகம் என அழைக்கப்படும் புனித இடத்திற்கு சென்றாய்.
2. அங்கே கூடியிருந்த பல மக்களின் நன்மைக்காக, நீ நீராடி அந்தப்
புண்ணிய தீர்த்தத்தைப் புனிதப் படுத்தினாய். பல அந்தணர்களுக்கு அளவற்ற பொருட்களைத் தானம் செய்தாய். அங்கு வந்திருந்த கௌரவர்கள், பாண்டவர்கள், மற்றவர்களோடு சேர்ந்து இருந்தாய்.
3. உன்னிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட திரௌபதி, உன் மனைவியர்களோடு பேசினாள். அவர்கள் ஒவ்வொருவரையும் நீ மணந்த முறை
பற்றி அவர்களிடம் கேட்டு மகிழ்ந்தாள்.
4. பின்னர், கோபர்களைப் பார்த்து, மகிழ்ச்சியுடன் அவர்களை அணுகி, அவர்களிடம் உரையாடினாய். வெகு நாட்களாகத் உன்னைப் பிரிந்ததால் துயரமடைந்து இளைத்த கோபியர்களிடமும் அன்புடன் சென்றாய்.
5. உன்னைக் கண்டதும் கோபியர்கள் சந்தோஷமடைந்து, வருத்தத்தை மறந்தனர்.
அதிக அன்பினால் அவர்கள் மார்புக் கச்சைகள் அவிழ்ந்தது. பொங்கி எழுந்து, மனதைக் கவரும் அவர்களது கொங்கைகளை ஆசையுடன் அணைத்தாய்.
6. அடிக்கடி எதிரிகளுடன் போர் புரிந்ததால் தாமதம் ஆனது என்று கூறிக்கொண்டே ராதையைத் தழுவினாய். அவளும் மிகுந்த பரவசமடைந்து உன்னுடன் ஒன்றிவிட்டாள்.
7. தனிமையில்
கோபிகைகளின் காதல் வேதனையைப் போக்கினாய். நீ பேரின்பமான பரமாத்மா என்பதை அவர்கள் அறியும்படி செய்தாய். அவர்கள் மனத்தில் உன்னைப் பற்றிய உண்மையை உணரும்படி செய்து, தத்துவ ஞானம் அளித்தாய்.
8. முன்பு கோபிகைகள் காதல் பிரிவால் துயரமடைந்திருந்த போது, உத்தவர் அளித்த உபதேசத்தால் ஆனந்தம்
அடைந்தனர். இப்போது நீ உபதேசித்தவுடன், உன்னைப் பற்றிய சிந்தனையானது, பேரின்பத்துடன் ஒன்றியிருக்கும் சுகமாக ஆனது.
9. உன் தந்தை வசுதேவர், பாவங்கள் விலக என்ன நற்காரியங்கள் செய்ய வேண்டும் என முனிவர்களிடம் கேட்டார். அதைக் கேட்ட அவர்கள், பகவானான நீ அருகில் இருக்கும் போது, வேறு
நற்காரியங்கள் எதற்கு என்று கூறிச் சிரித்தார்கள். ஆயினும், வசுதேவர் வேண்டிக் கொண்டதன் பேரில் யாகம் செய்து வைத்தார்கள்.
10. அந்த யாகம் நடைபெற்றபோது, பல நண்பர்கள் வந்திருந்தார்கள். யாதவர்கள் கோபர்களை உபசரித்தார்கள். இவ்வாறு யாகம் நடந்த மூன்று மாதங்களும், உன் சேர்க்கையால் முன்பு போல
சுகமடைந்தார்கள்.
11. யாகம் முடிந்து திரும்பிச் செல்லும்போது, ராதையிடம் சென்று அவளை இறுகத் தழுவினாய். அவள் துக்கமற்று இருப்பதைக் கண்டு மிக்க மகிழ்வுடன் துவாரகை திரும்பிய குருவாயூரப்பனே! வியாதிகளிலிருந்து என்னைக் காப்பாற்றி அருள வேண்டும்.
#தசகம்_85
ஜராஸந்த வதம், சிசுபால மோக்ஷம்
1. ஜராஸந்தன் இருபதினாயிரத்து எண்ணூறு அரசர்களை சிறையில் அடைத்தான். வெகுகாலமாய் அடைபட்டிருந்த அவர்கள், உன்னிடத்தில் யாரோ ஒருவனைத் தூதுவனாக அனுப்பினார்கள். அவனும் மகத தேசத்து அரசனான ஜராஸந்தனை அழிக்கும்படி உன்னிடம் வேண்டினான்.
2. நீ மகத
நாட்டிற்கு யுத்தம் செய்ய புறப்பட்டபோது, யுதிஷ்டிரர் ராஜஸூய யாகம் நடத்த இருப்பதாக நாரதர் தெரிவித்தார். இவ்விரண்டில் எதை முதலில் செய்வது என்று கலங்கினாய். அப்போது உத்தவர், ராஜஸூய யாகம் எதிரிகளை ஜயித்த பின்னர் நடத்தப்பட வேண்டியதாகும். ஆதலால் இவ்விரண்டும் ஒரே சமயத்தில் நடக்கும் என்று
கூறினார். உடனே யாதவப் படைகளோடு பாண்டவர்களின் தலைநகரான இந்திரப்ரஸ்தம் சென்றாய்.
3. உன் எல்லா மனைவியருடனும் இந்திரப்ரஸ்தம் சென்றாய். உன் அருட்பார்வையால் பலம் பெற்ற சகோதரர்களுடன், யுதிஷ்டிரர் அனைத்து நாடுகளையும் ஜயித்து, அளவற்ற பொருட்களைப் பெற்றார். பிறகு, பக்தர்களுக்கு அடியவனான நீ,
பீமன், அர்ஜுனன் ஆகியோருடன் ஜராஸந்தனிடம் அனுப்பினார்.
4. நீ, பீமன், அர்ஜுனன் ஆகியோருடன் கிரிவ்ரஜம் என்ற ஜராஸந்தனின் நகரை அடைந்தீர்கள். பிராம்மண வேஷம் பூண்டு ஜராஸந்தனிடம் யுத்தம் செய்ய ஒரு போட்டியை யாசித்தாய். புண்ணியம் செய்யாத ஜராஸந்தனை பீமனோடு போரிடும்படி செய்தாய். அரச குலத்தைச்
சேர்ந்த அவர்கள் மோதுவதை அர்ஜுனனுடன் பார்த்துக் கொண்டிருந்தாய்.
5. முடிவடையாத, நீண்ட அந்த யுத்தத்தில், ஜராஸந்தன் மூர்க்கமாகப் போரிட்டான். அப்போது, ஒரு குச்சியை இரண்டாக முறித்துக் கீழே போட்டு குறிப்பால் பீமனுக்கு உணர்த்தினீர். பீமனும் ஜராஸந்தனைக் இரண்டாகக் கிழித்துக் கொன்றான்.
பின்னர், சிறைப்பட்டிருந்த அரசர்களை விடுவித்தாய். அவர்களுக்கு பக்தியை அளித்து, பற்றற்றிருந்த அவர்களை தர்மத்துடன் அவரவர்கள் நாட்டை ஆளும்படிக் கட்டளையிட்டாய்.
6. தர்மபுத்திரர் ராஜஸூய யாகத்தைத் தொடங்கினார். எல்லா அரசர்களும் மகிழ்ச்சியுடன் வந்திருந்தார்கள். தாங்களும், யாகத்திற்கு
வந்திருந்த அந்தணர்களின் பாதத்தை அலம்பி, பட்டுத் துணியால் துடைத்துப் பணிவிடைகள் செய்தாய். தர்மபுத்திரரின் அதிர்ஷ்டத்தை என்னென்று சொல்வேன்?!
7. வந்தவர்களில் சிறந்த ஒருவரைப் பூஜிப்பது அந்த யாகத்தின் முக்கியமான அம்சமாகும். அப்போது தர்மர் யாரைப் பூஜிப்பது என்று யோசித்தார். சகாதேவனுடைய
ஆலோசனைப்படி உன்னைத் தேர்ந்தெடுத்தனர். தர்மபுத்திரரும், உலக மக்கள் அனைவரிடத்திலும் அந்தர்யாமியாய் இருக்கும் உன்னைப் பூஜித்து மகிழ்ச்சியடைந்தார். அப்போது உலகத்திலுள்ளவர்களும், தேவர்களும் ஆனந்தம் அடைந்தனர்.
8. உன்னை பூஜிப்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, சிசுபாலன்
ஆசனத்திலிருந்து எழுந்து, எந்த முட்டாள், மட்டமான இந்தச் சிறிய இடையனான கிருஷ்ணனை மதித்துத் தேர்ந்தெடுப்பான் என்று கூறினான். ஆயுதம் ஏந்திக்கொண்டு, பல கெட்ட வார்த்தைகளைக் கூறினான். அதைக் கேட்ட பாண்டவர்கள் சிசுபாலனை எதிர்த்தனர்.
9. பாண்டவர்களைத் தடுத்து, எதிர்த்த சிசுபாலனின் தலையை,
சக்ராயுதத்தால் நீயே அறுத்தாய். மூன்று ஜன்மாக்களிலும் உன்னையே நினைத்ததால் தூய்மை பெற்ற அந்த சிசுபாலன், உன்னோடு ஐக்கியமானான். யோகிகளுக்குக் கூட அத்தகைய பேறு கிடைக்காது!
10. ராஜஸூய யாகமும் நிறைவடைந்தது. எல்லா மக்களும் தர்மபுத்திரரை வாழ்த்திக் கொண்டே சென்றார்கள். அதைக் கண்டு பொறாமை
கொண்ட துரியோதனன், மயனால் நிர்மாணிக்கப்பட்ட சபைக்கு வந்தான். முன் மண்டபத்தில், தரையை ஜலம் போலவும், ஜலத்தைத் தரை போலவும் நிர்மாணித்து இருந்ததால், துரியோதனன் வேறுபாடு தெரியாமல் குழம்பித் திகைத்தான்.
11. வேறுபாடு தெரியாமல் துரியோதனன் சறுக்கி விழுந்தான். அவனைப் பார்த்து திரௌபதியும்,
பீமனும் சிரித்தார்கள். தங்கள் கடைக்கண் பார்வையால் அவர்களை அதிகமாய் உரத்துச் சிரிக்கச் செய்தாய். பூமியின் பாரத்தைப் போக்குவதற்குத் தாங்கள் விதைத்த விதையாக அச்செயல் அமைந்தது. தீயவர்களுக்குத் துன்பத்தைத் தருபவனே! குருவாயூரப்பனே! நோயிலிருந்து அடியேனைக் காக்க வேண்டும்.
#தசகம்_86
ஸால்வ வதம், மகாபாரத யுத்தம்
1. ஸால்வன் என்ற அரசன், ருக்மிணி கல்யாணம் நடந்த சமயத்தில் யாதவ சேனைகளால் தோற்கடிக்கப் பட்டான். அவன் பரமசிவனைப் பூஜித்து ‘ஸௌபம்’ என்ற விமானத்தைப் பெற்றான். உன் ராஜஸூய யாகத்திற்காகச் சென்றிருந்த போது துவாரகையை முற்றுகையிட்டான். பிரத்யும்னன்
அவனை எதிர்த்துப் போரிட்டான். த்யுமான் என்ற ஸால்வனின் மந்திரியையும் கொன்றான். 27 நாட்கள் அந்த யுத்தம் நடந்தது.
2. நீ பலராமனுடன் துவாரகைக்கு விரைந்து வந்து, எல்லா படைகளையும் அழித்து, ஸால்வனையும் எதிர்த்தாய். அவன் தன் கதையால் உன் வில்லைக் கீழே தள்ளினான். உன் தந்தையான வசுதேவரைப்
போல ஒரு உருவம் செய்து அதனைக் கொன்றான். நீ அவனது மாயையை க்ஷணநேரம் அறியவில்லை என்று சிலர் சொல்வார்கள். ஆனால் வியாசர் அதை மறுத்திருக்கிறார்.
3. ஸால்வனுடைய ‘ஸௌபம்’ என்ற விமானத்தை, கதையால் உடைத்து, கடலில் எறிந்தாய். ஸால்வனின் தலையை சக்ராயுதத்தால் அறுத்தாய். தந்தவக்த்ரன் கதையைத் உன்
மேல் எறிந்து தாக்கினான். நீ கௌமோதகீ என்ற கதையால் அவனைக் கொன்றாய். சிசுபாலனைப் போல அவனும் உன்னுடன் ஐக்கியமானான். முற்பிறவியில் உன்னிடத்திலேயே மனதைச் செலுத்திய எல்லாருக்கும் மோக்ஷம் அளிப்பதற்காகவே இந்த அவதாரம் எடுத்திருக்கிறாய்.
4. நீ துவாரகை சென்றதும், கௌரவர்களின் சபையில்,
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே சூதாட்டம் நடந்தது. (பாண்டவர்கள் தங்கள் சொத்துக்களை இழந்தனர். திரௌபதியையும் பணயமாக வைத்துத் தோற்றனர்). பலபேர் முன்னிலையில், துச்சாதனன் திரௌபதியின் தலைமுடியைப் பற்றி இழுத்து வந்து, துகிலுரித்து மானபங்கப்படுத்தினான். கதியற்ற திரௌபதி உன்னை
வேண்டிக் கதறி அழுதாள். நீ கணக்கிலடங்காத வஸ்திரங்கள் அளித்து அவளுக்கு உதவினாய். பாண்டவர்கள் காட்டில் வசிக்கும் போது, ஒரு நாள் அனைவரும் உண்டபின், துர்வாசர் தனது கூட்டத்தினருடன் உணவுண்ண வந்தார். உணவில்லாததால் திரௌபதி மிகவும் பயந்து உன்னைத் துதித்து வேண்டினாள். நீ பாத்திரத்தில்
ஒட்டிக்கொண்டு இருந்த கீரையைச் சாப்பிட்டு, முனிவருக்கும் அவருடன் வந்திருந்தவர்களுக்கும் உண்ட திருப்தி கிடைக்கச் செய்தாய்.
5. யுத்தம் செய்ய முடிவெடுக்கப் பட்டது. அர்ஜுனன் உன்னைத் துணையாகவும், துரியோதனன் உன் சைன்யத்தையும் விரும்பினர். அவ்வாறே அளித்துவிட்டு, ஹஸ்தினாபுரத்திற்கு
சமாதானத் தூது சென்றாய். பீஷ்மர், துரோணர் போன்றவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தாலும், துரியோதனன் ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கேயே உன் விஸ்வரூபத்தைக் காட்டி ஹஸ்தினாபுரத்தை நடுங்கச் செய்தாய். பிறகு துவாரகை சென்றாய்.
6. அர்ஜுனனின் தேரோட்டியாக வந்த நீ, யுத்தத்தின் துவக்கத்தில் தன்
உறவினர்களை வதம் செய்ய விரும்பாமல் மனம் வருந்திய அர்ஜுனனைக் கண்டாய். அவனுக்கு, “நண்பனே! ஆத்மா என்பது என்றும் அழிவில்லாதது. கொல்பவன், கொல்லப்படுகிறவன் என்பவர் இங்கே யார்? எனவே, கொல்வதைப் பற்றிய பயத்தை விட்டு, என்னிடத்தில் சரணடைந்து, நேர்மையான யுத்தத்தைச் செய்” என்று அவனுக்கு
உபதேசம் செய்து, அவனுக்கு விஸ்வரூபத்தைக் காட்டி, அவனைத் தன் நிலைமையை அடையச் செய்தாய்.
7. பூபாரத்தைப் போக்கும் தங்கள் நோக்கத்தில், உன் பக்தரான பீஷ்மர் ஒவ்வொரு நாளும் பதினாயிரம் அரசர்களை வதம் செய்தார். அர்ஜுனன் பீஷ்மரை எதிர்த்து மிகவும் சோர்வடைந்தான். அதைக் கண்ட நீ, போரில் ஆயுதம்
எடுப்பதில்லை என்ற உன் பிரதிக்ஞையை மீறி சுதர்சன சக்கரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கோபத்துடன் பீஷ்மரை நோக்கி ஓடினாய். உன்னைக் கண்டதும் பீஷ்மர் தலை வணங்கியதைக் கண்டு சந்தோஷித்து, அவரைத் தாக்காமல் திரும்பினாய்.
8. துரோணருடன் போர் புரிந்தபோது, நரகாசுரனின் பிள்ளையான பகதத்தன், நான்கு
தந்தமுள்ள யானைமீது ஏறிவந்து வைஷ்ணவாஸ்திரத்தை ஏவினான். அதை உன் மார்பில் தாங்கிக் கொண்டு அர்ஜுனனைக் காப்பாற்றினாய். உன் சக்ராயுதத்தால் சூரியனை மறைத்து, அர்ஜுனனைக் கொண்டு ஜயத்ரதனைக் கொன்றாய். கர்ணன் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஏவினான். நீ கால் கட்டைவிரலால் பூமியை அழுத்தி, அர்ஜுனனின்
கிரீடத்தை மட்டும் அறுக்கும்படி செய்தாய். பாண்டவர்களின் நலனுக்காக நீ எதைத்தான் செய்யவில்லை?
9. போர் ஆரம்பித்த போது தீர்த்தயாத்திரை சென்ற பலராமன், நைமிசாரண்யம் சென்றார். தன்னை மதிக்காத ஸூதபௌராணிகரைக் கொன்றார். அந்த ஸ்தானத்தில் அவருடைய மகனை நியமித்தார். பௌர்ணமி மற்றும் அமாவாசை
நாட்களில் யாகங்களுக்கு இடையூறு செய்த வல்வலன் என்ற அசுரனைக் கொன்றார். பின்னர், தீர்த்த யாத்திரையை முடித்துக் கொண்டு குருக்ஷேத்ரம் வந்தார். பீமனும் துரியோதனனும் நீண்ட சண்டை செய்வதைப் பார்த்து துவாரகைக்குச் சென்றார்.
10. துரோணரின் மகனான அஸ்வத்தாமன், தூங்கிக் கொண்டிருந்த திரௌபதியின்
பிள்ளைகளைக் கொன்று விட்டான். உன் உத்தரவின் பேரில் அர்ஜுனன் அவன் மீது விடுத்த பிரம்மாஸ்திரம், அவனுடைய சிரோமணியைத் துன்புறுத்தித் திரும்பி வந்தது. அஸ்வத்தாமன், பாண்டவ வம்சத்தை வேரோடு அழிக்க, மீண்டும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது, அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்ப்பத்தில்
இருந்த சிசுவை எரிக்கத் தொடங்கியது. நீ கட்டைவிரல் அளவுள்ள உருவமெடுத்து சுதர்சன சக்கரத்துடன் உத்தரையின் கருப்பைக்குள் பிரவேசித்து அந்த சிசுவைக் காத்தாய்.
11. விரும்பிய நேரத்தில் மரணத்தை அடையும் சக்தியைப் பெற்ற பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு அனைத்து தர்மங்களையும் உபதேசித்தார். தீவிரமான
பக்தியுடன் உன்னையே பார்த்துக் கொண்டு மோக்ஷத்தை அடைந்தார். பின்னர், யுதிஷ்டிரர் மூன்று அஸ்வமேத யாகங்களைச் செய்யத் துணை புரிந்து, அவரது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து, துவாரகை திரும்பினாய். குருவாயூரப்பனே! எல்லா வியாதிகளில் இருந்தும் என்னைக் காத்து அருள் புரிய வேண்டும்.
#தசகம்_87
குசேலோபாக்யானம்
1. ஸாந்தீபனி முனிவரிடம் நீ குருகுலம் பயின்றபோது, குசேலர் என்ற பிராமணர் உன்னுடன் பயின்றார். கிருஹஸ்தனான அவர் உன் ஒருவரிடத்திலேயே பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார்.
2. அவருடைய மனைவியும் அவரைப்
போன்ற குணங்கள் உள்ளவளாய் இருந்தாள். ஆனால் ஆசையற்ற நிலையை அடையவில்லை. ஒரு நாள் அவள் தன் கணவரிடம், லக்ஷ்மீபதியான கிருஷ்ணர் உங்கள் நண்பரல்லவா? வாழ்வதற்குப் பொருளைப் பெற ஏன் அவரை அணுகக்கூடாது? என்று கேட்டாள்.
3. பசியின் துன்பத்தாலேயே அவள் அவ்வாறு கூறினாள். செல்வம் கர்வத்தை உண்டாக்கி
வாழ்க்கையைக் குலைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தாலும், உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால், தனது வஸ்திரத்தின் நுனியில் ஒரு பிடி அவலை முடிந்து கொண்டு, உனக்குக் காணிக்கையாய் எடுத்துச் சென்றார்.
4. ஆச்சர்யம் மிக்க உன் நகரத்தை அடைந்தார். உன் மாளிகைக்குள் நுழைந்ததும் வைகுண்டத்தில்
இருப்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். நீ அவரை வரவேற்று உபசரித்ததும் விளக்கமுடியாத ஆனந்தமடைந்தார்.
5. அன்புடன் வரவேற்கப்பட்ட அவருக்கு உன் மனைவி விசிறி வீசினாள். நீ அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு குருகுலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தாய். குருபத்தினிக்கு விறகு கொண்டு வர
காட்டுக்குச் சென்றபோது மழையில் நனைந்ததைப் பற்றிப் பேசினாய்.
6. கொண்டு வந்த அவலைக் கொடுக்க வெட்கப்பட்டுத் தயங்கிய குசேலரிடமிருந்து கட்டாயப்படுத்தி அவலை வாங்கி ஒரு பிடியை உண்டாய். இரண்டாவது பிடியை எடுத்ததும், “போதும், போதும்” என்று மகாலக்ஷ்மியான ருக்மிணி உன் கையைப் பிடித்துத்
தடுத்தாள். (இதற்குமேல் உண்டால் அவர்களுக்குக் கொடுப்பதற்குப் பொருள் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்).
7. பக்தர்களுக்கு அடியவனான உன்னால் குசேலர் மிகவும் உபசரிக்கப்பட்டு, மிகவும் மகிழ்ச்சியுடன் அன்று இரவு உன்னுடன் தங்கினார். மறுநாள் பொருள் எதுவும் பெறாமல் தன் ஊருக்குத் திரும்பினார். நீ
பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்யும் விதமே மிக ஆச்சர்யமாகும்!
8. பொருள் வேண்டும் என்று கேட்டிருந்தால் பகவான் கொடுத்திருப்பார். மனைவியிடம் எவ்வாறு சொல்வது என்று வழிநெடுக யோசித்துக் கொண்டே சென்றார். அவரது மனம் முழுக்க உன் புன்னகையும், பேச்சுக்களுமே நிறைந்திருந்தன. அப்போது அவர் பிரகாசம்
மிக்க ரத்தினங்களால் விளங்கும் ஒரு மாளிகையை அடைந்தார்.
9. க்ஷணநேரம் வழி தவறி வந்து விட்டோமோ என்று திகைத்து, பின்னர் வீட்டினுள் நுழைந்தார். உள்ளே தோழிகள் சூழ, ரத்தினங்களாலும், தங்கத்தினாலும் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கும் தன் மனைவியைக் கண்டார். உன் கருணை மிக அற்புதமானது, ஆச்சர்யமானது
என்று அறிந்தார்.
10. ரத்னமயமான மாளிகையில் வசித்துக் கொண்டு இருந்தாலும் அவர் உன்னிடமே மனத்தைச் செலுத்தி மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தார். பக்தர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றும் குருவாயூரப்பனே! என் வியாதிகளைப் போக்கி அருள வேண்டும்.
#தசகம்_88
ஸந்தானகோபாலம்
1. தங்கள் குரு சாந்தீபனியின் இறந்த குழந்தைகளைப் பிழைக்கச் செய்து குருதக்ஷிணையாகத் நீ கொடுத்ததைக் கேட்ட தேவகி, தன் இறந்த ஆறு குழந்தைகளையும் பார்க்க விரும்பினாள். அதைக் கேட்ட நீ ஸுதல லோகத்திற்குச் சென்றாய். மகாபலி உன்னை வரவேற்றுப் பூஜித்தான். மரீசியின்
பிள்ளைகள், பிரும்மதேவரின் சாபத்தால், ஹிரண்யகசிபுவிற்குப் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். அவர்களே வசுதேவரின் மூலம் தேவகிக்கு பிள்ளைகளாகப் பிறந்தபோது கம்ஸன் அவர்களைக் கொன்றான். அவர்களை ஸுதலலோகத்திலிருந்து அழைத்து வந்து தேவகியிடம் காட்டிப் பின்னர் வைகுண்டத்திற்கு அனுப்பினாய்.
2. பக்தியில் சிறந்த ஸ்ருததேவன் என்ற அந்தணரையும், பஹுலாஸ்வன் என்ற அரசனையும் ஒரே சமயத்தில் அனுக்ரஹம் செய்ய விரும்பி, முனிவர்களுடன் மிதிலைக்குச் சென்றாய்.
3. ஒரே மாதிரியான இரண்டு உருவங்கள் எடுத்துக்கொண்டு ஒரே சமயத்தில் அவர்கள் இருவர் வீட்டிற்கும் சென்றாய். அரசன் விலையுயர்ந்த
பொருட்களாலும், அந்தணன் அன்றைய தினம் பெறப்பட்ட பழங்கள், அன்னம் முதலியவற்றாலும் பூஜித்தனர். இரண்டையும் சமமாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு மோக்ஷம் அளித்தாய்.
4. துவாரகையில் ஒரு பிராமணனுக்குக் குழந்தைகள் பிறந்து பின் இறந்தன. அழுது புலம்பிய தந்தையிடம் விதியை யாராலும் தடுக்க முடியாது
என்று உலகத்திற்கே நாயகனான நீ கூறினாய். அர்ஜுனனுடைய கர்வத்தையும், உன்னை சாதாரண மனிதன் என்று நினைத்த அவனது எண்ணத்தையும் போக்கவே அவ்வாறு செய்தாய். அவனுக்கு நீ ஸ்தானமான வைகுண்டத்தைக் காட்டி, உன் பரமாத்ம ஸ்வரூபம் என்ற எண்ணத்தை அவனுக்கு அளித்தாய்.
5. இவ்வாறு அந்த பிராமணனுக்கு எட்டுக்
குழந்தைகள் இறந்தும் நீ எந்த உதவியும் செய்யவில்லை என்று மக்கள் பேசினார்கள். அப்போது துவாரகைக்கு அர்ஜுனன் வந்தான். அந்நேரத்தில், அந்த பிராமணனுக்கு ஒன்பதாவது குழந்தையும் பிறந்து இறந்ததால் அவன் அழுது அரற்றினான். அதைக்கேட்ட அர்ஜுனன், “இறந்த குழந்தைகளை மீட்டு வருவேன், இல்லாவிடில்
தீயில் விழுந்து உயிர் துறப்பேன்” என்று சபதம் செய்தான்.
6. அந்த பிராமணனுக்குப் பத்தாவது குழந்தை பிறக்க இருக்கும் சமயம், அர்ஜுனன் உன்னிடம் ஏதும் சொல்லாமல், அந்த பிராமணனுடைய வீட்டிற்குச் சென்று, பிரசவ அறையைச் சுற்றி பெரிய அஸ்திரங்களாலும், அம்புகளாலும் பாதுகாப்புச் சுவர் எழுப்பினான்.
