Muralitharan K Profile picture
A journalist working with BBC writes on Politics, Social Justice, Archaeology, Literature and Movies.

Mar 30, 2023, 19 tweets

வைக்கம் போராட்டத்தின் நூறாம் ஆண்டுத் துவக்கம் இன்று. இதனைத் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களும் தற்போது இணைந்து கொண்டாடவிருக்கின்றன. காங்கிரஸ்காரராக பெரியார் பங்கேற்று நடத்திய இந்தப் போராட்டத்தை கேரள தலைவர்களுடன் பெரியார் முன்னின்று நடத்தினார். (1/19)

இந்தப் போராட்டம் குறித்து மிக விரிவான ஒரு நூலை, "வைக்கம் போராட்டம்" என்ற பெயரில் பழ. அதியமான் எழுதியிருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள அந்தப் புத்தகத்திலிருந்து பின்வரும் தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன:
(2/19)

1. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தின் மையமாக அமைந்திருந்தது மகாதேவர் ஆலயம். அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோராகக் கருதப்பட்ட ஈழவர், புலையர் ஆகியோர் நடக்கவே தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிற மதத்தினர் செல்லலாம். (3/19)

2. மார்ச் 30ஆம் தேதி கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் ஈழவரையும் புலையரையும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்போவதாக கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் கே.பி. கேசவ மேனன் 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். (4/19)

3. மார்ச் முப்பதாம் தேதி நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அந்த சாலைக்கு அருகில் திரண்டனர். காவல்துறை தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருந்தது. குஞ்சப்பா, பாஹுலயன் ஆகிய இருவரும் தடையை மீறி அந்தத் தெருவுக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து காவல்துறை அவர்களைக் கைதுசெய்தது. (5/19)

4. இந்தப் போராட்டத்தை டி.கே. மாதவன் துவங்கி நடத்த, கே.பி. கேசவமேனன் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். வைதீகர்கள் காந்தியிடம் முறையிட்டதால் சில நாட்கள் போராட்டம் நிறுத்திவைக்கப்பட்டு, பிறகு ஏப்ரல் 7 முதல் தொடர்ந்து நடத்தப்பட்டது. (6/19)

பல தலைவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட நிலையில்தான் பெரியார், வைக்கத்திற்கு வந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென தந்திகள் அனுப்பப்பட்டன.
5. இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்க பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த பெரியார் ஏன் அழைக்கப்பட்டார் என்பது இதில் முக்கியமான கேள்வி. (7/19)

"பெரியார்தான், அப்போது இங்கே காங்கிரஸ் தலைவராக இருந்தார் என்பது ஒரு காரணம். இம்மாதிரியான போராட்டம் நடத்தவது, மக்களைத் திரட்டி, உறுதியாகப் போராடுவது ஆகியவற்றில் அந்த காலகட்டத்தில் இரண்டு தலைவர்கள் சிறப்பானவர்களாக இருந்தார்கள். (8/19)

ஒருவர் வரதராஜுலு நாயுடு. இன்னொருவர் பெரியார். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமை விஷயத்தில் தீவிரமாக இருப்பார் என்பதால் பெரியாரை அழைத்தார்கள்" என்கிறார் வைக்கம் போராட்டம் நூலாசிரியர் பழ. அதியமான். ஆனால் வெளியிலிருந்து ஆட்கள் செல்வது ராஜாஜிக்கு உடன்பாடானதாக இல்லை. (9/19)

6. பெரியாரின் மனைவி நாகம்மையும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு சத்திகிரகம் செய்தார். பெரியாரின் உரைகளும் ஏனைய நடவடிக்கைகளும் வைக்கத்தில் அமைதியின்மைக்குக் காரணமாகக்கூடும் எனக் கருதுவதால், அவர் கோட்டயம் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. (10/19)

7. ஆனால், பெரியார் தடையை மீறியதால் மே மாதம் ஒரு முறையும் ஜூலை மாதம் ஒரு முறையும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜூலை மாதம் 18ஆம் தேதி பெரியாருக்கு 4 மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கொல்லம் மாவட்டத்தில் பேசுவதற்கும் பெரியாருக்கு தடை விதிக்கப்பட்டது. (11/19)

8. போராட்டம் துவங்கி ஒரு ஆண்டு நெருங்கிய நிலையில் மார்ச் 9ஆம் தேதி மகாத்மா காந்தி வைக்கம் வந்தார். சத்தியாகிரகிகள், வைதீகர், மகாராணி, நாராயண குரு, தேவஸ்வம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சந்தித்துப் பேசினார். பெரியாருடனும் பேசினார். (12/19)

9. ஜூன் மாத வாக்கில் கோவிலைச் சுற்றியுள்ள 4 தெருக்களில் மூன்றில் தீண்டாதார் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பெரியார் கோவில் நுழைவை வலியுறுத்தக்கூடாது என்ற நிபந்தனையில் இந்த அனுமதி வழங்கப்பட்டது. மக்களின் மனம் தயாராகும்வரை அதனை வலியுறுத்தப்போவதில்லை எனப் பெரியார் கூறினார். (13/19)

10. கிழக்குத் தெருவைத் தவிர, பிற தெருக்கள் திறந்துவிடப்பட்ட நிலையில்,போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பெரியார் தலைமையில் நடந்த வெற்றிவிழாவில் கோவில் நுழைவையே இறுதி லட்சியமாக பெரியார் உள்ளிட்டோர் குறிப்பிட்டனர். (14/19)

11. இந்தப் போராட்டத்தில் பெரியார் இரு முறை சிறை சென்றார். வைக்கத்தில் இருந்த 141 நாட்களில் சிறையில் மட்டும் 74 நாட்களைக் கழித்தார். காந்தி ஒரே ஒரு முறை மட்டும் வைக்கத்திற்கு வந்தார்.
12. பிற்காலத்தில், வைக்கம் போராட்ட காலத்தில் காந்தியும் ராஜாஜியும்... (15/19)

நடந்துகொண்ட முறை குறித்து கடுமையான விமர்சனங்களை பெரியார் முன்வைத்தார். சத்யாகிரகத்தை பல்வேறு வகைகளில் காந்தி முடக்க முயற்சித்ததாக அவர் குற்றம்சாட்டினார்.
13. இந்தப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு மிக முக்கியமானது என்கிறார் பழ. அதியமான். (16/19)

"ஒரு போராட்டம் கலங்கிக்கொண்டிருந்தபோது, பெரியார் சென்று அந்தப் போராட்டத்தை நிமிர்த்தினார் என்று நான் நினைக்கிறேன். மக்கள் ஆதரவை அவர் திரட்டினார். அதில் அவருடைய பங்கு மிகச் சிறப்பானது. காந்தி சமாதானங்களைச் செய்தார். அதாவது மேல் மட்டத்தில் அவர் பல காரியங்களைச் செய்தார். (17/19)

பெரியார் கீழ்மட்ட நிலையில், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதில் பெரும்பங்கு வகித்தார்" என்கிறார் அவர்.
விரிவான கட்டுரைக்கு: bbc.com/tamil/articles…
பழ அதியமான் பேட்டிக்கு: bbc.com/tamil/india-51… (18/19)

வைக்கம் போராட்டம் குறித்து விரிவாக அறிய படிக்க வேண்டிய நூல், "வைக்கம் போராட்டம்". ஆசிரியர்: பழ. அதியமான். பக்கங்கள்: 646; விலை: ரூ. 325/-. வெளியீடு: காலச்சுவடு. (19/19)

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling