#தசகம்_25
நரசிம்ம அவதாரம் 1. ஹிரண்யகசிபு தூணை அடித்தான். உடனே, காதுகளைக் கிழிக்கும் பயங்கரமான சத்தம் கேட்டது. அந்த சத்தம், அண்டங்களை நடுங்கச் செய்வதாக இருந்தது. இதுவரை எவராலும் கேட்கப் படாத சத்தமாக இருந்தது. அந்த சத்தத்தைக் கேட்ட ஹிரண்யகசிபுவின் உள்ளம் நடுங்கியது. பிரும்மதேவன்
கூட நடுங்கினாராமே? என்று பட்டத்ரி கேட்க குருவாயூரப்பான் “ஆம்” என்று தலையை ஆட்டி அங்கீகரித்தாராம். 2. எங்கும் நிறைந்தவரே! அந்த அசுரன், எல்லா திசைகளையும் கண்களால் பரபரப்புடன் நோக்கினான். அப்போது, தூணிலிருந்து, மிருக வடிவமும் அல்லாத, மனித வடிவும் அல்லாத உருவத்துடன் நீ தோன்றினாய்.
இது என்ன என்று அசுரன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பிரகாசிக்கின்ற பிடரியுடன், சிங்க உருவத்துடன் நீ பெரிதாக வளர்ந்தாய். 3. சுழலும் உன் கண்கள், உருக்கிய தங்கத்தைப் போல ஜொலித்தன. பிடரி மயிர்கள், விரிந்து ஆகாயத்தை மறைத்தன. வாய் குகையைப் போன்றிருந்தன. வாளைப்போல் கூர்மையாக சுழன்று
கொண்டு இருந்த நாக்கு வெளியே வரும்போது, மிகப்பெரிய கோரைப்பற்கள் இருபுறமும் தெரிந்தன. பயங்கரமான உருவம் கொண்ட, உன் இந்த நரசிம்ம அவதாரம் சிறந்து விளங்கட்டும். 4. குட்டையான கழுத்துடன் கர்ஜிக்கும் போது மடிந்த கன்னத்து சதைகளால் உன் உருவம் பயங்கரமானதாக இருந்தது. நூற்றுக் கணக்கான கைகளில்
இருந்து கூர்மையான நகங்கள் வெளிவந்தது. மிக பயங்கரமான இடிமுழக்கம் போன்ற சிம்மநாதக் குரல், பகைவர்களை ஓடச் செய்தது. இப்படிப்பட்ட நரசிம்ம உருவத்தை நமஸ்கரிக்கிறேன். 5. இவன் நிச்சயம் நாராயணன், இவனைக் கொல்கிறேன் என்று ஹிரண்யகசிபு, தன் கதையைச் சுழற்றிக் கொண்டு, உன் அருகே வந்தான். உன்
பருத்த கரங்களால் அவனைப் பிடித்தாய். அவன் உன் பிடியிலிருந்து நழுவி, தன் வாளால், உலகங்களை விழுங்கும் உக்கிரத்தோடு இருந்த உன்னைத் தாக்க முயன்றான். ஆச்சர்யம்! 6. மறுபடியும் கரங்களால் அவனைப் பிடித்து, வாசற்படியில், உன் தொடைகளில் படுக்க வைத்து, கூரிய நகங்களால் அவன் மார்பைக் கிழித்தாய்.
பெருகிய ரத்தத்தைக் குடித்து சிம்மநாதம் செய்தாய். 7. கொன்ற அவனை விட்டுவிட்டு, எழுந்து நடந்து மற்ற அசுரர்களை விழுங்கத் தொடங்கினாய். அப்போது அனைத்து உலகங்களும் சுழன்றன. சமுத்திரங்கள் கலங்கின. மலைகள் அசைந்தன. நட்சத்திரங்கள் சிதறின. அனைத்தும் நிலை குலைந்து விட்டது! 8. ஹிரண்யகசிபுவின்
மாமிசத்தையும், குடலையும் மாலையாய் அணிந்து கொண்டு, இடி முழக்கம் போல் கர்ஜித்துக் கொண்டு இருந்த உன்னை நெருங்க அனைவரும் அஞ்சினர். சிவன், பிரம்மன், இந்திரன் முதலியோர் வெகுதூரத்தில் இருந்து உன்னைத் துதித்தனர். 9. அப்போதும் உன் கோபம் அடங்கவில்லை. பிரம்மன், குழந்தையான பிரஹ்லாதனிடம் உன்ன
வணங்கும்படி கூறினார். பயமற்ற பிரஹ்லாதனும் உன்னை நெருங்கி நமஸ்கரித்தான். நீயும் சீற்றம் தணிந்து பிரஹ்லாதனுடைய தலைமேல் கையை வைத்து ஆசீர்வதித்தாய். அவனும் உன்னை ஸ்தோத்திரங்களால் துதிக்க, அவனுக்கு அவன் விரும்பாமலேயே எல்லா வரங்களையும் அளித்து, உலகங்களையும் அனுக்ரஹித்தாய்.
10. இவ்வாறு ஒரு பயங்கரமான லீலையை நடித்தாய். ஸ்ரீ நரசிம்மதாபனீயம் என்ற உபநிஷத்தில் பாடப்பட்டவரும், எல்லா மகிமைகளை உடையவரும், பரிசுத்தமான ரூபத்தை உடையவரும், பிரஹ்லாதனிடத்தில் பிரியம் வைத்தவருமான குருவாயூரப்பா! எல்லா ரோகங்களில் இருந்தும் என்னைக் காக்க வேண்டும்.
#தசகம்_26
கஜேந்திர மோக்ஷம் 1. பாண்டிய நாட்டை ஆண்ட இந்திரத்தியும்னன் உன் மேல் மிகுந்த பக்தி கொண்டவன். அவன் ஒரு சமயம் சந்தன மலையில் அமர்ந்தபடி, உன் வழிபாட்டில் ஆழ்ந்திருந்தான். அதனால் அப்பொழுது விருந்தினராய் அங்கு வந்த அகத்தியனை அவன் கவனிக்கவில்லை. 2. அதனால் அகத்தியன் கடுஞ்சினம்
கொண்டு, செருக்கினால் மரியாதை செய்யாத காரணத்தால் நீ யானையாக பிறப்பாய் என்று அவனை சபித்து விட்டுச் சென்றார். இந்திரத்தியும்னன் உன்னையே தியானித்துக் கொண்டு இருந்ததால் அதே நிலையில், பேரு பெற்ற கஜேந்திரன் வடிவத்தை அடைந்தான். 3. அந்த கஜேந்திரன் எல்லா உயிர்களை காட்டிலும் அதிகம் பலம்
பெற்றிருந்தது. பாற்கடலின் இடையே திரிகூட மலையில் பெண் யானைகளோடு விளையாடிக் கொண்டிருந்தது. ஹே குருவாயூரப்பா! உன் பக்தர்களுக்கு எங்கே தான் மேன்மை கிடைப்பதில்லை! 4. அந்த யானை தன் வலிமையாலும் அந்த தேசத்தின் விசேஷத்தாலும் துன்பங்களைச் சிறிதும் அறியவில்லை. ஆயினும் ஒரு சமயம் வெயிலின்
கடுமையால், சோர்ந்து, களைத்து, உன் ஏவலால் மலையின் அருகில் இருந்த ஒரு குளத்தில் யானைக் கூட்டங்களோடு புகுந்து விளையாடிற்று. 5. ஹூஹூ என்ற கந்தர்வன், தேவலனின் சாபத்தால் அந்தக் குளத்தில் முதலையாகி வாழ்ந்து வந்திருந்தான். அவன் அந்த யானையின் காலைக் கவ்விப் பிடித்துக் கொண்டான். உன்
பக்தர்களுக்கு அனுக்ரகம் அளிக்கவே நீ அவர்களுக்குத் துன்பங்கள் கொடுக்கிறவனாகவும் இருக்கிறாய் அல்லவா? 6. உனக்குச் செய்த தொண்டின் மகிமையால் 1000 ஆண்டுகள் இடைவிடாமல் போராடிக் கொண்டிருந்த அந்த கஜேந்திரனுக்கு தக்க சமயம் வரும்போது, உன் திருவடியில் ஏகாக்ர பக்தி சித்திப்பதற்காக முதலையின்
பிடியில் சிக்கிக் கொள்ளும்படி செய்தாய். 7. பரமாத்மாவே! அந்த யானை அளவுகடந்த துன்பத்தினால் முன் பிறப்பின் அறிவையும் பக்தியையும் பெற்றது. துதிக்கையால் தாமரை மலரை உயரப் பிடித்த படி, உன்னை வழிபட்டுக் கொண்டு, முன் பிறப்பில் பயின்றதும், வேற்றுமை இல்லாத பிரம்மத்தில் நிலைபெற்றதுமான
சிறந்த தோத்திரத்தைப் பாடியது. 8. பிரம்மதேவன், சிவன் முதலியோர் நிர்குண பிரம்மத்தைப் பற்றிய தோத்திரம் முழுதையும் கேட்டு அது 'நான் இல்லை' என்று அருகில் செல்லவில்லை. அப்பொழுது அனைத்திலும் வியாபித்திருக்கும் நீயே அளவற்ற அருளின் வேகத்தால் கருடன் மீதேறி அந்த யானையின் முன்னே தோன்றினாய்.
9. பிறகு அந்தக் கஜேந்திரனை உன் தாமரை மலர்போன்ற கையால் பிடித்துக் கொண்டு சக்ராயுதத்தால் அந்தப் பெரு முதலையை பிளந்தாய். அந்த முதலையும் சாபத்தினின்று விடுபட்டுக் கந்தர்வன் ஆகவிட, அந்த யானையோ உன்னோடு ஒன்றிவிட்டது. 10. விஷ்ணுவே! குருவாயூரின் தலைவனே!"இந்த வரலாற்றையும் உன்னையும்
என்னையும் விடியற்காலையில் பாடுபவன் மிகுந்த நன்மைகளை அடைவான்." என்று அந்த கஜேந்திரனிடம் கூறி அதனோடு வைகுண்டத்திற்குச் சென்றாய். அத்தகைய நீயே என்னைக் காக்க வேண்டும்.
#தசகம்_27
பாற்கடலை கடைதலும், கூர்ம அவதாரமும் 1. துர்வாச முனிவர் ஒரு தேவ பெண்மணியிடம் இருந்து தெய்வீகத் தன்மை வாய்ந்த மாலை ஒன்றைப் பெற்றார். அவர் நேரில் சென்று அதை இந்திரனுக்குக் கொடுத்தார். இந்திரனோ அதை ஐராவதத்திற்கு அணிவிக்கவே, ஐராவதம் (அவன் யானை) அதை மிதித்துப் பாழ் படுத்தியது
அதனால் சினமுற்ற துர்வாசர் இந்திரனைச் சபித்தார். உன்னைத் தவிர மற்ற தேவதைகள் அம்சத்தில் தொன்றியவர்களுக்குப் பொறுமை ஏது? 2. மோட்சத்திற்குக் காரணமானவனே! பின், தேவேந்திரன் அந்தச் சாபத்தினால் முதுமையை அடைந்தான். அதனால் தேவர்கள் அசுரர்களால் கொல்லப்பட்டு ஒளிக் குன்றியவர்கள் ஆனார்கள்.
அப்பொழுது சிவன், முதலிய எல்லா தேவர்களும் பிரம்ம தேவனிடம் சென்று அவரையும் அழைத்துக் கொண்டு உன் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். 3. வரதனே! பிரம்மதேவன் முதலியவர்கள் வெகு காலம் உன் பெருமைகளைப் புகழ்ந்து துதித்தார்கள். அப்பொழுது நீ மிகுந்த ஒளியோடு அவர்கள் முன்னே தோன்றினாய். 'தேவர்களே
அசுரர்களோடு உடன்பாடு செய்து கொண்டு பாற்கடலில் அமிர்தத்தைக் கடைக' என்று கட்டளையிட்டாய். 4. தேவர்களின் கூட்ட்டம் அவர்களோடு உடன்பாடு செய்து கொண்ட கர்வத்தில் மந்திர மலையை மத்தாக கொண்டு வரும் வழியில், அந்த மலை நழுவிக் கீழே விழுந்தது. உடனே நீ ஒரு இலந்தைக் கொட்டையை தூக்குவது போல் அந்த
மலையைத் தூக்கி கருடன் மேல் வைத்துக் கொண்டு பாற்கடலில் சேர்த்தாய். 5. பின், தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்னும் நாகத்தை மத்தியில் கயிறாகச் செய்து எல்லா விதைகளும் போடப்பட்ட கடலைக் கடையத் தொடங்கினார்கள். அப்பொழுது நீ சூழ்ச்சியோடு அசுரர்களை பாம்பின் வாய் பக்கத்தில் இருக்கும்படி
செய்தாய். 6. அப்பொழுது பாற்கடலின் உட்பக்கம் கலங்கியது. அதனுள் சுழற்றப்பட்ட மந்தரமலை மூழ்கியதைக் கண்ட தேவர்கள் பெரிதும் வருந்தினார்கள். நீ அவர்களுக்கு நன்மையை செய்ய விரும்பி உறுதியான முதுகெலும்பினை உடைய ஆமையின் உடலை ஏற்றுக் கொண்டாய். 7. விஷ்ணுவே! நீ ஏற்றுக் கொண்ட உடல்
வஜ்ராயுதத்தை விட மிகவும் உறுதியான முதுகெலும்பினை உடையது. எட்டு லக்ஷம் யோசனை தூரம் அகன்றது. அத்தகைய உருவத்துடன் நீ கடலின் ஆழத்திற்குச் சென்று நீரினுள் ஆழ்ந்திருந்த பெரு மலையை மேலே கொண்டு வந்தாய். 8. அந்தப் பெரு மலை மேலே வந்ததும், அங்கே இருந்த எல்லோரும் பெரிதும் மகிழ்ந்து வலிமையுடன
விரைவாகக் கடைந்தனர். அப்பொழுது நீ தேவர்கள் அசுரர்கள் பாம்பரசனான வாசுகியினிடமும் உட்புகுந்து, அவர்களின் சோர்வைத் தணித்து அவர்களை வலிமை உடையவர்களாகச் செய்தாய். 9. அந்தப் பெரு மலை மிகவும் வேகமாகச் சுழ்ன்றதால் உயரே கிளம்பியது. அது மேலும் உயர்ந்து விழுந்து விடாமல் இருக்க நீ உன் தாமரை
மலர் போன்ற கையை அதன் மேல் வைத்து அழுத்தினாய். ஆகாயத்தில் இருந்து அதைக் கண்ட பிரம்மா, சிவபெருமான் முதலியவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மெய் மறந்தவர்களாக மலர் மாரி பொழிந்து உன்னைத் துதித்தனர். 10. தேவனே அசுரர்களின் கூட்டம் பாம்பின் வாயில் இருந்து வந்த நச்சுக் காற்றினால் துன்புற்றது.
வாழ் பக்கம் இருந்த தேவர்கள் அந்த நச்சுக் காற்றினால் சிறிதே வருந்தினர். அப்பொழுது மேகங்கள் உன் அருளினால் தேவர்கள் மீது மழையைப் பொழிந்தன.அசுரர்கள் மீது மழையைப் பொழியவில்லை. 11. அஞ்சியோடிய திமிங்கலங்களும், முதலைகளும்,செறிந்த கடல் நீண்ட காலம் கடையப் பட்டும், மாறுதல் ஒண்ணும் இல்லாமல்
இருந்தது. அப்பொழுது நீ ஒருவனாகவே இரண்டு கைகளாலும் பாம்பரசனான வாசுகியை இழுத்துக் கடையத் தொடங்கினாய். அவ்வாறாக பிரகாசித்த குருவாயூரின் தலைவனே! நீயே என்னைப் பிணிகளில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
#தசகம்_28
இலக்குமியின் சுயம்வரமும் அமுதத்தின் தோற்றமும் 1. முதலில் காலகூடம் என்கிற கொழுந்துவிட்டு எரியும் விஷம் கடலிலிருந்து தோன்றியது. அப்பொழுது தேவர்களின் தோத்திரத்துக்கு மகிழ்ந்து இரங்கிய சிவபெருமான் உன் விருப்பத்திற்கு இணங்கி அந்த நஞ்சினைப் பருகினார். 2. மூன்று மூர்த்திகளின்
உருவானவரே! தேவர்களும் அசுரர்களும் மேலும் கடலை கடைந்த போது உண்டான காமதேனுவை முனிவர்களுக்கு அளித்தாய். பின் தோண்டிய உச்சைச்சிரவஸு என்ற சிறந்த குதிரையையும், ஐராவதம் என்ற சிறந்த யானையையும், கற்பக மரத்தையும், அப்சரப் பெண்களையும் தேவர்களுக்குக் கொடுக்கும்படி செய்தாய். 3. உலகின் தலைவனே!
உன்னிடத்திலேயே அன்பினைக் கொண்டவளும், உன் மனத்தை கவர்ந்தவலும், தூயவளுமான இலக்குமி தோன்றினாள். உலகங்கள் எல்லாம் அவளைப் பார்த்து, மோகித்து, அவளை அடைய விரும்பின. 4. அப்பொழுது தேவர்களின் தலைவனான இந்திரன், உன்னிடத்திலேயே மனத்தை செளுத்தியவலான இலக்குமிக்கு ஒளிமயமான இருக்கையை அளித்தான்.
அப்பொழுது எல்லோரும் கொண்டு வந்த அபிஷேகப் பொருளினால் முனிவர்கள் வேத மந்திரங்களை ஓதி அவளுக்கு அபிஷேகம் செய்தனர். 5. அபிஷேக நீரோடு கூடி, மனத்தைக் கவரும் உன்னுடைய அழகிய கடைக்கண் பார்வை இலக்குமியின் மேல் விழுந்ததால், அலங்கரிக்கப்பட்ட அவளுடைய கொடி போன்ற அவயங்கள் மேலும் அழகு பட்டன.
தேவர்கள் முதலியவர்கள் அந்த இலக்குமியை இரத்தின குண்டலங்களாலும், மஞ்சள் பட்டாடைகளாலும், முத்து மாலைகளாலும் அலங்கரித்தார்கள். 6. இலக்குமி வண்டுகளின் ஒலியோடு கூடிய சுயம்வர மாலையைக் கையில் எடுத்துக் கொண்டு, கும்பங்கள் போன்ற மார்பகங்களின் சுமையால் மெல்ல நடந்தாள். அப்பொழுது அவளுடைய கால்
சிலம்புகள் அழகாக ஒலிக்க மிகுந்த வெட்கத்தோடு அவள் உன் இருப்பிடத்தை அடைந்தாள். 7. சிவன், பிரம்மதேவன், முதலிய தேவர்கள் எல்லோருமே நற்குணங்களை உடையவர்களாக இருந்தும் குற்றங்களை முற்றும் நீங்கப் பெறாதவர்கள் என்று உணர்ந்த இலக்குமி, நற்குணங்களுடன் எப்பொழுதும், எல்லாவற்றிலும் அழகாக
விளங்குபவன் நீயே என்று அறிந்தாள். ஆகவே அவள் தெய்வத் தன்மை வாய்ந்த மாலையை உனக்குச் சூட்டினாள். 8. உலகங்களுக்கு எல்லாம் தாயாகவும், உன்னிடம் தவிர வேறு ஒருவனிடமும் பற்றில்லாதவளாக இருக்கும் அந்த இலக்குமி தேவியை நீ உடனே உன் மார்பில் ஏந்திப் பெருமைப் படுத்தினாய். உன் மார்பில்
விளங்குகின்ற அந்த இலக்குமியின் அருள் பார்வை என்னும் மழையால் உலகங்கள் எல்லாம் பெரிதும் வளர்ச்சி அடைந்தன. 9. அப்பொழுது வாருணி தேவி தோன்றினாள். அவள் எளிதில் அனைவரையும் மயக்கக் கூடிய அழகினையும், ஆசையைத் தூண்டுபவள் என்ற புகழையும் பெற்றாள். அறியாமைக்கு இருப்பிடமான அவளை நீ சிறந்த
வெகுமானமாக அசுரர்களுக்குக் கொடுத்தாய். 10. குருவாயூரின் தலைவனே! புதிய மேகம் போல் அழகான நீ இரண்டு கைகளாலும் கலயத்தில் அமுதத்தை எடுத்துக் கொண்டு கடலில் இருந்து தன்வந்தரியாகத் தோன்றினாய். அத்தகைய நீயே என்னுடைய எல்லா பீடிகளையும் போக்க வேண்டும்.
#தசகம்_29
அமுதத்தைக் கொள்ளுதலும் அசுரர்களை அழித்தலும் 1. அசுரர்கள் பாற்கடலில் இருந்து வெளிக் கிளம்பிய அமுதத்தை உன் கையில் இருந்து பிடுங்கிக் கொண்டு சென்றனர். உன்னை அன்றி வேறு ஒருவனையும் அடைக்கலம் புகாத தேவர்களை அமைதியுறச் செய்து விட்டு உடனே மறைந்து விட்டாய். தேவனே! உன் மாயையின்
சிறப்பினால் அந்த அசுரர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளத் தொடங்கினர். 2. அப்பொழுது நீ அனைவரும் மோகிக்கும் வண்ணம் பெண்ணின் உருவத்தை எடுத்துக் கொண்டாய். அந்த உருவம் நீல நிறமும், வாலிபப் பருவம் உடையதாயும், மேல் நோக்கி உயர்ந்த மார்புகளால் சிறிது வளைந்ததாயும் இருந்தது. அதைக்
கண்டதும் அசுரர்கள் அனைவரும், அமுத கலயத்திற்காக போட்ட சண்டையை விட்டு விட்டு உன் மார்பங்களாகிய கலயங்களுக்காக ஆசையுடன் ஒடி வந்தனர். 3. மேலும் இவர்கள் காமம் தலைக்கு ஏறியதால் தங்கள் மதியை இழந்து, உன்னைப் பார்த்து, மான் விழி கொண்டவளே நீ யார்? இந்த அமுதத்தைப் பகிர்ந்து கொடு என்றனர்.
உடனே நீ அவர்களை நோக்கி அசுரர்களே! நான் வேசி, என்னை எப்படி நம்புகிறீர்கள் என்று சொல்லி, அவர்களை மேலும் உன் மேல் நம்பிக்கை உடையவர்களாக ஆக்கினாய். 4. பிறகு அந்த அசுரர்கள் மகிழ்ச்சியுடன் உன்னிடம் அமுத கலசத்தைக் கொடுக்கும் போது, நீ அவர்களிடம், என் தகாத செயலைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்
என்று கூறிக் கொண்டே தேவர்களையும் அசுரர்களையும் தனித் தனி வரிசையில் உட்கார வைத்தாய். களிப்பூட்டும் கொடி நடை நடந்தபடி அமுதத்தைப் பகிர்ந்து கொடுக்கத் தொடங்கினாய். 5. அசுரர்கள், இவள் நம்மிடம் மிகுந்த அன்பினை உடையவள் என்று அமைதியாக இருந்தார்கள். பக்தர்களுக்கு வயப்பட்டவனான நீ அமுதத்தை
தேவர்களுக்குள்ளேயே கொடுத்து முடித்து விட்டாய். பின் உன் சுயரூபத்தை எடுத்துக் கொண்டு தேவர்கள் வரிசையில் அமர்ந்து அமிர்தத்தைப் பாதியளவு குடித்திருந்த ஸ்வர்பானு (ராகு) என்ற அசுரனின் தலையை வெட்டினாய் அல்லவா? 6. நீ உன்னிடமிருந்து அமுத கலயத்தைப் பறித்த அசுரர்களுக்குத் தகுந்த பாடத்தைப்
புகட்டி மறைந்தாய். உடனே அந்த அசுரர்கள் தேவர்களுடன் போர் புரியத் தொடங்கினார்கள். போர் கடுமையாக வலுத்த போது தேவர்களின் கூட்டம் பலியின் அசுர மாயையினால் மயங்கி விழுந்தது. அச்சமயம் நீ போர்க்களத்தில் தோன்றினாய். 7. பிறகு, நீ கால நேமியையும் மாலி முதலியவர்களையும் கொன்றாய். பகாசுரன், பலி,
சாம்பன், வலன் முதலியவர்களை இந்திரன் அழித்தான். உலர்ந்ததாலும், நனைந்ததாலும் கொல்ல முடியாத நமுசியும் கடல் நுரையினால் சம்ஹாரம் செய்யப் பட்டான். பின், நீ நாரதனின் வேண்டுகோளுக்கு இணங்க போரை நிறுத்தினாய். 8. அசுரர்களை மயக்க நீ எடுத்த மோகினி உருவத்தைப் பற்றி கேள்வியுற்ற சிவபெருமான்
அதைக் காண மிகுந்த ஆவல் கொண்டார். உடனே பூத கணங்களோடும் பார்வதியோடும் உன் இருப்பிடமான வைகுண்டத்திற்கு வந்து உன்னைத் துதித்துத் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அப்போழுது நீ மறைந்தாய். 9. நீ மனத்தைக் கவரும் பெண்ணின் உருவத்தை எடுத்து ஒரு பூஞ்சோலையின் அருகில் பந்தடித்து விளையாடத்
தொடங்கினாய். அப்பொழுது உன் கண்கள் அங்கும் இங்கும் சுழல ஆடை நழுவியது. அந்த நிலையில் மன்மதனின் பகைவரான சிவபெருமான் காமத்தால் உன்னை ஆரத் தழுவிக் கொண்டார். 10. நீயோ அவர் பிடியில் இருந்து நழுவி ஓடினாய். சிவபெருமானோ உன்னை விடாமல் தொடர்ந்து தன் வீர்யத்தை வெளிப் படுத்தினார். அதன் பின்,
உண்மையைத் தெளிவாக அறிந்து உன்னால் மேன்மையுற்றவராய் உன் பெருமையை தன் மனைவியாகிய பார்வதியிடம் கூறினார். குருவாயூரின் தலைவனே! அத்தகைய பெருமையுடைய நீயே என்னைக் காத்தருள வேண்டும்.
#தசகம்_30
வாமன அவதாரம் 1. இந்திரனால் போரில் உயிரை இழந்த போதிலும் சுக்ராச்சாரியாரின் சஞ்ஜீவினி மந்திர பலத்தால் மீண்டும் உயிர்ப்பிக்கப் பட்டு விஸ்வஜித் யாகத்தைச் செய்து தன் சக்தியை வளர்த்துக் கொண்ட மாபெரும் வீரனான பலி உன் சக்ராயுதத்திற்கு அஞ்சாது, மூவுலகையும் தன் வசமாக்கிக்
கொண்டான். அவனுக்கு அஞ்சிய தேவர்கள் ஒடி ஒளிந்தனர். 2. அதிதி தேவி தன் மக்களான இந்திரன் முதலிய தேவர்கள் துன்பத்தைக் கண்டு பெரிதும் வருந்தி தன் கணவனான காசியப முனிவனிடம் அடைக்கலம் புகுந்தாள். அவரால் உபதேசிக்கப் பட்ட "பயோ விரதம்" என்று பெயர் பெற்ற உன் வழிபாட்டினை உன்னிடத்தில் பக்தி
நிறைந்தவளாய் 12 நாட்கள் செய்தாள். 3. அந்த விரதத்தின் முடிவில், உன்னிடம் மனம் ஒன்றிய அதிதிக்கு முன்னே நீ நீல நிறத்துடன், நான்கு கைகளையும் கொண்ட திருமேனியுடன் தோன்றினாய். அப்போது உன்னை வனாகிய அவளிடம், "நானே உனக்கு மகனாகப் பிறக்கிறேன். என்னை நீ தரிசித்தது பிறர் அறியாதபடி இரகசியமாக
இருக்க வேண்டும்" என்று கூறி மறைந்து விட்டாய். 4. பிறகு, காசியபரின் தவத்தினால் வளர்ந்த வீர்யத்தில் எழுந்தருளிய நீ அதிதியின் கர்பத்தை அடைந்தாய். அப்பொழுது பிரம்ம தேவன் உன்னைத் துதித்தான். அதிதியும் நாராயணனுக்கே உரிய அடையளங்களான சங்கு முதலியவற்றால், தெய்வத் தன்மை வாய்ந்த உருவத்தோடு
கூடிய உன்னை துவாதசியும் திருவோனமும் கூடிய நன்னாளில் பெற்றெடுத்தாள். 5. தேவர்கள் கூட்டம் ஆனந்தம் பொங்க மங்கள முரசினை முழக்கிக் கொண்டு அந்தத் தூய்மையான ஆசிரமத்தில் மலர் மாறி பொழிந்தது. தாயும் தந்தையும் கைகுவித்துக் கொண்டு வெல்க வெல்க என்று துதித்தனர். அந்த நொடியிலேயே நீ மிகத்
திறமை வாய்ந்த பிரம்மச்சாரியின் உருவத்தை எடுத்துக் கொண்டாய். 6. ஈசனே! அப்பொழுது உன் தந்தையான காசியப பிரஜாபதி உனக்கு உபநயனம் செய்வித்தார். மௌஞ்சி (மேகலை), தண்டம், மான் தோல், அக்ஷமாலை முதலியவற்றை அணிந்ததனால் உன் திருமேனி மிகச் சிறப்பாக விளங்கியது. நீ அக்கினியில் செய்ய வேண்டிய
செயல்களைச் செய்து முடித்தப் பின் அசுவமேத யாகம் நடந்து கொண்டிருந்த பலி சக்கரவர்த்தியின் அரண்மனைக்குப் புறப்பட்டாய். 7. உன் சிறிய தோற்றத்துடன் நடந்து சென்ற போதிலும், பின்னால் எடுக்கப் போகும் விஸ்வரூப மகிமைக்குரிய சுமையை முன்பே தெரிவிப்பது போல் உன் உடலசைவால் உலகமே அசையுமாறு நடந்தாய்
எதிரிகளின் வெஞ்சின வெப்பத்தைத் தடுப்பது போல குடையும், அசுரர்களை தண்டிக்க அடையாளமாக தண்டத்தையும் எடுத்துச் சென்றாய். 8. நர்மதை நதியின் வடகரையில் இருந்த அசுவமேத யாகசாலையை நீ அடைந்த பொழுது உன் திருமேனியின் பேரொளி சுக்கிராச்சாரியார் முதலியவர்களின் கண்களைக் கூசும்படிச் செய்தது. அவர்கள
இவன் சூரியனா, அக்கினியா, யோகியான சந்த குமாரனா, யார் இவன் என்று ஐயம் உற்றார்கள். 9. அனைவர் மனத்தையும் கவர்ந்த உன் பெரோளியினால் ஒளி குன்றியவர்களும், பிருகு வம்சத்தில் தோன்றியவர்களும், சுக்கிராச்சாரியார் போன்றோரும், உன்னை விரைவாக எதிர்கொண்டு அழைத்தார்கள். உன் திருமேனியைக் கண்டதும்
நற்செயல்களே செய்த அசுரனான பலி சக்கரவர்த்தி பக்தி பெருக்கால் மெய் சிலிர்த்த உடலுடன் உன்னை அணுகி உன் திருவடிகளை அலம்பினான். புண்ணிய நதிகளையும் புண்ணியமாக்கும் உன் பாத ஜலத்தை தலையில் ப்ரோக்ஷித்துக் கொண்டான். 10. அசுரனாக இருந்தும் அந்தப் பலி சிவபெருமானின் சிரசில் விளங்கிய உன் திருவடி
நீரைப் பெற்றான். அதற்குக் காரணம் பிரஹலாதன் குளத்தில் பிறந்தது தானோ? வேள்விகளைச் செய்தது தானோ? அந்தணர்களிடம் பக்தி கொண்டது தானோ? நான் அறியேன். விபுவே! குருவாயூரில் எழுந்தருளி இருப்பவனே! அத்தகைய நீயே என்னைக் காத்தருள வேண்டும்.
#தசகம்_31
பலியின் செருக்கை அழித்தல் 1. அசுரனான பலி, உன் திருமேனியில் இருந்து உண்டான ஒளியைக் கண்டதும் உண்டான பக்திப் பெருக்கில் எல்லா வகையிலும் உன்னை வழிபடலானான். அவன் கை குவித்துக் கொண்டு, அந்தண குமாரா, என்னிடம் விரும்பியது என்ன? விளக்கமாகக் கூறு. உணவையோ, வீட்டையோ, நிலத்தையோ
அல்லாது எல்லாவற்றையுமோ எதுவாக இருந்தாலும் கேள் கொடுக்கிறேன் என்றான். 2. நீ பலியின் குறை இல்லாத சொல்லைக் கேட்டு, அருள் நிறைந்தவனாய் இருந்தாய். அதனால் அசுரர்களின் குலத்தைப் புகழ்ந்து கொண்டே 3 அடி மண் அளவே வேண்டினாய். எல்லாவற்றையும் கோடு என்று ஒரு சிறுவன் கேட்டிருப்பின் யாருக்குத்
தான் சிரிப்பாக இருக்காது? 3. உடனே பலி, நீ மிகச் சிறியவன், நான் உலகங்களுக்கு எல்லாம் தலைவன். அத்தகைய என்னிடம் வெறும் மூன்றடி மட்டுமே வேண்டுகிறாய், இதனால் என்ன பயன், பூமண்டலம் முழுதும் பெற்றுக் கொள் என்று செருக்கோடு சொன்னான். அந்தச் செருக்கின் காரணமாகவே மூன்றடி மண்ணையும் கொடுக்க
முடியாமல் இகழ்ச்சியான சொற்களையும் ஏற்க வேண்டியதாயிற்று. அந்த கர்வம் முற்றிலும் அழியவே, நியாயம் இல்லாதிருந்தும், அவன் தண்டனை அடைய வேண்டியிருந்தது. 4. வரதனே! 3 அடி மண்ணினால் ஒருவன் மகிழ்ச்சி அடையவில்லை என்றால் அவன் 3 உலகங்களாலும் மகிழ்ச்சி அடைய மாட்டான் என்று சொன்னாய். உடனே பலியும்
நீர் வார்த்து உனக்கு தானம் கொடுக்க விரும்பினான். அப்பொழுது அவன் குருவான சுக்கிராச்சாரி, கொடுக்காதே, கொடுக்காதே, எல்லாவற்றையும் கவர்பவனான ஹரியே இவன் என்று பலியிடம் வெளிப்படையாகக் கூறினான். இதுவும் பலியின் மனத் தூய்மையை சோதிக்க உன்னால் தூண்டப் பட்டதே! 5. பலியானவன் உடனே, அந்த பகவானே
என்னிடம் யாசிக்கிறான் என்றால் என் விருப்பம் எல்லாம் நிறைவேறியவன் ஆவேன். நான் கொடுக்கத் தான் போகிறேன் என்று உறுதியாகக் கூறினான். பிறகு சுக்கிராச்சாரியாரின் சாபத்தைப் பொருட்படுத்தாமல், தன் மனைவி விந்தியாவளி நீர் வார்க்க, உன் திருப்பாதங்களை அலம்பி, உனக்கு அனைத்தையும் அர்ப்பணம்
செய்து கொடுத்தான். இது மிக்க வியப்பே! 6. அசுர குலத்தின் தலைவனான பலி உன்னிடம் ஐயம் சிறிதும் இன்றி அனைத்தையும் அர்ப்பணித்து விட்டான். அப்பொழுது தேவர்களும் முனிவர்களும் பூமாரி பொழிந்தார்கள். உலகத்தினர் அனைவரும் பார்த்துக் கொண்டு இருந்த போதே உன்னுடைய தெய்வத் தன்மை வாய்ந்த உருவம்
பிரம்மாண்டத்தின் எல்லை வரை மென்மேலும் வளர்ந்து கொண்டே இருந்தது. 7. பிரம்மதேவன் தன் இருப்பிடமான சத்திய லோகத்தை அடைந்த உன் திருவடியின் நுனிக்குக் கமண்டல தீர்த்ததால் அபிஷேகம் செய்தான். அந்த நீர் எல்லா உலகங்களையும் தூய்மையாக்கியது. கந்தர்வர்கள் மகிழ்ச்சியின் மிகுதியால் நடனம் ஆடினர்.
இந்தப் பெருவிழாவில் பக்தனான ஜாம்பவான் பேரிகையை முழக்கிக் கொண்டு உலகைச் சுற்றி வந்தான். 8. தேவனே! அதற்குள் அசுரர்களோ தங்கள் அரசனின் அனுமதி இல்லாமல் போர் செய்யத் தொடங்கினார்கள். அப்பொழுது அங்கே வந்திருந்த உன் தொண்டர்கள் அந்த அசுரர்களை எதிர்த்துத் தோல்வியுற செய்தனர். பிறகு பலி,
எந்த இறைவனின் பெருமையால் முன்பு நாம் ஜெயிக்கப் பட்டோமோ அந்த இறைவனே இப்போது கால வடிவனாக நம் எதிரில் நிற்கின்றான். அதனால் உங்கள் போரினால் என்ன பயன் என்று கூறினான். பிறகு அவனுடைய சொற்படி அசுரர்கள் பாதாளத்திற்குச் சென்றார்கள். 9. கருடன் வருண பாசங்களால் பலியைக் கட்டினான். அப்பொழுது நீ
பலியை நோக்கி எனக்கு மூன்றாவது அடி மண்ணைக் கொடு, நீ உலகங்களுக்கு எல்லாம் தலைவன் இல்லையா என்று உரக்கக் கூறினாய். உடனே பலி, பகவானே! என் தலை மீது உன் திருவடியை வைத்து அருள்க என்று சிறிதும் நடுக்கம் இல்லாமல் கூறினான். அப்போழித்து பலியை பாராட்டிக் கொண்டே நேரில் வந்த பிரஹலாதன் உன்னை
துதித்தான். 10. அசுரனே! உன் செருக்கினை அழிக்கவே இவையாவும் என்னால் செய்யப் பட்டன. நீ செய்த நற்செயல்களால் சித்தி பெற்று விட்டாய்.சுவர்கத்திலும் மேம்பட்ட உலகம் ஒன்று உனக்குக் கிடைக்கும்.பிறகு இந்திரனின் பதவியும் என்னோடு ஒன்றுதளையும் நீ அடைவாய் என்று அந்த பலிக்கு நீ அருள் புரிந்தாய்.
பின் அந்தணர்களைக் கொண்டு பாதியில் நின்று போன பெரு வேள்வியை நிறைவேற்றி வைத்தாய். குருவாயூரின் தலைவனே! அத்தகைய நீயே என்னைக் காத்தருள வேண்டும்.
தசகம்_32
மச்ச அவதாரம் 1. முன்னொருகால் ஆறாவது மன்வந்தரத்தின் முடிவில் திடீரென்று பிரளயம் உண்டாயிற்று. அப்பொழுது பிரம்மனின் முகத்தில் இருந்து வேதங்களை ஹயக்ரீவன் என்ற பெரிய அசுரன் கவர்ந்து சென்றான். அப்பொழுது அந்த வேதங்களை மீட்க நீ மீனின் வடிவத்தை எடுக்க விரும்பினாய் அல்லவா?
2. திராவிட மன்னனான சத்யவிரதன் ஆற்று நீரில் தர்ப்பணம் செய்து கொண்டிருந்த பொழுது அவனுடைய கூட்டிய கைகளில் பளபளவென்று மின்னும் உருவத்தை உடைய மீன் குஞ்சாய் நீ காணப்பட்டாய். 3. மீண்டும் ஜலத்தில் விடப்பட்ட மீன் மிகவும் பயன்திருப்பதைப் பார்த்த அந்த ராஜ ரிஷி அதை தன் தீர்த்த பாத்திரத்தில்
வைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றார். மீனாய் வந்த நீயே, சில நாட்களுக்குள்ளேயே வளர்ந்த காரணத்தால் தீர்த்த பாத்திரத்தில் இடம் போறாமல் கிணற்றில் விடப் பட்டாய். அங்கும் இடம் போதாமல் குளத்திலும் பிறகு ஏரியிலும் விடப்பட்டு உடல் பருத்து, எங்கும் பரவியிருந்தாய். 4. அதன்பின் அந்த முனிவன்
உன் கட்டளைப்படி தனது யோக மகிமையால் உன்னைக் கடலில் கொண்டு விட்டு தான் பிரளயத்தைக் காண விரும்புவதாகக் கூறினான். உடனே நீ அவனிடம், 7 நாட்கள் பொறுத்துக் கொண்டு இரு என்று கூறினாய். 5. நீ குறித்த நாள் வந்தது. அப்பொழுது பெய்த கடும் மழையால் நிலம் பிரளய ஜலத்தில் சுழன்று மூழ்கி மறைந்தது.
அந்த முனிவன் 7 முனிவர்களோடு கடலில் சுழன்றான். பின் வருந்தி உன்னையே அடைக்கலம் புகுந்தான். 6. உன் கட்டளையை நிறைவேற்ற பூதேவி தோணியின் ரூபத்தில் வந்தாள். அவர்கள் அந்தத் தொணியில் ஏறிக் கொண்டார்கள். ஆனால் அந்தத் தோணி அலைந்து ஆடத் துவங்கியதும் அவர்கள் நடுங்கினார்கள். அப்பொழுது நீ பிரளய
ஜலத்தில் முன்னிலும் பெரிய மீனாகத் தோன்றினாய். 7. லட்சம் யோஜனை நீளம் கொண்ட உன் தேஜோமயமான உருவத்தைக் கண்ட முனிவர்கள் மகிழ்ந்தார்கள். பின் உன் சொற்படி உன் உயர்ந்த கொம்பில் பூமி வடிவமான தோணியை கட்டினார்கள். 8. அந்தப் பிரளய ஜலத்தில் நீ தோணியை இழுத்துக் கொண்டு உலகத்தின் பிரிவுகள்
எல்லாவற்றையும் அந்த முனிவர்கள் கூட்டத்திற்கு காட்டினாய். அப்பொழுது உன்னைத் துதித்த அந்த ராஜ ரிஷிக்கு நீ ஆன்ம ஞானத்தை உபதேசித்துக் கொண்டு எங்கும் சஞ்சரிப்பவராக விளங்கினாய். 9. நீ பிரளயத்தின் முடிவில் அந்த ஏழு முனிவர்களையும் முன்போலவே இருக்கும்படி செய்தாய். அந்த சத்யவிரத வேந்தனை
அடுத்த மன்வந்திரத்திற்கு #வைவஸ்வதன் என்ற பெயரை உடைய மனுவாக ஆக்கினாய். பின் மிக்க சினத்தோடு ஹயக்ரீவன் என்ற அசுரனை எதிர்த்தாய். 10. குருவாயூரின் தலைவனே! நீ உன் உயர்ந்த கொம்பினால் அந்த அசுரனின் மார்பினைப் பிளந்து அவனை கீழே தள்ளினாய். பின் வேதங்களை எடுத்து பிரம்ம தேவனிடம் கொடுத்து
அவனை ஆனந்தத்தில் மூழ்கச் செய்தாய். அத்தகைய நீயே என்னைக் காத்தருள வேண்டும்.
#தசகம்_33
அம்பரீஷனின் வரலாறு 1. வைவஸ்வத மனுவின் மகன் நபாகன். அவனுக்கு அம்பரீஷ் மகனாகத் தோன்றினான். அவன் ஏழு கடல்கள் சூழ்ந்த நிலத்திற்குத் தலைவனாக விளங்கினான். ஆயினும் உன் பக்தர்களிடமும் உன்னிடத்திலும் எப்பொழுதுமே பக்தி செலுத்தி மகிழ்ந்திருந்தான். 2. தேவனே! உன் அன்பிற்காக எல்லா
செயல்களையும் செய்து வந்த அம்பரீஷனுடைய பக்தியை மெச்சி அவனுக்கு விரைவிலேயே அருள் புரிந்தாய். அவன் வேண்டாமலேயே அவனைக் காக்கும்படி ஆயிரம் முனைகளையுடைய சுதர்சனத்திற்கு ஆணையிட்டாய். 3. பின் அந்த அம்பரீஷன் யமுனைக் கரையில் இருந்த மதுவனத்தில் நல்ல மனத்தையுடைய மனைவியுடன் சிறந்த வழிபாட்டினை
செய்யத் தொடங்கினான். அந்தணர்களுக்கு அறுபது கோடி பசுக்களை தானம் கொடுத்து உன்னை வழிபடும் பொருட்டு ஓர் ஆண்டுக் காலம் ஏகாதசி விரதத்தை மேற்கொண்டான். 4. துவாதசி அன்று பாரணை செய்ய வேண்டிய நேரத்தில் உன் வழிபாடு முடியும் தருணத்தில் துர்வாச முனிவர் அம்பரீஷன் அரண்மனைக்கு வந்தார். அரசனும்
முனிவரை உணவு உண்ணும்படி உபசரித்தான். பிறரை துன்புறுத்தும் இயல்பினை உடைய அந்த முனிவர் தன் கடமையை முடிக்க மெதுவாக யமுனை நதிக்குச் சென்றார். 5. பின் உன் பக்தனான அரசன், பாரணைக்கு உரிய காலம் கடந்து விடுகிறதே என்று வருந்தி, ஜலபானத்தால் மட்டும் பாரணையை முடித்தான். திரும்பி வந்த துர்வாசர
அதை ஞான திருஷ்டியால் அறிந்து, அவனைக் கடிந்து கொண்டார். சினத்தால் தன் சடையைப் பிய்த்து அதிலிருந்து கிருத்யை என்ற ஏவல் பூதத்தைப் படைத்தார். 6. அந்த கிருத்யை கையில் கத்தியை ஏந்தியபடி அக்னியால் உலகங்களை எரித்துக் கொண்டு வருவதை அம்பரீஷன் கண்டான். ஆயினும் தான் இருந்த இடத்தை விட்டு
சிறிதும் அசையவில்லை. உன் சுதர்சனம் உன் பக்தனை துன்புறுத்திய கிருத்யை என்ற தீயை விட்டிலை போல விழுங்கிய பின் துர்வாசரையும் பின் தொடர்ந்து சென்றது. 7. முனிவர் அச்சத்தால் எல்லா உலகங்களுக்கும் ஓடினார். எல்லா இடங்களிலும் உன் சுதர்சன சக்கரம் தொடர்வதைக் கண்டார். பின் பிரம்ம தேவனிடம்
சென்றார். அவரும் காலச் சக்கரத்தை யாரால் தடுக்க முடியும் என்று கூறிவிட்டார். இறுதியில் சிவபெருமானிடம் போனார். அவரும் உன்னையே வணங்கச் செய்தார். 8. முழுமுதலே! பிறகு அந்த முனிவன் உன் உலகமான வைகுண்டத்திற்கு வந்து உன்னை வணங்கினான். நீயோ அவரைப் பார்த்து, பெரு முனிவனே! நான் பக்தர்களுக்கு
அடிமை என்று அறிவீர். அறிவும், தவமும் வணக்கத்தோடு இருந்தால் தான் பெருமைக்கு உரியவை ஆகும். நீ சென்று அம்பரீஷன் திருவடிகளையே அடைக்கலம் கொள் என்று கூறினாய். 9. உடனே அந்த முனிவன் ஓடிச் சென்று அம்பரீஷனுடைய திருவடிகளைப் பிடித்துக் கொள்ளவே அந்த அரசன் சிறிது பின்வாங்கி உன் ஆயுதத்தைத்
துதித்தான். உடனே அந்த சக்ராயுதம் திரும்பிச் சென்றது. பின் துர்வாச முனிவர் அம்பரீஷனுக்கு உன்னிடம் இருந்த பக்தியையும் தீங்கு இழைத்தவருக்கு அவன் காட்டிய கருணையையும் புகழ்ந்தார். மேலும் அவனுக்கு எல்லாவித ஆசிகளையும் வழங்கினார். 10. அம்பரீஷன் துர்வாச முனிவரின் வருகையை எதிர்பார்த்து
ஓர் ஆண்டுக் காலம் உணவு உண்ணாமல் இருந்தான். பிறகு முனிவருக்கு மன நிறைவு உண்டாகும்படி உணவளித்து மகிழ்ச்சியோடு அவரை வழியனுப்பினான். அதன் பின்பே உணவினை உண்ட அரசன் உன்னிடம் முன்னிலும் அதிக பக்தி உடையவன் ஆனான். இறுதியில் உன்னுடைய ஒன்றுதலையும் அடைந்தான்.
குருவாயூரின் தலைவனே! அத்தகையே நீயே என்னைக் காத்தருள வேண்டும்.
#தசகம்_34
ஸ்ரீ ராமாவதாரம் 1. தேவர்கள் ராவணனை அழிக்க வேண்டினர். கோசல ராஜ்ஜியத்தில், ரிஷ்யசிருங்க முனிவர் தசரத மன்னனின் வேண்டுகோளின் பேரில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். யாகத்தில் இருந்து தெய்வீக பாயாசம் வெளிப்பட்டது, அதை மன்னர் தன் மூன்று மனைவிகளுக்கு விநியோகித்தார். அதை பருகி
அதன் மூலம் அவர்கள் ஒரே நேரத்தில் கருத்தரித்தனர். நீ அவர்களுக்கு ராமனாகவும், பிறகு நீயே லக்ஷ்மணனாகவும், பரதனாகவும், சத்ருக்னனாகவும் நீ பிறந்தாய். 2. உன் தந்தையின் வேண்டுகோளின்படி, லட்சுமணன் பின்தொடர, வில் ஏந்தி விஸ்வாமித்திரனின் பெரும் யாகத்தைக் காக்கச் சென்றாய். வழியின் சோர்வைப்
போக்க, முனிவர் இரண்டு மந்திரங்களைச் சொன்னார் - பலா மற்றும் அதிபலா. முனிவரின் கட்டளைப்படி, மனிதர்களின் நிவாரணத்திற்காக, தாடகா என்ற அரக்கனை அம்புகளால் அழித்தாய். பல தெய்வீக ஏவுகணைகளைப் பயன்படுத்துவதில் முனிவர்களிடமிருந்து அறிவுரைகளைப் பெற்ற பிறகு, நீங்கள் முனிவருடன் காட்டிற்குச்
சென்றீர்கள், பின்னர் சித்தாஸ்ரமம் என்ற ஆசிரமத்திற்குச் சென்றீர்கள். 3. யாக சடங்குகளின் தொடக்கத்தில், நீ மாரீசனை துரத்தி, மற்ற ராக்ஷஸர்களை அம்புகளால் கொன்றாய். வழியில் அஹல்யாவின் பாவங்களை உன் பாதத் தூசியால் போக்கினாய். ஜனகனின் அரண்மனையை அடைந்து, சிவனின் வில்லை உடைத்து, பூமியின்
மகளான சீதையை, லட்சுமியை உனது துணைவியாக மாலை சூடினாய். மூன்று சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகளுடன் நீங்கள் உங்கள் ராஜ்யத்திற்குப் புறப்பட்டீர்கள். 4. ஒளிமயமான இறைவனே! பிருகு குலத்தில் முதன்மையான பரசுராமன், மிகுந்த கோபத்துடன் உன்னை எதிர்கொண்டு தோற்றார். பின்னர் அவர் தனது
அனைத்து சக்திகளையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். நீ அயோத்தியாவிற்குச் சென்று உன் துணைவி சீதையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாய். ஒரு நாள், பரதன் சத்ருக்னனுடன் தன் மாமாவின் ராஜ்ஜியத்திற்குச் சென்றபோது, உன் தந்தை உன்னுடைய முடிசூட்டு விழாவை நிச்சயம் செய்தார். அது கேகய மன்னனின
மகள் கேகயியால் தடைபட்டது. 5. உன் தந்தையின் வார்த்தைகளை சிரமேற்கொண்டு, நீ சீதை மற்றும் லக்ஷ்மணனுடன் வில் ஏந்தியபடி காட்டுக்குச் சென்றாய். துக்கத்தில் மூழ்கிய குடிமக்கள் கூட்டம், உன்னைப் பின்தொடர்ந்தவர்களை, நீ திருப்பி அனுப்பிவிட்டு, வழியில் குஹனின் வாசஸ்தலத்திற்குச் சென்றாய்.
மரவுரி தரித்து ஜடா முடியுடன் கூடிய துறவி உடையில், நீ கங்கையை ஒரு படகில் கடந்து, அருகில் வசித்த பரத்வாஜ முனிவருக்கு உன் வணக்கத்தை தெரிவித்தாய். முனிவரின் அறிவுறுத்தலின் பேரில் நீ சித்திரகூட மலையில் முகாமிட்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தாய். 6. மகனைப் பிரிந்த வேதனையின் காரணமாக உன்
தந்தையின் மறைவு பற்றி பரதனிடம் கேள்விப்பட்டு, நீ வேதனையடைந்து அவருக்குத் தர்ப்பணம் செய்தாய். பிறகு பரதனுக்கு உனது திருப்பாதுகைகளையும் அரசாட்சியையும் அளித்து, அதன் பின் அத்ரி முனிவர் இருக்கும் இடத்திற்கு சென்று அவருக்கு மரியாதை செய்தாய். அடர்ந்த பரந்த வனப்பகுதிக்குள் சென்று, நீ
கொடூரமான உடல் கொண்ட அரக்கன் விராடனைக் கொன்று, ஷரபங்கி முநிவருக்கு முக்தி அளித்தாய். 7. அகஸ்திய முனிவருக்கு வணக்கம் செலுத்திய பிறகு, முனிவர்களின் நலம் விரும்பி, பல அரக்கர்களை அழிப்பதாக உறுதியளித்தார். பின்னர் முனிவர் உனக்கு தெய்வீக வைஷ்ணவ வில்லையும், பிரம்மாஸ்திரத்தையும் கொடுத்தார
நீயும் உன் தந்தையின் நண்பன் ஜடாயுவை சந்தித்து, கோதாவரி நதிக்கரையில் உள்ள பஞ்சவடியில் உன் மனைவி சீதையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாய். 8. சூர்ப்பனகை உணர்ச்சியுடன் உன்னை அணுகினாள். அவளது காதலால் கோபமடைந்து லக்ஷ்மணனிடம் நீ அவளை அனுப்பிவிட்டாய், அவன் மிகுந்த கோபத்தில் அவள் மூக்கை
அறுத்தான். கர தூஷணனும் திரிசிரனும் அவள் நிலையைக் கண்டு மிகுந்த கோபத்தில் உன்னைத் தாக்க வந்தனர். யாருடைய சக்திகள் என்றும் குறைவதே இல்லையோ அத்தகைய நீயே, அவர்களையும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ராக்ஷசர்களையும் ஒரே நேரத்தில் கொன்றாய். 9. ராவணனிடம் அவன் சகோதரியான சூர்ப்பனகை, சீதையின்
அழகை வர்ணித்தாள். இதன் மூலம் அவன் மோகமடைந்தான். அதனால் மாரீசனை மாய மானாக மாறும்படி கட்டளையிட்டான். சீதை மானைப் பார்த்து, மானை அடைய ஆசைப் பட்டாள். நீ அதன் பின் சென்று அம்பினால் கொன்றாய். மாரீசன் மேல் அம்பு பட்டவுடன் உன் குரலில் லக்ஷ்மணனையும் சீதையையும் கூப்பிட்டபடி இறந்தான்.
அழுகையைக் கேட்ட சீதை, உன் தம்பி லட்சுமணனை பின்னாலேயே அனுப்பிவிட்டாள். அவளைத் தனியாகப் பிடித்த ராவணன் சீதையைக் கடத்தினான். நீ இதைப் பார்த்து வருத்தப்பட்டாலும், ராவணனைக் கொல்ல இது ஒரு நல்ல காரணத்தைக் கொடுத்ததால் நீயும் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தாய். 10. சீதையைத் தேடிச் சென்றபோது
இறக்கும் தருவாயில் இருந்த ஜடாயு, ராவணன் சீதையைக் கடத்திச் சென்றதையும், அவனை தடுத்து சண்டையிடும்போது அவருக்கு மரணக் காயங்களை ஏற்பட்டதையும் சொல்லி அவர் மறைந்தார். நீ இந்த நண்பரான ஜடாயுவின் இறுதிச் சடங்குகளைச் செய்தாய். வழியில் கபந்தன் என்ற அசுரன் உன்னைத் தடுக்க அவனை நீ கொன்றாய்
பிறகு நீ சபரி என்ற துறவிக்கு முக்தி அளித்து, பம்பை நதிக்கரையில் உனது பெரும் மகிழ்ச்சிக்கு ஹனுமானை சந்திக்க நேர்ந்தது. குருவாயூர் ஆண்டவனே! என்னை பாதுகாக்கவும்.
#தசகம்_35
சுக்ரீவன் நட்பு முதல் 1. ஹனுமானால் கொண்டுவரப்பட்ட குக்ரீவனனுடனான கூட்டணியை அமைத்துக் கொண்டு, அசுர துந்துபியின் சடலத்தை உன் கால் விரலால் வெகு தூரம் எறிந்தாய், மேலும் சுக்ரீவனுக்கு உனது வலிமையை வெளிப்படுத்த ஒரே அம்பினால் ஏழு சால மரங்களை ஒரே நேரத்தில் வெட்டினாய். ஒப்பற்ற
வலிமையுடையவனும், சுக்ரீவனைக் கொல்லத் துடித்தவனுமான வாலி, உன்னால் ஒரு உத்தியால் கொல்லப்பட்டான். சீதையைப் பிரிந்த வேதனையால், மதங்க முனிவரின் சந்நிதிக்கு அருகில் மழைக் காலத்தை நீ கழித்தாய். 2. உன் தம்பி லக்ஷ்மணன் சுக்ரீவனுக்கு அறிவுரை கூறியபோது, அவன் பயந்து உன் மனைவி சீதையை எல்லாத
திசைகளிலும் தேட, வானரப் படையைக் கொண்டு வந்து உன்னை அணுகினான். இதைக் கண்டு மகிழ்ந்த நீ, உன் முன் நின்றிருந்த ஹனுமானிடம், சீதைக்கு ஒரு செய்தியையும், முத்திரை மோதிரத்தையும் கொடுத்தாய். குரங்குகள் உன் துணைவி சீதையைத் தேடும் பணியை மிகவும் சிரத்தையுடன் தொடங்கின. 3. நடந்தவற்றை கேட்டதும்
சம்பாதி புதிய சிறகுகளை வளர்த்துக் கொண்டு பறந்து போனார். சீதையின் இருப்பிடத்தைச் சம்பாதி சொன்னபடியே, அனுமான் சமுத்திரத்தைக் கடந்து லங்கா நகரை அடைந்தான். அங்கே சீதையைக் கண்டு மோதிரத்தைக் கொடுத்து, தோட்டத்தை அழித்து, அக்ஷகுமாரனைக் கொன்று, பிரம்மாஸ்திரப் பிணைப்பைச் சகித்துக் கொண்டார்
பின்னர் அவர் பத்துத் தலை ராவணனை சந்தித்து லங்காவை எரித்தார். ஹனுமான் உடனே உன்னிடம் சென்று சீதை அனுப்பிய சூடாமணியைக் கொடுத்தார். 4. நீ பெரும் போர்வீரர்களான சுக்ரீவன், அங்கதன் முதலானோர் தலைமையில் பெரும் வானரப் படையுடன் புறப்பட்டு முழு பூமியையும் வென்று கடலின் கரையை அடைந்தாய்.
இராவணன் தம்பியான விபீஷணன், உன் பக்கம் வந்து, உன்னிடம் அடைக்கலம் புகுந்து, நீ ரகசியமாகக் கேட்ட எதிரியின் ரகசியங்களை வெளிப் படுத்தினான். சமுத்திரத் தெய்வத்திடம் வைத்த கோரிக்கைகள் பலனளிக்காமல் போனபோது, கோபத்தில் நீ அக்னி ஏவுகணையை அனுப்பி சமுத்திரத்தின் நீரை அழித்தாய். ஏவுகணையின்
சக்தியால் பயந்து, கடல் தெய்வத்தின் கட்டளைப்படி, நீ கடல் வழியாக ஒரு வழியைப் பெற்றாய். 5. எல்லாப் பகுதிகளிலிருந்தும் குரங்குகள் மலைகளையும் பாறைகளையும் கொண்டு வந்தன, அதன் மூலம் இலங்கைக்குப் பாலம் கட்டப்பட்டது. உன் வானரப் படையை அதன் மூலம் நடந்து இலங்கையை அடைந்து ராக்ஷஸர்களை பல்
நகங்கள், மலைகள், பனை மரங்கள் ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்டு தாக்கின. உன் சகோதரன் போர்க்களத்தில் பயங்கர சக்தியை வெளிப்படுத்தியதால், ராவணனின் மகன் இந்திரஜித் நாகாஸ்திரத்தால் உன் படைகளைக் கட்டிப் போட்டான். உன் வாகனமான கருடன் தன் சிறகுகளால் விசிறி அவர்களை அந்த நிலையிலிருந்து விரைவில்
விடுவித்தது. 6. ராவணன் அனுப்பிய 'சக்தி' என்ற ஏவுகணை, உயிர் நழுவிக்கொண்டிருந்த லட்சுமணனை தாக்கியது. அப்போது அனுமனால் கொண்டு வரப்பட்ட மலையில் விளைந்த மூலிகையை நுகர வைத்து உயிர் பெற்றார். அதன் பிறகு லக்ஷ்மணன் மாயாஜால கலைகளின் அதிபதியான இந்திரஜித்தை கொன்றான். ராவணனின் மாயாஜால
சக்திகளால் கலங்கிய நீ, விபீஷணனின் வார்த்தைகளால் அதன் அதிர்ச்சியூட்டும் விளைவுகளிலிருந்து விடுபட்டாய். போரில் கலந்து கொள்ள வந்த கும்பகர்ணன், பூமியை நடுங்கச் செய்து, வானரப் படையை விழுங்கிக் கொண்டிருந்தான், பிறகு உன்னால் கொல்லப்பட்டான். 7. இந்திரன் அனுப்பிய தேர் மற்றும் கவசத்தை ஏற்ற
நீ ராவணனுடன் போரிட்டு, பிரம்மாஸ்திரத்தால் அவன் தலைகளை துண்டித்து, சீதையை நெருப்பால் சுத்திகரிக்கப்பட்ட பிறகு ஏற்றுக்கொண்டாய். போரில் காயமடைந்து கொல்லப்பட்ட குரங்குகளை உயர் வரிசையின் தேவர்கள் குணப்படுத்தி உயிர்ப்பித்தனர். பிறகு லங்காவின் அரசன் விபீஷணன் மற்றும் உனது மனைவி சீதையுடன்
நீ புஷ்பக விமானத்தில் உன் சொந்த நகரமான அயோத்தியாவுக்குத் திரும்பியாய். 8. நீ புனித நீரால் முடிசூட்டப்பட்டு, பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்தாய். சீதையைப் பற்றிய அவதூறான பேச்சுக்கு மதிப்பளித்து அவள் கர்ப்பமாக இருந்தபோதிலும் நீ அவளைக் காட்டுக்கு அனுப்பினாய
என்ன பரிதாபம்! அசுர லவணாசுரன் சத்ருக்னனால் கொல்லப்பட்டான், நீ சூத்திர துறவியைக் கொன்றாய். அதன் பின், வால்மீகியின் ஆசிரமத்தில் வசித்த சீதை உனது இரண்டு மகன்களைப் பெற்றெடுத்தாள். 9. வால்மீகியின் ஆணைப்படி யஞ்ய வளாகத்தில் அவர் இயற்றிய அழகிய இசையை உமது மகன்கள் பாடினர். அதைக் கேட்ட ராமர
(நீ) சீதையைத் திரும்பப் பெற விரும்பினார், ஆனால் அவள் தன் தாய் பூமியில் மறைந்தாள். உனது வசிப்பிடமான வைகுண்டத்திற்குத் திரும்புமாறு கால யமனின் வேண்டுகோளின் பேரில், நீ முதலில் லக்ஷ்மணனைக் கைவிடுவதற்கான காரணத்தை உருவாக்கி, பின்னர் உனது பணியாட்களுடன் சேர்ந்து சரயு நதியில் மூழ்கினாய்.