ஆனால் குழந்தை பிறந்து இறந்ததுமில்லாமல் அதனுடைய உடலும் காணாமல் போனது. தனது யோக சக்தியால் அர்ஜுனன், யமலோகம், இந்திரலோகம், தேவலோகம் ஆகிய எல்லா உலகங்களிலும் தேடியும் அக்குழந்தை கிடைக்கவில்லை. அதனால் சபதம் செய்தபடி தீயில் விழ முற்பட்டபோது, நீ புன்முறுவலுடன் அவனைத் தடுத்தாய்.
7. தேரில் ஏறி அர்ஜுனனுடன் வேகமாய் மேற்கு திசையை நோக்கிச் சென்றாய். லோகாலோகம் என்ற மலையைத் தாண்டி இருளாக இருந்தது. சக்ராயுதத்தின் ஒளியால் அந்த இருளைப் போக்கினாய். அந்த ஒளியைப் பார்க்க முடியாத அர்ஜுனனுக்கு, காரண ஜலத்திற்கப்பால், அக்ஞானம் என்னும் இருளால் பாதிக்கப்படாததும், விவரிக்க
முடியாததுமான உன் இருப்பிடமான வைகுண்டத்தைக் காட்டினாய்.
8. ஆதிசேஷன் மேல் அமர்ந்திருப்பவரும், தெய்வீகமான ஆபரணங்கள் அணிந்தவரும், தெய்வீகமான ஆயுதங்கள் ஏந்தியவரும், மஞ்சள் பட்டாடை அணிந்தவரும், மகாலக்ஷ்மியைத் தன் மார்பில் தாங்கியிருப்பவரும், கார்மேகம் போன்ற நீல வண்ணத்துடன் காட்சி
அளிப்பவரும், மும்மூர்த்திகளுக்கும் மேலானவரும், வேதங்களின் ஸாரமாகவும், பரமபுருஷனாகவும் இருக்கும் உன்னையே அங்கு கண்டு, நண்பனான அர்ஜுனனுடன் சேர்ந்து நீயும் நமஸ்காரம் செய்தாய்.
9. ஆற்றல் மிக்க ஒன்றாகவும், அதனுள்ளே மறைந்திருக்கும் மற்றொன்றாகவும் (பரமாத்மாவாகவும், ஜீவாத்மாவாகவும்)
இரண்டாகப் பிரிந்து இருவேறு உருவங்களுடன் இருக்கும் உங்கள் இருவரையும் ஒன்றாகக் காண வேண்டும் என்பதற்காக நானே பிராமணக் குழந்தைகளை எடுத்துக் கொண்டேன். அவர்களை எடுத்துச் செல்லுங்கள் என்று வைகுண்டத்தில் காணப்பட்ட பகவான் கூறினார். உடனே அர்ஜுனன் உன் மகிமையைப் புகழ்ந்து பாடினான். பிறகு,
அக்குழந்தைகளையும் எடுத்து வந்து பிராமணரிடம் கொடுத்தாய்.
10. இவ்வாறு பலவிதமான லீலைகளால் உலகத்தை மகிழ்வித்தும், வ்ருஷ்ணி வம்சத்தைப் பேணிக் காத்தும், பல யாகங்களைச் செய்து கொண்டும், நிகரேதும் இல்லாத விளையாட்டுக்களால் பெண்களை மகிழ்வித்துக் கொண்டும் விளங்கினாய். பூர்ணப்ரம்மமாகிய நீ,
பூபாரத்தைப் போக்கும் காரியத்தில், உன் தாமரை போன்ற பாதங்களை அண்டியவர்களுக்கு முக்தி அளித்து, யாதவர்களிடையே மனித வடிவில் தோன்றிப் பிரகாசித்தாய்.
11. உன் வழிபாட்டில் மூழ்கிய நாரதர் பெரும்பாலும் துவாரகையிலேயே தங்கியிருந்தார். அப்போது, பெருமைக்குரிய உன் தந்தை வசுதேவர், அவரிடமிருந்து
ஆத்ம ஞானத்தைப் பெற்றார். அறிவில் சிறந்தவரும், பக்தர்களுக்குள் முதன்மை ஆனவருமான உத்தவர் உன்னிடம் இருந்து தத்துவ ஞானத்தைப் பெற்றார். உலக நன்மைக்காக இன்றும் உத்தவர் பத்ரியில் வசிக்கிறார் என்று நம்பப்படுகிறது.
12. மேன்மை மிகுந்த இந்த கிருஷ்ணாவதாரம் தனித்தன்மையுடன் விளங்குகிறது.
நட்பு, பயம், அன்பு, காதல், வெறுப்பு, இணைப்பு போன்ற பல வழிவகைகள் மூலம் மக்கள் எல்லா துக்கங்களையும் போக்கிக் கொண்டு உலக பந்தங்களிலிருந்து விடுவிக்கப் பட்டார்கள். குருவாயூரப்பா! உலகின் கவலைகளை நீக்கி, அடியேனும் முழு பக்தி பெற வகை செய்தருளிக் காக்க வேண்டும்.
#தசகம்_89
வ்ருகாசுரன் கதை, ப்ருகுவை சோதித்தல்
1. லக்ஷ்மியின் நாயகனே! இவ்வுலகத்தில் உன் பக்தர்களுக்கு எளிதில் ஐஸ்வர்யம் கிடைப்பதில்லை. ஏனெனில் செல்வங்களால் அகங்காரம் உண்டாகிறது என்பதால் அவ்வாறு செய்கிறாய் போலும். இந்திரியங்களை அடக்கும் மனநிலையைத் தந்து, பிறகு அவர்களுடைய
விருப்பங்களைப் பூர்த்தி செய்கின்றாய். அந்த மனநிலையை ஏற்கெனவே பெற்றவர்களுக்கு உடனேயே அனுக்ரஹம் செய்கின்றாய். உன் பக்தர்களுக்கு வீழ்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
2. விரைவில் சந்தோஷத்தையும், கோபத்தையும் அடையும் பிரம்மா, பரமசிவன் முதலியோரை, மக்கள் தங்கள் சொந்த இயல்புக்கு ஏற்ப
வழிபடுகின்றனர். அந்தோ! அவர்கள் குறுகிய நோக்கத்தில் வீழ்ந்து விடுகின்றனர். இதற்கு வ்ருகாசுரனே தெளிவான உதாரணம்.
3. சகுனியின் பிள்ளையான வ்ருகாசுரன், எளிதில் மகிழும் தெய்வம் யார் என்று நாரதரிடம் கேட்டான். அவரும் பரமசிவனை வணங்கும்படி உபதேசித்தார். தீய எண்ணம் கொண்ட மக்களை நீ ஆதரிக்க
மட்டாய் என்பதால் தீயவனான அவனிடம் அவ்வாறு உபதேசித்தார்.
4. கடுமையான தவம் செய்த வ்ருகாசுரன், சிவனைக் காணாததால் ஏழாவது நாளன்று கோபத்துடன் தனது தலையைத் துண்டித்துக் கொள்ள முயன்றபோது, பரமசிவன் அவன் முன் தோன்றினார். அசுரன், யார் தலையில் நான் கை வைக்கிறேனோ, அவன் உடனே சாம்பலாகிவிட
வேண்டும் என்ற நீச்சமான, பயங்கரமான வரத்தைக் கேட்டான். உன்னிடம் பக்தி இல்லாதவர்களுக்கு எவ்வாறு நல்லறிவு உண்டாகும்?
5. அந்த வ்ருகாசுரன், கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட சிங்கம் விடுவித்தவனையே துரத்துவது போல சிவனிடமே அந்த வரத்தை சோதிக்க நினைத்தான். சிவனும் அசுரனிடத்தில் பயந்து,
திரும்பிப் பார்த்துக் கொண்டே எல்லா திக்குகளிலும் ஓடினார். எல்லா உலகங்களுக்கும் ஓடினார். பின்னர் வைகுண்டத்திற்குச் செல்ல நினைத்தார். அதைக் கண்ட நீ, அசுரன் வெகுதூரத்தில் வரும்போது ஒரு சாமர்த்தியமான பிரம்மச்சாரி வேடம் பூண்டு நினறாய்.
6. அவன் உன்னிடம் வந்ததும் அவனிடம், அந்தப்
பிசாசின் பேச்சைக் கேட்டு ஏன் அலைகின்றாய்? சந்தேகமிருந்தால் உன் தலையிலேயே கை வைத்து ஏன் பார்க்கவில்லை? என்று கூறினாய். அந்த வார்த்தைகளில் மயங்கிய அவன் தன் தலையில் கை வைத்துக் கொண்டு வேரற்ற மரம் போல, சாம்பலாகிக் கீழே விழுந்தான். இவ்வாறு மற்ற தெய்வங்களை வணங்குவோருக்கு வீழ்ச்சி உண்டு
பரமசிவனுக்கும் கூட இறுதியில் அடைக்கலம் அளிப்பவர் நீ தான்.
7. ஒரு சமயம், சரஸ்வதி நதிக் கரையில் வசித்த முனிவர்கள், மும்மூர்த்திகளில் யாரிடம் ஸத்வ குணம் இருக்கிறது என்று அறிய பிருகு முனிவரை அனுப்பினார்கள். பிரம்மலோகம் சென்ற பிருகு, பிரம்மாவிற்கு நமஸ்காரம் செய்யவில்லை. அதைக் கண்ட
பிரம்மா கோபமடைந்தார். ஆயினும், கோபத்தை அடக்கிக் கொண்டார். பின்னர் பிருகு கைலாசம் சென்று அவ்வாறே நடந்து கொண்டார். சிவன் கோபம் கொண்டு அவரைக் கொல்ல முயல, பார்வதிதேவி அதைத் தடுத்தாள். பிறகு, பிருகு உன்னிடம் வந்தார்.
8. தாமரைக் கண்ணனான நீ மஹா லக்ஷ்மியின் மடியில் தலைவைத்து உறங்கிக்
கொண்டிரந்தாய். பிருகு உன்னைக் காலால் எட்டி உதைத்தார். நீ உடனே எழுந்து மன்னிப்பு கேட்டு, அவரது கால் அடையாளக் குறி எப்போதும் உன் மார்பின் மீது அலங்காரமாக இருக்க வேண்டும் என்று கூறினாய்.
9. பிருகு முனிவர் இதை சரஸ்வதி நதிக்கரையில் உள்ள முனிவர்களிடம் கூறியதும் அவர்கள் நீயே ஸத்வ குணம்
நிரம்பியவர் என்று அறிந்து உன்னிடத்திலேயே அசையாத பக்தி கொண்டு மோக்ஷமடைந்தனர். அச்சுதனே! குறையொன்றும் இல்லாத ஸத்வகுணம் நிரம்பிய உன்னை நாங்கள் வணங்குகிறோம்.
10. அரசர்களின் சபையில் துதிபாடும் இசைவாணர்களைப் போல், படைப்பின் ஆரம்பத்தில் வேதங்கள் உன்னைத் துதித்தன. நீ சச்சிதானந்த
ரூபமாகவும், அத்வைத ரூபமாகவும், பரமாத்மாவாகவும் இருப்பவன். கோபிகைகளுடைய நல்வினையின் குவியல். என்னுடைய எல்லா துக்கங்களையும் போக்கி அருளத் உன்னையே வேண்டுகிறேன்.
#தசகம்_90
விஷ்ணுவின் மகத்துவம்
1. வ்ருகாசுரன், பிருகு, அம்பரீஷன், மோஹினி ஆகியோருடைய சரித்திரத்தின் மூலம், பிரம்மா, பரமசிவன், தேவர்கள் ஆகியோரைவிட உன் மகத்துவம் மேலானது என்று விளங்குகிறது. பரமாத்மாவே! பூர்ணப்ரும்மமான இறைவனின் வடிவங்களான பிரும்மா, விஷ்ணு, சிவன் இவர்களிடத்தில்
இருந்து வேறுபடாமல், விவரிக்க முடியாததாய் உனது ஸ்வரூபம் பிரகாசிக்கிறது.
2. பிரம்மா, விஷ்ணு, சிவன், ஈஸ்வரன் சதாசிவம் என்று மூர்த்திகளை ஐந்து விதமாக பக்தர்கள் கூறுகின்றனர். சதாசிவமும் பரமாத்ம வடிவான நீயேயாகும். ஈஸ்வரனும் வைகுண்டத்தில் உள்ள நீயேயாகும். மூவுலங்களிலும் நீயே பிரம்மா,
விஷ்ணு, சிவன் என்ற மூன்று வடிவுடையவராக விளங்குகின்றாய்.
3. அந்த மும்மூர்த்திகளில், ஸத்வ குணம் நிறைந்த உன்னை விஷ்ணு என்றும், சிறிது ஸத்வ குணத்துடன் ரஜோ குணம் நிறைந்தவரை பிரம்மா என்றும், சத்வ குணம் நிறைந்திருந்தும் தமோ குணங்கள் கொண்ட செய்கை உடையவரை சங்கரன் என்றும் கூறுகின்றனர்.
4. மும்மூர்த்திகளைக் காட்டிலும் மேலானவராயும், யாவராயும் நீ விளங்குகின்றாய். உன்னையே சைவர்கள் வழிபடும் போது பரமேஸ்வரன் என்று கூறுகின்றனர். அதுவும் உன்னுடைய வடிவமே என்ற உண்மைக்குப் பல சான்றுகள் உள்ளன.
5. ஆதிசங்கரர் எல்லா வடிவங்களிலும் உன்னையே போற்றுகிறார். அவர் ஒரு சார்பாகப்
பேசுபவர் இல்லை. உன்னுடைய ஸஹஸ்ரநாமத்திற்கு விளக்க உரை செய்திருக்கிறார். உன்னைக் குறித்து ஸ்தோத்திரங்களையும் செய்து இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தவர்.
6. அவர், மந்திரங்களின் ஆரம்பத்தில், காயாம்பூ போன்று பிரகாசிப்பவர் ஆகவும், அனைத்திற்கும் ஈஸ்வரன் ஆகவும், மும்மூர்த்திகளுக்கும்
மேலானவராகவும் உன்னைக் கூறியுள்ளார். அவர், பிரணவத்தைப் பற்றிக் கூறும்போது நிர்க்குணமான பிரம்மத்தின் தியானம் பற்றி விவரித்து, அதற்கு உண்மைப் பொருளாகக் கல்யாண குணங்களுடன் கூடிய உன்னையே கூறினார். வேறு எந்த தெய்வத்தையும் அவர் கூறவில்லை.
7. புராணங்களின் சாரத்தைக் கூறும் புராண
ஸங்க்ரஹம் என்னும் நூலில் உன் மகத்துவமே கூறப்பட்டிருக்கிறது. மும்மூர்த்திகள் வசிக்கும் ஸத்யலோகத்தை விட உயர்ந்ததாக உன் வைகுண்டம் விவரிக்கப் படுகிறது. சிவலோகத்தைப் பற்றிக் கூறவில்லை.
8. பிரம்ம கல்பத்தின் ஆரம்பத்தில், பிரம்மாவிற்குத் நீ வடிவத்தைப் பிரத்யக்ஷமாகக் காட்டினாய்.
சிவபக்தரான ஸ்ரீ மாதவாச்சாரியார், புராணஸாரம் என்ற தமது நூலில் அந்த வடிவத்திற்கே விஷ்ணு, சிவன் முதலிய பெயர் என்று கூறி இருக்கிறார்.
9. தன் சொந்த இயல்புக்கு ஏற்ப, சிவனிடம் தன்னை அர்ப்பணித்து பக்தியுடன் வழிபடுவோருக்கு அதற்குரிய பலன் கிடைக்கிறது. அதனால், வியாசர் ஸ்காந்தம் முதலிய
புராணங்களில் சிவனைப் பற்றிப் பெருமையாகக் கூறி உன்னை சிறுமைப்படுத்திக் கூறினார்.
10. அர்த்தவாதம் மூன்று வகைப்படும். உண்மைகளை உள்ளபடி கூறுவது, அனுபவத்திற்கு ஏற்பப் புகழ்ந்து துதிப்பது, வேண்டாதவற்றை நிந்தித்து, முரணாகப் பேசுவது. ஸ்காந்தத்தில் உன்னைக் குறைவாகக் கூறியது மூன்றாவது
வகையாகும். அது உண்மையல்ல.
11. பிரபுவே! அறிவற்ற நான் கூறியதும்கூட மந்திர சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டவையே. வியாசரின் பாகவதத்தில் போற்றிப் புகழப்பட்ட பரமாத்மாவே! என் துக்கங்களைப் போக்கி, வியாதிகளை ஒழித்து, எனக்கு உறுதியான பக்தி கிடைக்க அருள வேண்டும்.
#தசகம்_91
பக்தி மார்க்கம்
இந்த தசகத்தைப் படிப்பதால் அனைத்து பாபங்களும் விலகி, வைராக்யமும் திடமான பக்தியும் உண்டாகும்.
1. தேவதேவனே! அனைத்து உயிரினங்களின் உயிரே! கிருஷ்ணா! பொய்யான இந்த சரீரத்தில் ஆசை வைத்து அல்லல்பட்டு மரண பயத்தை அடையும் ஒருவனுக்கு, உமது திருவடிகளை அடைக்கலம்
அடைந்து பணி செய்வதே பயத்தைப் போக்கக் கூடியது என்று நம்புகிறேன். நீ உபதேசித்த முறைகளில் வழிபடுபவன், கண்ணை மூடியபடி சென்றாலும், அவன் பக்தி நிலையில் தவறுவதில்லை.
2. எங்கும் நிறைந்த பரம்பொருளே! உன் சக்தியினால் என் மனம் தூண்டப்படுகிறது. என் உடல், வாக்கு, மனம் இவைகளால் செய்யும்
அனைத்தையும் உன்னிடம் அர்ப்பணிக்கிறேன். உன்னிடத்தில் தனது செயல், வாக்கு, இந்திரியங்கள், பிராணன், மனம் ஆகியவற்றை அர்ப்பணம் செய்தவன், பிறப்பால் நீசனாக இருந்தாலும் உலகத்தையே புனிதப்படுத்துகிறான். உன் திருவடிகளில் பக்தி இல்லாதவன் அந்தணனாக இருந்தாலும் உலகைப் புனிதப்படுத்துவதில்லை.
3. பயமானது தன்னிடத்திலிருந்து விலகியுள்ள மற்றொரு இடத்தில் இருந்து உண்டாகிறது. அந்த மற்றொரு இடமும் மனத்தின் கற்பனையே ஆகும். காரியம், காரணம் இரண்டும் ஒன்றே என்பதை மனத்தில் நிறுத்தி, நிச்சய புத்தியுடன் சிந்திப்பேன். ஒருமுறை மாயையால் கவரப்பட்டவன், மனதைக் கட்டுப்படுத்தினாலும் முன்போல்
சிந்திப்பதில்லை. எனவே, ஈசனே! மாயைக்கு அதிபதியான உன்னை எப்பொழுதும் பக்தியுடன் வணங்கி, என் அனைத்து பயங்களையும் விடுவேன்.