பிறகு ஸ்வர்கத்திற்குச் சென்று உனது இருப்பிடமான நித்திய வைகுண்டத்தை அடைந்தாய். 10. மனித குலத்திற்கு ஒரு பாடமாக, உன்னுடைய இந்த மானிட அவதாரம் நடந்தது. பிரிவின் வேதனைகள் தீவிர பற்றுதலால் ஏற்படுகின்றன, மேலும் தர்மத்தின் தீவிர அடிமைத்தனம் அப்பாவிகளை கைவிடுவதற்கு வழிவகுக்கும்.
இல்லையெனில், சுயநினைவில் நிலைநிறுத்தப்பட்ட உங்களுக்கு, மனதின் பலவீனம் எப்படி விளங்கும். விவாதத்தின் வீரரே! நீயே சத்வ குணத்தின் அவதாரம்! குருவாயூர் ஆண்டவரே! நோயிலிருந்து என் துன்பங்களை நீக்குங்கள்.
#தசகம்_36
பரசுராமனின் வரலாறு 1. நீண்ட காலத்திற்கு முன்பு நீ அத்ரி மற்றும் அனசூயா முனிவருக்கு தத்தாத்ரேயனாகப் பிறந்தாய். சீடர்களின் அன்புத் தொல்லையால் சலித்த நீ, உன் மனைவியுடன் ஆனந்த அமைதியில் மூழ்கித் திரிந்தாய். அப்போது சிறந்த பக்தனும் ஹேஹய நாட்டு மன்னனுமான கார்தவீர்யார்ஜுனன்
உன்னைக் கண்டு வணங்கினான். உடனே நீ அவனுக்கு அஷ்ட ஐஸ்வரியமும் உன்னால் தான் தனக்கு மரணம் ஏற்படவேண்டும் என்று அவன் கேட்ட வரத்தையும் நீ அளித்தாய். 2. ஹரியே! பின் கார்த்தவீர்யார்ஜுனனுக்கு நீ கொடுத்த வரத்தை உண்மையாக்க நினைத்தாய். அக்காலத்தில் அந்த அரசனின் ஆற்றலுக்கு அடங்கியும் அந்தணர்கள
பகைத்தும், நிலத்திற்கு சுமையாக ஆகிவிட்ட அரச குலத்தை அழிக்க எண்ணம் கொண்டாய். அதனால் பிருகு முனிவரின் வம்சத்தில் வந்த ஜமதக்னி ரேணுகா தேவிக்கு இராமன் என்ற பெயரோடு இளையவனாகப் பிறந்து அப்பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாய். 3. பதினான்காவது வயதில் வேதங்களையும் சாத்திரங்களையும்
கற்றறிந்திருந்தாய். ஒரு நாள் கந்தர்வ ராஜனைப் பார்த்து மனம் சலனமடைந்த உன் தாயை கொன்றுவிட உன் சகோதரர்களுக்குக் கட்டளையிட்டார் உன் தந்தை. அதற்கு அவர்கள் ஒப்பவில்லை. உன் தந்தையின் கட்டளையை மீறிய உன் சகோதரர்களையும் உன் தாயையும் வெட்டினாய். பிறகு சினம் தணிந்த உன் தந்தையிடம் இருந்தே
அவர்களை மீண்டும் உயிர் பெறுவதை வரமாகப் பெற்றாய். பிறகு உன் தாயும் உனக்கு வரங்களைக் கொடுத்தாள். 4. உன் தந்தை உன் தாயின் விருப்பத்திற்கு இணங்க தோத்திரங்களால் தேவலோகத்தில் இருந்து காமதேனுவை ஆசிரமத்திற்கு வரவழைத்தாய். பின் உன் தந்தையின் கட்டளைப் படி ஆசிரமத்தில் இருந்து கிளம்பி இமயம்
சென்று அங்கு சிவபெருமானை வழிபாட்டு, அவரிடம் இருந்து கோடாரியைப் பெற்று பின் அவர் கூறிய அசுரனைக் கொன்று, மேலும் ப்ரம்மாஸ்த்திரம் முதலிய அஸ்திரங்களைப் பெற்று அக்ருதவ்ரணன் என்ற முனிவரை நண்பராகப் பெற்று உன் ஆசிரமத்திற்குத் திரும்பினாய். 5. கார்த்தவீர்யார்ஜுனன் வேட்டை ஆட காட்டிற்கு
வந்திருந்தான். பின் உன் ஆசிரமம் வந்தான். அப்போது உன் தந்தை காமதேனுவின் அருளால் பெற்ற பொருள்களைக் கொண்டு அவனை நன்கு உபசரித்தார். தன நகருக்குச் சென்ற அரசன், அமைச்சர்களின் துற ஆலோசனையைக் கேட்டு அந்தப் பசுவை விலைக்கு வாங்கி வரும்படி ஒரு அமைச்சரை அனுப்பினான். உன் தந்தை கொடுக்க
மறுக்கவே, அந்த அமைச்சர் பசுவை பலாத்காரமாகக் கவரப் பார்த்தான். அப்போது தடுத்த உன் தந்தையை கொன்றான். அதனால் மிகவும் சினம் கொண்ட காமதேனு அமைச்சருடன் வந்த படைகள் கூட்டத்தை அழித்தது. இருப்பினும் எப்படியோ அந்த அமைச்சர் காமதேனுவின் கன்றினைக் கவர்ந்து சென்று விட்டான்.
6.பிறகு
சுக்கிராச்சாரியார் உதவியால் உயிர் பிழைத்த உன் தந்தையின் மூலம் நடந்ததைக் கேட்டு கடுஞ்சினம் கொண்டாய். நீ சிவனை நோக்கிப் பிரார்த்தித்ததும் அவர் மகோதரன் மூலம், குதிரை சாரதிகளுடன் கூடிய தேரை அனுப்ப, நீ தேரில் எறிக் கொண்டு அவரால் கொடுக்கப்பட்ட கோடரியையும், வில்லையும், அம்புகளையும்
எடுத்துக் கொண்டாய். பிறகு நண்பனோடு தேரில் அமர்ந்து கொண்டு மாஹிஷ்மதீ என்ற நகரத்திற்குச் சென்று கன்றினை திருப்பிக் கொடுத்து விடுமாறு இனிய சொற்களால் அறிவுரை அளித்தாய். அரசன் கன்றினைக் கொடுக்க மறுக்கவே போரினைத் தொடங்கினாய். 7. கார்த்தவீர்யார்ஜுனன் பதினாயிரம் மக்களோடும், பதினேழு
அக்குரோணிப் படைகளோடும், பெரும் படைத் தலைவர்களோடும், பல நண்பர்கள் கூட்டங்கலோடும் போரில் உன்னை எதிர்த்தான். அப்போது உன் கோடரியாலும், அம்புகளாலும் அவனுடைய படைகள் அனைத்தையும் சிதறடித்தாய். அச்சத்தால் ஓடியவர்களும், இறந்தவர்களும் போக எஞ்சியிருந்தவர்களுடன் திரும்ப போருக்கு வந்தான்.
8. கார்த்தவீர்யார்ஜுனனுக்குக் கரங்கள் ஆயிரம். பராக்க்ரமம் நிறைந்த அவன் ஒரு முறை ஜலக்கிரீடைக்காக நர்மதை நதியை தன் ஆயிரம் கரங்களால் ஆணை போட்டு தேக்கினான். நதிக் கரையில் பூஜை செய்து கொண்டிருந்த ராவணனை அந்த நீர் தேக்கத்தில் மூழ்கடித்து திக்குமுக்காடச் செய்தான். இதனால் அவனது கர்வம்
ஒடுங்கியது. அப்படிப்பட்ட பராக்கிரமம் கொண்ட கார்த்தவீர்யார்ஜுனன் ஆயிரம் கைகளினால் பல அச்திரசச்திரங்களை உன் மேல் ஏவிய பொது நீ எதிர்த்து நிற்க அவன் ஏவிய விஷ்ணு சக்கரம் செயல் படாமல் போனது. அப்பொழுது அவன் உன்னை ஹரியே என்றறிந்து மகிழ்ச்சியோடு தியானித்தான். அந்தத் தியானத்தினால் பாவங்கள்
அனைத்தும் நீங்கி தூயவன் ஆனான். நீ அவனைக் கொன்றாய். அவனும் உன் சிறந்த இடமான வைகுண்டத்தை அடைந்தான். 9. மறுபடியும் சினம் உற்ற அவன் மக்கள் உன் தந்தையைக் கொன்றார்கள். உன் தாயான ரேணுகா தேவி மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள். அப்பொழுது நீ கடுமையான பிரதிஞ்ஞை எடுத்துக் கொண்டாய்.
தியானத்தினால் தேரையும், கோடரியையும், ஆயுதங்களையும் வரவழைத்து, எல்லாத் திசைகளிலும் இருந்த, அந்தணர்களின் பகைவர்களான சத்திரியர்களை கோடரியால் சிதைத்தும், அம்புகளால் கொன்றும் பூமியில் சத்திரியர்களே இல்லாதபடி செய்தாய். 10. பிறகு நீ இறந்த உன் தந்தையைப் பிழைப்பித்தாய். 21 தலைமுறை
க்ஷத்திரிய குலத்தை வென்றாய். சமந்த பஞ்சகம் என்ற இடத்தில் இரத்த மடுவில் பித்ருகளுக்குத் தர்ப்பணம் செய்தாய். மேலும் செய்த வேள்விகளில் காசியபன் முதலிய முனிவர்களுக்கு நிலத்தை தட்சணையாக வழங்கினாய். பிறகு சால்வ அரசனோடு போர் மூண்டு உக்ரமடைந்த போது, சனத்குமாரர்கள் 'கிருஷ்ணன் இவனைக்
கொல்வான்' என்று தடுத்ததினால் அப்போரை நிறுத்தி அமைதியுற்றாய். 11. பிருகு குலத்தின் தலைவனே! குருவாயூரின் இறைவனே! பிறகு நீ ஆயுதங்கள் எல்லாம் துறந்து மகேந்திர மலைக்குச் சென்று தவம் செய்யத் தொடங்கினாய். அப்போது கோகர்ணம் வரை நிலம் கடலுக்குள் மூழ்கியது. அதனால் முனிவர்களின் வேண்டு
கோளுக்கு இணங்கி உன் தபோ வலிமையால் வரவழைத்த வில்லில் அக்னேயாச்திரத்தைத் தொடுத்தாய். அதைக் கண்டு கடல் அஞ்சி நடுங்க, நீ ஸ்ருவத்தை (வேள்வியில் நெய் எடுத்து ஊற்றுவதற்குரிய துடுப்பு) கடலில் எறிந்து அது விழுந்த இடம் வரை கடலை விலகச் செய்தாய். இப்படியாக கேரளத்தை காப்பாற்றி நிலைபெறச்
செய்தாய். அத்தகைய நீயே என்னைக் காத்தருள வேண்டும்.
#தசகம்_37
கிருஷ்ண அவதாரத்தின் தொடக்கம் 1. ஹரியே! முழுமையான ஆனந்தத்தின் வடிவே! நீண்ட காலத்திற்கு முன்பு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே நடந்த போரில், அசுரர்களில் சிலர், உன்னால் கொல்லப்பட்டாலும், எஞ்சிய கர்மாக்களால் விடுதலை பெறவில்லை. அதனால் அவர்கள் மீண்டும் பூமியில் பிறந்தனர்
பூமித் தாய் அவர்களின் சுமையால் மிகவும் வேதனையடைந்து, பிரம்மாவிடம் அடைக்கலம் தேடி சென்றாள். தேவர்கள் ஏற்கனவே அவரது இருப்பிடத்தை அடைந்திருந்தனர். 2. தீய எண்ணம் கொண்டவர்களின் அபரிமிதமான பாரத்தால் நசுக்கப்பட்டு, சோகக் கடலில் மூழ்கியுள்ளேன். என்னுடைய இந்த அவல நிலையை இங்குள்ள
தேவர்களிடம் கேளுங்கள்' என்று பூமி புலம்பியது. என்னைக் காப்பாற்றுங்கள் என்றால் பூமாதேவி. ஆண்டவரே! பூமியை மிகவும் உதவியற்ற நிலையில் பார்த்ததும், அங்கு கூடியிருந்த தேவர்களின் முகங்களையும் பார்த்து, பிரம்மன் உன்னையே தியானித்தார். 3. தாமரையில் பிறந்த பிரம்மா, பூமித் தாய் சொல்வது உண்மை
என்று தேவர்களிடம் கூறினார். தேவர்கள் மற்றும் பூமியின் பாதுகாப்பு விஷயத்தில், மகா விஷ்ணு மட்டுமே வல்லவர். எனவே அவர்கள் அனைவரும் மற்றும் பிரம்மா, சிவன் தலைமையில் விரைவாக அங்கிருந்து பாற்கடலுக்குச் சென்று, அவர் முன் சாஷ்டாங்கமாக வணங்கி, அவருடைய பெருமையைப் பாடுவார்கள். எனவே அவர்கள்
ஒன்றாக உமது இல்லத்திற்குச் சென்றனர். 4. இனிய தென்றல் வீசும் பாற்கடலின் கரைக்கு இருவரும் சேர்ந்து சென்றனர். அவர்கள் அங்கே நின்று, உன் பாதங்களில் மனதை நிலைநிறுத்தி, தியானம் செய்து கொண்டிருக்கையில், பிரம்மதேவன் மட்டுமே உன் திருமொழியை உள்ளத்தில் உணர்ந்து எல்லாரையும் மகிழ்விப்பவராக,
நாராயணன் தானே நேரில் எனக்கு உரைத்த அந்த வார்த்தைகளைக் கேட்கச் சொன்னார். 5. "கொடூரமான அரசர்களால் தேவர்கள் மற்றும் பூமியின் சோக நிலையை நான் அறிவேன். அதை நீக்குவதற்காக நான் யாதவ குலத்தில் எனது அனைத்து சக்திகளுடன் (முழு அவதாரமாக) பிறப்பேன். தேவர்கள் அவர்களின் அம்சத்தோடு விருஷ்ணி
குலத்தில் பிறப்பார்கள். அவதாரமாக, தேவர்களின் மனைவிகளும் எனக்கு சேவை செய்ய பூமியில் பிறப்பார்கள்." பிரம்மா தேவர்களுக்கும் பூமிக்கும் இவ்வாறு உமது வார்த்தைகளைக் கூறினார். 6. காதுகளுக்கு அமிர்தம் போல இருந்த உன் இரக்கச் செய்தியைக் கேட்டு அவர்கள் அனைவரும் மனம் துக்கத்திலிருந்து
விடுபட்டு, மிகவும் மகிழ்ச்சியடைந்து, உன் இனிமையான வார்த்தைகளால் திருப்தியடைந்து சென்றனர். உன் பிரசன்னத்தால் மிகவும் புனிதமானதாகக் கூறப்படும் மதுராவின் புகழ்பெற்ற நகரத்தில், தேவகாவின் நல்லொழுக்கமுள்ள மகளான தேவகி, சூரசேனனின் மகனான மன்னன் வசுதேவனை மணந்தாள். 7. திருமணம் முடிந்ததும்
தேவகியின் அண்ணன் காமன், அந்தத் தம்பதியினரைக் கௌரவிப்பதற்காகத் தேரோட்டியாகி, தேரில் வீதியுலா வந்தனர். வானத்திலிருந்து எழுந்த உன் குரல், "மிகவும் பொல்லாதவனான உன்னை இவளது எட்டாவது மகன் கொல்வான்" என்று சொன்னது. உடனே கம்சன் அச்சத்தால் அருகில் இருந்த தேவகியைக் கொல்ல வாளை உருவினான்.
8. தேவகியை அவளது முடியால் பிடித்துக் கொண்ட தீய மனம் கொண்ட கம்சன், வசுதேவன் பலமுறை சமாதானம் செய்தும் அவளை விடுவிக்கவில்லை. பின்னர் வசுதேவரின் குழந்தைகளை அவனிடமே ஒப்படைத்து விடுவதாக வாக்குறுதி அளித்தவுடன் கம்சன் தேவகியை விட்டு விட்டு திருப்தியடைந்து வீட்டிற்குச் சென்றான். முதலில்
பிறந்த குழந்தையை வாக்குறுதியளித்தபடி கம்சனிடம் கொடுத்தவுடன் அவன் அன்பினால் குழந்தையைக் கொல்லவில்லை. தேவனே! பொல்லாதவர்கள் கூட எப்போதாவது ஒருமுறை இதயத்தில் மிகவும் இரக்கமுள்ளவர்களாக காணப்படுகின்றனர். 10. அந்த நேரத்தில், உன் விருப்பத்தின் பேரில் நாரத முனி, போஜ மன்னன் கம்சனிடம், உன்
குலம் அசுரர் குலம். யாதவர்கள் தேவர்கள். இதை நீ அறியவில்லையா என்று கேட்டார். மாயாவியான ஹரியே உன்னைக் கொல்ல அவதரிக்கப் போகிறான். இதைக் கேட்ட கம்சன் யாதவர்களை விரட்டிவிட்டு வசுதேவரின் மகன்களைக் கொன்றான். 11. ஏழாவது கர்ப்பமாகஉருவான ஆதிசேஷனை யோகமாயை உன் கட்டளைப்படி ரோஹினியின்
கர்பத்தில் கொண்டு சேர்த்தாள். ஓ மாதவா, சச்சிதானந்த வடிவாகிய நீ தேவர்களால் தேவகியின் வயிற்றில் பிரவேசித்து தேவர்களால் துதிக்கப் பட்டாய். அந்த நீயே கிருஷ்ணா! நோய்களின் தொகுப்பை நீக்கி, எனக்கு உயர்ந்த பக்தியைக் கொடுத்து அருள வேண்டும்.
#தசகம்_38
கிருஷ்ண அவதாரம் 1. ஆனந்த வடிவே! பகவானே! உன் அவதாரத்துக்கு உரிய காலம் நெருங்கியது. உன் திருமேனியில் இருந்து கிளம்பிய ஒளிக் கூட்டமானது மழைக் காலத்தில் மேகக் கூட்டங்கள் வான வெளியில் வியாபித்திருக்கும் தன்மையை ஒத்திருந்தது. 2. மழைப் பெருக்கால் திசைகள் எங்கும் குளிர்ச்சியை
அடைந்தன. நல்லோர் விரும்பியது கை கூடியதால் பெரு மகிழ்ச்சியை அடைந்தனர். அப்பொழுது நள்ளிரவில் சந்திரன் உதயமாகும் வேளையில் மூன்று உலகங்களின் துன்பங்களை அழிப்பவனாகிய நீ இவ்வுலகில் தோன்றினாய். 3. உருவில் குழந்தையாக இருந்தாலும், சர்வ லட்சணத்துடன், ஒளி பொருந்திய கிரீடம், கைவளை, தோள்வளை
ஹாரம், முத்து மாலை, சங்கு சக்கரம், தாமரை மலர், கதாயுதம் ஆகியவற்றைத் தாங்கிய நீலமேகவர்ண திருமேனியாய் பிரசவ அறையில் சிறந்து விளங்கினாய். 4. ஹே வாசுதேவா! உன் மார்பில் சுகமாக வீற்றிருக்கும் அழகான லக்ஷ்மியின் சற்றே மலர்ந்த கடைக்கண் பார்வையின் வீச்சுகளால் அந்தப் பிரசவ அறையில் கொடியவனான
கம்சனால் ஏற்படுத்தப் பட்டிருந்த சௌந்தர்யமின்மையை போக்குபவன் போல நீ மங்களகரமாக காட்சி அளித்தாய். 5. அறிஞர்களான முனிவர்களின் அறிவுக்கும் எட்டாமல் மிகத் தொலைவில் இருக்கும் உன் திருமேனியை வசுதேவன் தன் இரண்டு கண்களால் கண்டான். அப்பொழுது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி ரோமங்களில் .
சிலிர்ப்பு உண்டானது. தொண்டை தழுதழுத்தது. அவ்வாறு வசுதேவன் மனம் கனிந்தவனாய், கண்களுக்கு மலர்த்தேன் போல காட்சியளித்த உன்னைத் துதித்தான். 6. அவன், தேவனே! புருஷோத்தமனே! துன்பச் செடிகளை சேதிப்பவனே! அனைவரையும் ஆள்பவனே! உன் அருள் நிறைந்த கடைக் கண் பார்வையால் எங்கள் துன்பம் நீங்க வேண்டும
என்று மகிழ்ச்சியோடு வெகு நேரம் பிரார்த்தித்தான். 7. உன் தாய் தேவகி, தன் கொடி போன்ற உடல் நனையும்படி ஆனந்தக் கண்ணீர் பெருக, உன் குணங்களை தோத்திரங்களால் புகழ்ந்து துதித்தாள். நீ, அவ்விருவருக்கும், முன்பு எடுத்த இரண்டு பிறவிகள் பற்றியும் அறிவித்தாய். பின், உன் தாயின் சொற்படி மானிடக்
குழந்தை வடிவத்தை எடுத்துக் கொண்டே. (முன்பு எடுத்த இரு பிறவிகள், பிருஷ்ணி சூதபஸ் தம்பதியர்களுக்கு பிருஷ்னிகர்பனாகவும், அதிதி காசியபருக்கு வாமனனாகவும் எடுத்தப் பிறவிகள்.) 8. அதன் பின் நீ உன்னை நந்தகோபனின் வீட்டில் விட்டு விட்டு அவர் மகளான யோகமாயையை உன் இடத்தில் வைக்கும்படி வசுதேவனை
ஏவினாய். உடனே அவர் உயர்ந்தோர்கள் தங்கள் உள்ளத்தில் தியானிக்கத் தகுந்தவனும் தாமரை மலரில் இருக்கின்ற அன்னக் குஞ்சினைப் போல் அழகானவனும் ஆனா உன்னைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டார். 9. அப்பொழுது யோக மாயையின் பிரபாவத்தால் நகர மக்கள் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இதில் வியக்கத் தக்க
விசேஷம் என்னவென்றால் உயிரற்ற நன்றாக இறுக்க மூடப்பட்டிருந்த கதவுகளும் தாங்களாகவே திறந்து கொண்டு விட்டன. அவை எல்லாம் உன் ஏவலினாலேயே நடந்தவை. 10. பின் பாக்கியசாலியான வசுதேவன் உன்னை எடுத்துக் கொண்டு மெல்ல புறப்பட்டார். அப்பொழுது ஆதிசேஷன் தன் படங்களை மழைக்குக் குடையாகப் பிடித்தபடி
உன்னுடன் வந்தான். அந்த நள்ளிரவில் ஆதிசேஷனின் படங்களில் இருந்து ரத்தினங்கள் விளக்குகளாகி வழிகாட்டின. ஈசனே! அத்தகைய நீயே என் பணிகளின் கடுமையை (வலியை) அழிக்க வேண்டும்.
#தசகம்_39
யோகமாயையின் தோற்றமும் கண்ணனின் பிறந்த நாள் விழாவும் 1. வசுதேவன் உன்னைத் தூக்கிக் கொண்டு செல்லும் போது, யமுனை நதி வெள்ளத்தால் நிரம்பியிருப்பதைக் கண்டார். ஆனால் அந்த மாபெரும் வெள்ளப் பெருக்கு, தெய்வீக சக்தியால், வியக்கத் தக்க வகையில் கால்களை நனைக்கும் அளவு ஆழத்திற்கு
குறைந்தது. 2. வசுதேவன், பசு மேய்ப்பவரான நந்தகோபன் வீட்டிற்குள் நுழைந்தார். பசுகளை பராமரிக்கும் பெண்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த அவ்விடத்தில் அனைத்து கதவுகளும் திறந்திருந்தன. சின்னப் பெண் குழந்தை மெதுவாக அழுதது. உன்னைப் படுக்கையில் வைத்து, யோக மாயா என்ற பெண் குழந்தையை எடுத்து
கொண்டு விரைவாக மதுரா நகருக்குச் சென்றார். 3. பின் உன் சகோதரியின் அழுகையால் வேலைக்காரர்கள் எழுந்து கம்சனுக்கு பிரசவ செய்தியை அறிவித்தனர். அவன் குழப்பத்துடன் அங்கு விரைந்து வந்தான். சகோதரியின் கைகளில் ஒரு பெண் குழந்தையை மட்டுமே பார்க்க முடிந்தது. 4. இது தந்திரமான விஷ்ணுவால் செய்யப
பட்ட மாயம் என்று முடிவு செய்தான் கம்சன். தன் சகோதரியின் கைகளிலிருந்து, குளத்திலிருந்து ஒரு பெரிய யானை தாமரை மொட்டை அசுரத்தனமாக கொய்வது போல குழந்தையைப் பறித்தான். பிறப்பும் இறப்பும் இல்லாத உன் தங்கையை கல்லில் அடித்து நொறுக்க கையை ஓங்கினான். 5. ஆனால் யோகமாயா கம்சனின் கைகளிலிருந்து
நழுவினாள். உன் பக்தன் யமனின் பாசக் கயிற்றில் இருந்து நழுவுவது போல அவள் மிகவும் வித்தியாசமான வடிவத்தை எடுத்துக் கொண்டு, வானில் உயர்ந்து, 8 கரங்களில் ரம்மியமான ஆயுதங்களை ஏந்தி ஜொலித்தாள். 5. பகவானே! உன் சகோதரி கம்சனிடம், ஓ கொடூரமான கம்சா! என்னைக் கொன்று என்ன சாதிக்கப் போகிறாய்?