4. இந்த உலகில் செல்வம் உள்ளவனோடு சேர்ந்தால் செல்வம் பெருகுவதைப் போல், உன் திருவடிகளை வணங்குபவரோடு சேர்ந்தால் பக்தி பெருகுகிறது. தேவனே! அடியேனுக்கும் உன்
அடியவர்களின் சேர்க்கை கிடைக்க வேண்டும். அவர்கள் கூறும் உன் மகிமைகளால், அனைத்து பாபங்களையும் போக்கக் கூடிய உறுதியான பக்தி எனக்கு உண்டாக வேண்டும்.
5. மோக்ஷத்தை அடையும் வழிகளில் பக்தி மார்க்கத்தில் மிகவும் விருப்பமுடையவனாக நான் ஆக வேண்டும். உன் லீலைகளையும், நாமங்களையும் ஆர்வத்துடன்
பாடி மனம் உருக வேண்டும். பாடிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், பைத்தியம் பிடித்தவன் போல் ஆடிக் கொண்டும் பற்றற்று நான் இருக்கக் கருணை புரிய வேண்டும்.
6. பஞ்சபூதங்களையும், அவற்றாலான உலகங்களையும், அவற்றில் வசிக்கும் பறவைகள், மீன்கள், விலங்குகள், மனிதர்கள் முதலியவற்றையும்,
நண்பர்களையும், பகைவர்களையும் உன் வடிவமென்று நான் வணங்க வேண்டும். லோகநாயகா! எப்போதும் உன்னை வணங்குவதால், உன் கருணையினால், எனக்கு உறுதியான பக்தி, வைராக்கியம், உண்மை அறிவு முதலியவை வேறு முயற்சிகள் இல்லாமலேயே கிடைக்கிறது.
7. என் மனம் எப்போதும் உன்னிடம் மூழ்கியிருப்பதால், பசி, தாகம்
இவற்றால் பாதிக்கப்படாமல், உன் திருவடியையே தியானித்துக் கொண்டு, பற்றற்று, விருப்பு, வெறுப்பு, இல்லாதவனாக இருக்க அருள வேண்டும். மாயையின் விளைவு என்னும் அறிவினால், சந்தோஷமும், துக்கமும் அற்றவனாக இருக்க அருள வேண்டும். உன் கால் நகங்களாகிற குளிர் நிலவின் ஒளியால் நானும் அமைதியான,
குளிர்ந்த மனத்துடன் இருக்க வேண்டும்.
8. உலகிலுள்ள அனைத்து உயிர்களிடத்தும் நீ ஐக்கியமாகி இருக்கிறாய் என்ற அறிவும், தகுதியும் எனக்கு இல்லையெனில், உன் அடியார்களிடத்தில் நேசமும், உன்னை அறியாதவர்களிடத்தில் கருணையும், பகைவர்களிடத்தில் வெறுப்பும் எனக்கு உண்டாக வேண்டும். அதற்கும் தகுதி
இல்லாவிடில், உன் விக்ரகத்தைப் பூஜை செய்ய ஆர்வம் உண்டாக வேண்டும். அவ்வாறு செய்வதால் பக்தர்களில் சிறந்தவனாக விளங்கும் பேறு தாமதமில்லாமல் கிடைக்கிறது.
9. ஜகன்னாதா! உன் மாயை, உன்னுடைய உண்மையான உருவத்தை மறைத்து, பூமி, நீர், காற்று என்று மாறித் தோன்றும்படி செய்கிறது. வினைப்பயனால்
ஜீவாத்மாக்களைத் துன்பமென்னும் வலையில் தள்ளுகிறது. அந்த மாயை என்னைக் கீழ்ப்படுத்தாமல் இருக்க வேண்டும். உன் திருவடிகளில் பக்தியுடன் இருப்பதால் மட்டுமே அந்த மாயையை அழிக்க முடியுமென்று பிரபுத்தன் என்ற யோகி விதேக மன்னனிடம் கூறியுள்ளார்.
10. உயிர்களுக்கு உண்டாகும் துன்பத்தைக் கண்டு
எனக்கு விவேகம் ஏற்பட வேண்டும். அதனால் சிறந்த குருவை அடைந்து, அவர் மூலம் உன் உண்மை வடிவத்தை அறிந்துகொள்ள வேண்டும். உன் கல்யாண குணங்களையும், சரித்திரங்களையும் பாடி, பக்தி பெருகி, மாயையைக் கடக்க வேண்டும். உன் திருவடியில் சரணடைந்து வணங்கி ஆனந்தமடைய வேண்டும். இதுவே, அம்மாயையை வெல்லும்
முயற்சியின் ஆரம்பமாகும். குருவாயூரப்பா! என்னுடைய நோய்களைப் போக்கியருள வேண்டும்.
#தசகம்_92
கர்மம் கலந்த பக்தி
1. செயல்களை, பற்றற்று, பலனில் விருப்பமின்றி செய்யவேண்டும் என்று வேதம் கூறுகிறது. அதனால் நான், பலனை எதிர்பார்க்காமல் வேதம் கூறிய செயல்களைச் செய்து, அவற்றை உன்னிடமே அர்ப்பணித்து ஞானத்தை அடையவேண்டும். வேதத்தால் புறக்கணிக்கப்பட்ட எந்த செயலிலும் என் மனம்
வாக்கு செல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு விலக்கப்பட்ட ஏதாவது செயலை நான் செய்ய நேர்ந்தால், அதையும் உன்னிடமே சமர்ப்பித்து விடுவேன்.
2. பிரபுவே! உன்னைத் தொழுவதும் ஒரு வகையான கர்மயோகம் ஆகும். அழகானதும், ஸத்வ வடிவானதும் ஆன ஒரு மூர்த்தியைக் கல்லிலோ, மண்ணிலோ, மனதிலோ தியானம் செய்து,
சக்திக்குத் தகுந்தபடி பரிசுத்தமான சந்தனம் முதலிய வாசனைப் பொருட்களாலும், பூக்களாலும் தினமும் பூஜை செய்து, உன் அருளை அடைய வேண்டும்.
3. பெண்களும் மற்றும் சிலரும் அறியாமையினால் உன் கதைகளைக் கேட்காமல் இருக்கின்றார்கள். அவர்கள் இரக்கத்திற்குரியவர்கள். ஆனால், உயர்குலத்தில் பிறந்து உன்
திருவடிகளை அடைந்தும் அமைதி அற்றவர்களாய் இருப்பவர்களைக் குறித்து வருந்துகிறேன். பிழைப்பிற்காக யாகம் செய்து கொண்டு, பலமுறை உன் பெருமைகளை பற்றிக் கேட்டிருந்தும் உன் பெருமைகளில் நாட்டம் இல்லாமல், படிப்பால் கர்வம் கொண்டு இருப்பதால் அவர்கள் தவறுகள் செய்கின்றனர். நீ, அவர்களைப் போல்
என்னைச் செய்துவிடாமல் இருக்க வேண்டுகிறேன்.
4. பக்தியற்ற சிலர் உன் பக்தர்களை நிந்திக்கின்றனர். இவன் செய்த பாவங்களை மறைக்க ‘கிருஷ்ணா, ராமா’ என்று கூறுகிறான். வெட்கமற்ற இவன் பிதற்றல்களால் நான் பல விஷயங்களைச் சொல்ல முடியவில்லை. வீண் பொழுது போக்கும் என் சகோதரன் விஷ்ணுவை வழிபடுகிறான்
என்று உண்மையான பக்தர்களைப் பரிகாசம் செய்து சிரிக்கின்றனர். அவர்களைப் போல் என்னைச் செய்துவிடாமல் இருக்க வேண்டுகிறேன்.
5. கிருத யுகத்தில், ஒளி பொருந்திய வெண்ணிறத்தில் உள்ள பிரும்மச்சாரியின் வடிவுடைய உன்னை, மக்கள் தவங்கள் செய்து மகிழ்விக்கின்றனர். திரேதா யுகத்தில், சிவப்பு நிறம்
கொண்ட யக்ஞ புருஷனாகப் பூஜிக்கின்றனர். துவாபர யுகத்தில், சங்கு சக்கரம் தரித்த நீலமேக ஸ்யாமளனாக வணங்குகின்றனர். கலியுகத்திலோ நீலவண்ணனாக உன்னை நாமசங்கீர்த்தனத்தால் வழிபடுகின்றனர்.
6. முரனை வென்ற முராரியே! இவ்வாறாகக் கலியுகம் மேன்மையுடன் விளங்குகிறது. கலியுகத்தில், சிரமமின்றி நாம
சங்கீர்த்தனத்தால் உம்மைத் தொழுவதால், உன் அருளை மக்கள் விரைவிலேயே அடைகிறார்கள். அதனாலேயே, மற்ற யுகங்களில் பிறந்தவர்கள் கூட மீண்டும் கலியுகத்தில் பிறக்க விரும்புகிறார்கள். யாவற்றையும் அளிப்பவனே! இக்கலியில் புண்ணியவசத்தால் பிறந்த எங்களை, விஷத்தைப் போன்ற இந்திரிய சுகங்களைக் காட்டி
ஏமாற்ற வேண்டாம்.
7. இக்கலியில் உன்னிடம் பக்தி கொண்டவர்கள் பலர் உள்ளனர். திராவிட தேசத்தில் இன்னும் அதிகமாக உள்ளனர். காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற ஆற்றின் கரைகளிலும், மேற்கு நோக்கி ஓடும் நதிகளின் கரைகளிலும் மிகவும் அதிகமாக இருக்கின்றனர். நானும் இந்தப் பகுதியில் பிறந்தவன். உன்னிடம்
சிறிதளவு பக்தி கொண்டிருக்கிறேன். ஹே கிருஷ்ணா! ஆசை என்னும் கயிற்றால் என்னைப் பிணைத்து என்னை ஏமாற்ற வேண்டாம். உன் மீது கொண்ட பக்தி முழுமையடையப் பிரார்த்திக்கிறேன்.
8. முன்னொரு சமயம், பரீக்ஷித் என்ற அரசன், தர்மத்திற்குத் தீங்கு செய்த கலி புருஷனைக் கொல்ல வாளை உருவினான். கலியிடம்
நற்குணங்கள் இருந்ததால் அவனைக் கொல்லாமல் விட்டான். இக்கலியுகத்தில் உனக்குச் செய்யும் தொண்டுகள் மிக விரைவிலேயே பலனை அளிக்கும். தீய செயல்கள் பலன் கொடுப்பதில்லை. கலிபுருஷன் உன்னுடைய பக்தர்களிடம் பயப்படுகிறான். அதனால் உன்னைத் தொழுவதற்கு முன்னரே, பக்தர்களுக்கு நோய் முதலியவற்றைக்
கொடுத்து, பக்தியைத் தடை செய்கிறான். அதற்காக மட்டும் நீ அவனைத் தண்டிக்க வேண்டும்.
9. பரமனே! இந்தக் கலியுகத்தில் அதிக முயற்சியின்றி உன் அருளைப் பெற்று முக்தி அளிக்கும் எட்டு வழிகளை முனிவர்கள் உபதேசித்து உள்ளனர். அவை, கங்கை, கீதை, காயத்ரி, துளசி, கோபிசந்தனம், ஸாளக்ராம பூஜை, ஏகாதசி,
உன் நாமமான அஷ்டாக்ஷரம் ஆகியவை. இந்த எட்டு விஷயங்களிலும் பற்றுள்ளவனாக என்னை ஆக்க வேண்டும்.
10. எங்கும் நிறைந்தவனே! எல்லாக் கர்மங்களையும் தொலைத்து உன்னிடம் சரணடைந்தவன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கடன்படுவதோ, பணி செய்வதோ இல்லை. நீ அவனது மனதில் குடிகொண்டு,
அவனது பாபங்களை முற்றிலுமாகப் போக்குகின்றீர். குருவாயூரப்பா! அதனால், என் பாபங்களினால் உண்டான எனது துன்பங்களைப் போக்கி, எனக்கு பக்தியை அளிக்க வேண்டும்.
#தசகம்_93
இருபத்து நான்கு குருக்கள்
1. உன் கருணையினால் உறவினர்களிடம் உள்ள பாசத்தை நான் விடவேண்டும். இவ்வுலகம் மாயை என்று உணர்ந்து, எல்லாவற்றையும் விலக்கி, உன்னிடத்திலேயே மனத்தை நிலை நிறுத்த வேண்டும். தவறான புரிதலினால் பேதங்கள் ஏற்படுகிறது. நல்லவை, கெட்டவை என்ற ஞானத்தால் விதி
அல்லது விதிவிலக்கு தோன்றுகிறது. உன்னிடத்தில் மனத்தை நிலை நிறுத்தியவனுக்கு விதி, விதிவிலக்கு என்ற வேறுபாடு எவ்வாறு தோன்றும்?
2. இவ்வுலகில் பசி, தாகம் இவற்றைத் தீர்த்துக் கொள்ள மட்டுமே பல பிராணிகள் வாழ்கின்றன. பகுத்தறிவு உள்ள மனிதன் அவற்றை விட உயர்ந்தவன் ஆகிறான். மனித பிறப்பு
உண்மையில் அரிது. மனிதன் தனக்குத் தானே நண்பனாகவும், பகைவனாகவும் இருக்கிறான். உன்னிடத்தில் பக்தி கொண்டு தனது துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் வழியை அறிபவன் தனக்குத் தானே நண்பனாகவும், அவ்வாறு இல்லாதவன் தனக்குத் தானே பகைவனாகவும் ஆகிறான்.
3. பரமனே! உன்னுடைய அருள் கிடைத்தால் உலகில் உள்ள
எதுதான் குருவாக ஆக முடியாது? அனைத்தையும் தாங்கி நிற்கும் இந்தப் பூமி பொறுமையாக இருக்கிறது. அந்தப் பொறுமையை நான் பூமாதேவியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஈசனே! வாயு பகவான் அனைத்து பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டாலும் பற்றற்று விளங்குகிறார். அவரிடமிருந்து பற்றற்ற தன்மையைக் கற்க
வேண்டும். எங்கும் பரவியிருந்தும் பாதிக்கப்படாமல் இருக்கும் ஆத்மாவைப் பற்றிய தன்மையை ஆகாயம் என்ற குருவிடமிருந்து கற்க வேண்டும்.
4. தண்ணீரைப் போல தெளிவாகவும், தூய்மையாகவும், இனிமையாகவும் நான் இருக்க வேண்டும். அக்னி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு களங்கமில்லாமல் இருப்பதைப் போல் நானும்
இருக்க வேண்டும். மரங்களில் அக்னி இருப்பதைப் போன்று எல்லா உயிர்களிலும் நான் இருப்பதாக அறிய வேண்டும். சந்திரனின் கலைகள் வளர்ந்து தேய்வதைப் போல், வளர்ச்சியும், தேய்வும் சரீரத்திற்கே, ஆத்மாவிற்கு இல்லை என்று அறிய வேண்டும். ஒரே சூரியன் தண்ணீரில் வெவ்வேறாகத் தோன்றுவது போல், ஒரே ஆத்மா
சரீரங்களில் வெவ்வேறாகத் தோன்றுகிறது என்று உணர வேண்டும்.
5. வேடனால் கொல்லப்பட்ட தன் மனைவியையும், குஞ்சுகளையும் நினைத்து சோகத்தினால் இறந்த மாடப் புறாவைப் போல் நான் ஆகக் கூடாது. மலைப்பாம்பைப் போல கிடைத்ததை உண்டு பசியைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். கடலைப் போல் கம்பீரமாக இருக்க
வேண்டும். தீயில் தானாகவே விழும் வீட்டில் பூச்சியைப் போல் பெண் மோகம் முதலிய அற்ப சுகங்களில் விழாமலிருக்க வேண்டும். பூக்களில் இருந்து தேனை மட்டும் சேகரிக்கும் வண்டைப் போல விஷயங்களின் சாரத்தை மட்டும் சேர்ப்பவனாக இருக்க வேண்டும். ஆனால் அவ்வண்டைப் போல் செல்வத்தை சேகரித்து அழியாமல்
இருக்க வேண்டும்.
6. ஈசனே! ஆண் யானை பெண் யானைக்குக் கட்டுப்படுவது போல பெண்களைக் கண்டு மோகம் அடையாமல் இருக்க வேண்டும். தேனீக்கள் தேனைச் சேர்த்து வைப்பது போல் அதிகமான பொருளைச் சேர்த்து வைக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில், தேனீ சேர்த்து வைத்த தேனை, தேன் எடுப்பவன் கவர்ந்து செல்வதுபோல,
சேமித்து வைத்த அப்பொருளை யாராவது கவர்ந்து செல்வார்கள். கீழ்த்தரமான பாட்டுக்களில் மயங்கும் மானைப் போல நான் மயங்காமல் இருக்க வேண்டும். உணவின் மீது உள்ள ஆசையால் தூண்டிலில் அகப்படும் மீனைப் போல உணவில் அதிக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும். பிங்களை என்பவளைப் போல் ஆசையில்லாமல் தூங்க
வேண்டும். குரரம் என்ற பறவை மூக்கில் இறைச்சியை வைத்துக் கொண்டிருந்ததால் மற்ற பறவைகளால் கொல்லப்பட்டது. அதைப் போல் பொருட்களில் ஆசை வைத்து நான் துன்பப்படாமல் இருக்க வேண்டும்.
7. சிறு குழந்தை, மரியாதை மற்றும் அவமதிப்பு உணர்வு இல்லாமல் இருப்பது போல் இருக்க வேண்டும். கன்னிப் பெண்ணின்
கையில் உள்ள ஒற்றை வளையல் போல வீண் பேச்சுக்களின் தொடர்பு இல்லாமல் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும். அம்பு தயாரிப்பவன், அரசன் வரும் அறிவிப்பை அறியாதது போல் உன்னையே நினைத்து வேறு ஒன்றையும் நினைக்காதிருக்க வேண்டும். எலிவளையில் பாம்பு குடியிருப்பது போல், எந்த வீட்டிலும் ஆசை வைக்காமல்,
பிறர் இல்லத்தில் வாழ வேண்டும்.
8. உன்னால் படைக்கப்பட்ட உலகம் உன்னிடத்திலேயே அடங்கி விடுகிறது என்பதை சிலந்திப் பூச்சியிடமிருந்து அறிந்து கொள்வேன். உன்னையே நினைத்திருப்பது உன்னுடைய வடிவத்தை அளிக்கிறது என்ற உறுதியான பாடத்தைக் குளவியிடம்
இருந்து கற்றுக் கொள்வேன். புழுக்களாகவும்,
சாம்பலாகவும் ஆகும் இந்த உடல் ஒரு சிறந்த குருவாக விளங்குகிறது. கவனமாக சிந்தனை செய்தால் இந்த உடல் ஞானத்தையும், வைராக்கியத்தையும் அளிக்கும். அதிலும் பல நோய்களால் பாதிக்கப் பட்ட என் உடலே எனக்குக் குருவாய் விரைவிலேயே வைராக்கியத்தை அளிக்கிறது.
9. குருவாயூரப்பனே! இந்த உடல் மீது கொண்ட
ஆசையால் வீடு, பொருள், மனைவி ஆகியவற்றில் மக்கள் பற்று வைத்து உன்னை மறக்கிறார்கள். அந்த உடல் இறுதியில் அக்னிக்கும், நாய்க்கும் இரையாகிறது. வாழும்போது கண், காது, தோல், நாக்கு போன்ற இந்திரியங்களால் அலைக்கழிக்கப் படுகிறது. அந்தோ! உன் தாமரைப் பாதங்களை உடலின் ஒரு இந்திரியமாவது நாடுவது
இல்லை.
10. தாமரைக் கண்ணனே! இந்த உடலில் வைத்த ஆசையைத் தவிர்க்க முடியாதெனில், என் வியாதிகளைப் போக்கி உன் திருவடித் தாமரையில் அசைக்க முடியாத உறுதியான பக்தியை அளிக்க வேண்டும். பல பிறவிகளுக்குப் பிறகு அடைந்த இந்த பிராம்மண சரீரத்தைக் கீழ்த்தரமான இந்திரிய சந்தோஷத்திற்குள் தள்ள வேண்டாம்.
குருவாயூரப்பா! என்னைக் காப்பாற்ற வேண்டும்.
#தசகம்_94
தத்வக்ஞான உற்பத்தி
1. பலனை விரும்பாமல் தர்மங்களைச் செய்பவர்கள், நல்ல குருவின் மூலம், ஐம்புலன்களில் இருந்து வேறுபட்டதும், எங்கும் வியாபித்து இருப்பதுமான உன் வடிவத்தை அறிகிறார்கள். பலவகை மரக் கட்டைகளில் தொடர்பு கொண்ட அக்னி எவ்வாறு சிறியது, பெரியது எனப் பலவகையாகத்
தோன்றுகிறதோ, அவ்வாறே பலவகைக் குணங்களால் செய்யப்பட்ட உடல்களின் சம்பந்தத்தால் பலவிதமாய்த் தோன்றுகின்றாய்.
2. குரு என்கிற அடி அரணிக் கட்டையும், சிஷ்யன் என்கிற மேல் அரணிக்கட்டையும் உரசுவதால், மிகத் தெளிவான ஞானம் என்னும் தீப்பொறி உண்டாகிறது. அந்தத் தீயால், கர்மங்களின் கூட்டம், அதனால்
உண்டான இந்த உடல், உலகம் என்னும் காடுகள் எரிக்கப்படுகிறது. எரிக்கப் பொருள் இல்லையெனில் ஞானமாகிற அந்தத் தீ அமைதியாய் அடங்குகின்றது. எஞ்சியுள்ள ஓர் நிலை உன் வடிவமாக இருக்கின்றது.
3. அனைத்து துக்கங்களையும் போக்கும் ஒரே வழி உன்னை அடைவது தான். ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்ட மருந்துகளோ,
ராஜநீதியில் சொல்லப்பட்ட வழிமுறைகளோ, தர்மநூல்களில் சொல்லப்பட்ட கர்மங்களோ, வேதத்தில் கூறப்பட்ட யோகங்களோ துன்பத்தைப் போக்கி மீண்டும் வராமல் தடுக்கும் சக்தியற்றவை. மற்ற வழிகளும் கடினமானவை. ஆயினும், அந்த வழிகளைப் பின்பற்றிப் பலனை அடைந்து, அதனால் செருக்கு அடைந்து, உன்னை மறந்து
விடுகின்றனர். வீழ்ச்சி ஏற்படும்போது அளவற்ற துன்பங்களை அடைகின்றனர்.
4. பத்மநாபா! உன் இருப்பிடமான வைகுண்டத்தைத் தவிர பயமற்ற உலகம் வேறில்லை. ஏனெனில், இரு பரார்த்தங்கள் முடிந்த பின்னும், பிரும்மன் பயத்தினால் ஸத்ய லோகத்தில் சுகமாய் வாழவில்லை. இவ்வாறிருக்க, அதர்மங்களைச் செய்து
நரகத்தில் இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? வரதனே! துன்பமடைந்தவர்களைக் காப்பவனே! கருணைக் கடலே! எனது பந்தங்களை அறுக்க வேண்டும்.
5. உண்மையில் உன்னிடத்தில் ஒன்றிவிட்டதால் எனக்கு பந்தமோ, மோக்ஷமோ கிடையாது. அவை உன் மாயையின் அம்சங்கள். கனவும், விழிப்பும் போன்றது. பந்தம் உள்ளவனுக்கும்,
ஜீவன்முக்தனுக்கும் உள்ள வேற்றுமை அவ்விதமானதுதான். பந்தமுள்ளவன், சரீரமென்னும் மரத்தில் இருந்து கொண்டு விஷய சுகங்களாகிற பழங்களை அனுபவிக்கிறான். ஜீவன்முக்தன் அவற்றில் ஈடுபடாமல் துக்கமற்றவனாய் இருக்கிறான்.
6. ஜீவன்முக்தனின் நிலை இதுதான் என்று கூறுவதால் என்ன பயன்? மனத்தூய்மை
இல்லாதவனுக்கு அந்நிலை கிடைக்காது. மனதை சுலபமாகத் தூய்மைப்படுத்துவது பக்தி ஒன்றே. விஷ்ணுவே! உன்னிடம் அனைத்தையும் அர்ப்பணிக்கும் திடமான பக்தியை அளிக்க வேண்டும். அந்தப் பக்தியால் குருவின் உபதேசம் பெற்று, தத்வக்ஞானத்தை அடைந்து, விரைவில் உன்னிடமே ஒன்றி விடுவேன்.
7. சிலர் வேதத்தைக்
கற்று அதிலேயே மூழ்கிய மனம் உடையவர்களாய் இருந்தாலும் உன்னை அறிவதில்லை. அவர்கள் கன்று போடாத மலட்டுப் பசுவைப் போல், வீண் முயற்சி செய்பவர்கள். கிருஷ்ணா! மனத்தைக் கவர்ந்து பாபங்களைப் போக்கும் உன் லீலைகளையும், சச்சிதானந்த ஸ்வரூபமான உன்னையும், உன் அவதாரங்களையும் பற்றிக் கூறாத அந்த
வார்த்தைகளின் பின்னால் நான் செல்லாமல் இருக்க வேண்டும்.
8. பரிபூரணனே! உன் வடிவம் என்ன? மகிமை எவ்வளவு? என்பதை நான் அறியேன். ஆனால் வேறொன்றையும் விரும்பாமல் உன்னையே பஜிக்கிறேன். சிசுபாலனின் எதிரியான கிருஷ்ணா! உன் அழகிய ரூபங்களையும், உன் பாதங்களையே அண்டியிருக்கும் பக்தர்களையும்
தரிசித்து, அவர்களோடு சேர வேண்டும். உன்னைப் போற்றிப் பாடி, நமஸ்கரித்து, உன் குணங்களையும் திருவிளையாடல்களையும் பேசிக் கொண்டு, உன்னிடத்தில் பற்று உள்ளவனாக நான் இருக்க வேண்டும்.
9. என் அனைத்துப் பொருட்களையும் உன்னிடமே அர்ப்பணிக்கிறேன். உனக்கே அடிமையாக இருப்பேன். உன் ஆலயத்தை சுத்தம்
செய்வது போன்ற தொண்டுகள் செய்வேன். சூரியன், அக்னி, பிராமணன், தன் ஹ்ருதயம், பசு ஆகியவற்றில் நான்கு கைகளுடன் விளங்கும் உன்னை ஆராதிப்பேன். அன்பினால் நனைந்த என் இதயம் இடைவிடாமல் பக்தி யோகத்தில் ஈடுபட வேண்டும்.
10. ஹே குருவாயூரப்பா! உன்னுடனான ஐக்கியம், தானம், ஹோமம், தவம், யோகம்
முதலியவற்றால் அடைய முடியாதது. புண்ணியசாலிகளான கோபிகைகள் உன்னுடன் ஐக்கியமானார்கள். பலர் உன்னிடம் பக்தியுடன் இருந்தும், கோபிகைகளின் பக்தியையே மிகவும் விரும்புகின்றாய். ஆகையால், உன்னிடம் உள்ள என் பக்தியானது உறுதியாக இருக்க அருள வேண்டும். கிருஷ்ணா! என் நோய்களைப் போக்க வேண்டும்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