உன்னை கொல்லப் போகிறவன் ஏற்கனவே வேறொரு இடத்தில் பிறந்து விட்டான். இப்போதிருந்து உன் நலனைப் பற்றி கவலைப்படத் தொடங்கு என்று சொல்லிவிட்டு மறைந்தாள். அவள் எல்லா தேவர்களாலும் போற்றப் பட்டாள். மேலும் அவள் பல கோவில்களில் வழிபடப் படுகிறாள். 6. மறுநாள் காலை ஆணவ அசுரர்களான
பிரலம்பா, பாகா
பூதனை ஆகியோர், யோகமாயா கம்சனிடம் உரைத்த சொற்களை கம்சன் சொல்லக் கேட்டு அறிந்து, உன்னைக் கொல்ல வேண்டும் என்ற உன்னைத் தேடி அலைய ஆரம்பித்தனர். அனைத்து குழந்தைகளையும் கொன்றனர். கருணை இல்லாத மனிதர்களால் செய்ய முடியாதது உலகில் ஒன்றும் இல்லை. 8. ஓ பகவான் முகுந்தா! யசோதையின் படுக்கையில்
அவளருகில் படுத்திருந்த நீ உன் கை கால்களை அசைத்து ஓசை ஏற்படுத்தியதும், எல்லா பெண்களும் எழுந்து பார்த்து நந்தகோபருக்கும் யசோதைக்கும் மகன் பிறந்ததை அனைவருக்கும் தெரிவித்தனர். இதைக் கேட்டதும் மொத்த கோகுலமும் மகிழ்ச்சியில் மூழ்கியது. 9. என்ன அற்புதம்! யசோதை பூமியில் உள்ள அனைவரையும்
விட பாக்கியவதி ஆனாள். புதிய நீல தாமரை போல் அழகாக இருந்த உன்னை உன்னிப்பாக திருப்தி அடையும் வரை உன் அழகை அவள் கண்களால் பார்த்து மகிழ்ந்தாள். பின்னர் உன் பூப் போன்ற உடலை வருடியபடி மெல்ல மெல்ல அவள் உனக்குப் பாலை புகட்டினாள். 10. நந்தகோபர் அளவிட முடியாத மகிழ்ச்சியுடன் பிராமணர்களுக்கு
அனைத்து வகையான தானங்களை, உன் நலனை உறுதிப்படுத்த அளித்தார். அது போலவே உன் நலனுக்காக பசு மேய்ப்பவர்களும் பல புண்ணியச் செயல்களைச் செய்தனர். மேலும் மூன்று உலகங்களுக்கும் நன்மையை வழங்கும் இறைவனே, என் நோய்களில் இருந்து என்னைக் காப்பாற்றி இரட்சிக்க வேண்டும்.
#தசகம்_40
பூதனை மோக்ஷம் 1. பேரரசனுக்குக் கப்பம் கட்டும் பொருட்டு மதுராபுரிக்கு வநதிருந்த உன் தந்தை வசுதேவன் கம்சனுக்கு உதவி புரியும் அவனைச் சார்ந்தவர்கள் மேற்கொண்டுள்ள தீய முயற்சிகளைப் பற்றி, நற்குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான நந்தகோபன் இடம் தெரிவித்து, மேலும் பின்வருமாறு
கூறினார். 2. நண்பனே உனக்குப் பிள்ளை பிறந்ததை, எனக்குப் பிள்ளை பிறந்ததை போல் எண்ணி மகிழ்கிறேன் என்று யாதவ நாயகரிடத்தில் உன்னைப் பெற்றதை பற்றிக் கூறி ஆதரவுடன் கொண்டாடினார். 3. மேலும், இவ்விடத்தில் நூற்றுக் கணக்கான தீய சகுனங்கள் தோன்றுகின்றன. ஆதலால் கோகுலத்துக்கு விரைந்து செல்வாய்
நந்தகோபரிடம் சொன்னார். உடனே நந்தகொபரும் உனக்குத் தீங்கு உண்டாகக் கூடும் என்ற அச்சத்தால் கோகுலத்துக்கு விரைந்து வந்து சேர்ந்தார். 4. ஏ மாயக் குழந்தையே! அப்பொழுது பெண் ஒருத்தி கோகுலத்தில் உன் அருகில் வந்தாள். அவள் வண்டுகள் மொய்த்தக் கூந்தலையும் அழகிய உருவத்தையும் கொண்டிருந்தாள்.
5. அவள் அரக்க குலத்தில் பிறந்த பூதனை என்ற பெயருடையவள். குழந்தைகளின் உயிரைப் பரிப்பவள். இறைச்சிகள் அவளைப் பார்த்து, இவள் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், அவள் உன்னைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டாள். 6. அந்தப் பூதனை தன் நடை, உடை, பாவனைகளால் அந்த இடைச்சியர்கள் மனத்தைக்
கவர்ந்தாள். அதனால் தடையில்லாமல் வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டு கபட ரூபியாகிய உனக்கு பால் புகட்ட தன் மார்பகத்தைக் கொடுத்தாள். 7. உடனே, குழந்தைகளிக் கொல்லும் அவளைக் கண்டு கடும் சினம் கொண்ட நீ அச்சம் இல்லாமல் அவள் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாய். பின் பெரிய மாம்பழத்தைப் போன்றதும்,
கொடிய நஞ்சினால் அழிவைக் கொடுக்கக் கூடியதுமான அவளுடைய மார்பகத்தை அடியோடு அதாவது அவளுடைய உயிரையும் சேர்த்துக் குடித்தாய். 8. முளை குடிக்கையில் கூடவே உயிரையும் சேர்த்து பருகி விட்டதால் அந்தப் பூதனை பேரிடியைப் போல குரலை எழுப்பி அச்சம் தரக் கூடிய உண்மையான வடிவத்தைக் கொண்டாள். பின்
இருபுறமும் இரண்டு கைகளை விரித்து மல்லாந்து கீழே விழுந்தாள். 9. கோகுலத்தில் இடையர்கள் பலர் அச்சத்தைத் தந்த குரலைக் கேட்டும், அதிலும் பயங்கரமான அசுர உடலைக் கண்டும் திடுக்கிட்டு உணர்வற்று நின்றார்கள். அப்பொழுது, அந்தப் பூதனையின் மார்பில் விளையாடிக் கொண்டிருந்த உன்னை அந்த கோபியர்கள்
ஓடிவந்து தூக்கிக் கொண்டார்கள். 10. உலகில் மங்கள வடிவமாக விளங்குபவனே! குருவாயூரின் தலைவனே! பெண்மணிகள் உன் திருப்பெயரைக் கொண்டே உனக்குப் பலவகையிலும் காப்புச் செய்தார்கள். அத்தகைய நீயே என்னை நோய் இல்லாதவானாக்கி, உன் தொண்டனாகச் செய்தருள வேண்டும்.
#தசகம்_41
பூதனையின் உடலை எரித்தாலும், கண்ணனைக் கொண்டாடி மகிழ்தலும் 1. கோகுலத்தின் தலைவன் நந்தகோபர், வசுதேவரின் வார்த்தைகளைக் கேட்டு, அவசரமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு விவரிக்க முடியாத வடிவம் கீழே விழுந்து சுற்றியிருந்த மரங்களையெல்லாம் நசுக்குவதைக் கண்டார்.
சிதானந்த ஸ்வரூபியான உன்னை மனத்தில் சரணடைந்தார். 2. பூதனையின் முழுச் சம்பவத்தையும் கோபிகைகளிடமிருந்து கோபர்கள் அறிந்தனர், அவர்கள் பயத்தாலும் ஆச்சரியத்தாலும் திகைத்துப் போனார்கள். பின்னர் அவர்கள் உன்னால் கொல்லப்பட்ட பயங்கரமான அசுரனின் உடலை கோடரியால் துண்டு துண்டாக வெட்டி தூரத்தில்
எறித்தனர். 3. நீ பருகியதால் பரிசுத்தம் ஆக்கப்பட்ட பூதனையின் உடல் எரிக்கப்பட்டபோது வானத்தில் பெரிய அளவிலான புகை எழும்பி, அது அகில் கட்டையில் இருந்து தோன்றியதா, சந்தனக் கட்டையில் இருந்து தோன்றியதா குங்கிலியத்தில் இருந்து பிறந்தததா என்று மக்கள் மனதில் சந்தேகத்தை உண்டாக்கும்
அளவுக்கு மணத்தது. 4. தூய்மையான பெயர்களை உடையவனே!
மாடு மேய்க்கும் குலத்தில் உயர்ந்தோருக்கு உனது உடலுடன் தொடர்பு கொண்ட பலன்கள் வெகு தொலைவில் இல்லை என்றும், அவர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என்றும் அறிவித்தாய். பூதனையின் நறுமணம், ஆசிகள் வழங்குவது, அதை நிரூபிக்கும் விதமாக இருந்தது.
5. இடையர்கள், குழந்தை அரக்கனால் எப்படி கொல்லப்படவில்லை என்று ஆச்சரியப்பட்டனர். அதை விட ஆச்சர்யம் ஆபத்து வரும் என்று வசுதேவர் முன்னறிவித்தது. இதை உணர்ந்து, உனது முகத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் அவர்கள் முழுமையாக மூழ்கினர். 6. ஓ வாசுதேவா! நீ கோகுலத்தில் தங்கியிருந்ததன் விளைவாக
நாளுக்கு நாள் இந்த கோகுலம் செழிப்புடனும் குறைவில்லாத ஐஸ்வர்யத்துடனும் வளர்ந்தது. மகிழ்ச்சியும் அழியாத அறமும் எங்கும் பிரகாசித்தது. 7. அவரவர் வீடுகளில் அழகான கோபிகைகள் உனது வசீகரமான வடிவத்தையும் புன்னகையையும் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். அவர்கள் தங்கள் அன்றாட வேலைகளை
முடித்துவிட்டு, உன்னைப் பார்க்க மிகுந்த மகிழ்ச்சியுடன் கூடியிருந்தனர். 8. குழந்தை என்னை தான் உற்றுப் பார்த்தது, அவனுடைய புன்னகை என்னை நோக்கி வருகிறது, வா, என்னிடம் வா, இவ்வாறு அவர்கள் உன்னைப் பிடிக்க கைகளை நீட்டினர். கண்ணா! கோபிகைகள் அன்புடன் என்ன செய்யவில்லை. 9. அவர்கள்
ஒவ்வொருவரும் உன் திருமேனியைத் தொட ஆவலுடன் உன்னைக் கையிலிருந்து கைக்குக் கடந்து சென்றார்கள். அவர்கள் அவ்வாறு செய்யும்போது, நீ ஒரு செந்நிற தாமரையிலிருந்து மற்றொரு தாமரைக்கு மாலையில் கட்டப்பட்ட தேன் வண்டு போலத் தெரிந்தாய். 10. ஓ ஹரியே! நந்தனின் மனைவியான யசோதா, உன் சிரித்த முகத்தில
கண்களை நிலைநிறுத்தி, உனக்கு முலைப்பால் ஊட்டிக் கொண்டும், எத்தகைய மகிழ்ச்சி நிலைகளை அடையவில்லை! ஹரி பகவானே! அத்தகைய நீயே எல்லா நோய்களிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக.
#தசகம்_42
சகடாசுர வதம் 1. பிரபுவே! ஒரு சமயம் உனது பிறந்த நாளில், கோகுலத்தின் ராணியான யசோதா, உறவினர்களையும் அவர்களது மனைவிகளையும், பிராமணர்களையும் அழைத்திருந்தாள், உன்னை ஒரு பெரிய வண்டியின் அருகே வைத்து விட்டு, சமையலறையில் விருந்து ஏற்பாடு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டாள்.
2. அப்போது, உன் அருகிலிருந்து, உன்னைக் காக்க நியமிக்கப்பட்ட பல்வேறு சிறுவர்களின் பயமுறுத்தும் அழுகைகளும் குழப்பமான குரல்களும் கேட்டன, அவற்றோடு முறிந்த மரங்களின் சடசட என்ற பேரொலியும் தோன்றியது. 3. கோபியர்கள் அந்த ஒளியை கேட்டுப் பரபரப்போடு ஒடி வந்ததில் அவர்களின் மாற்பகங்ககள்
துடித்தன. நான்கு பக்கங்களிலும் அச்சத்தைத் தரும்படி வீழ்ந்திருந்த மரங்களுக்கு நடுவில் உன்னைக் கண்டார்கள். 4. நந்தகோபனும் இடையர்களும் அந்தணர்களும் ஐயோ குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டுக் கொண்டே கண்ணீர் பெருகும் கண்களுடன் விரைந்து ஒடி வந்தார்கள். யசோதையின் கைகளில் உன்னைக்
கண்டதும் ஆறுதல் அர்தைந்தார்கள். 5. அவர்கள், என்ன இது,என்ன இது, எப்படி ஆயிற்று? பெரிய வண்டி உடைவதற்கு இவ்விடத்தில் காரணம் ஒன்றும் இல்லையே என்று தங்கள் மூக்கின் மேல் கையை வைத்துக் கொண்டு உன்னையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். 6. உனக்குக் காவலர்களாக இருந்த சிறுவர்கள், பால் பருக
வேண்டி இந்தக் குழந்தை தாமரை மலர் போன்ற மென்மையான கால்களை ஆட்டி உதைத்ததால் வண்டி குடை சாய்ந்து தலை கீழாக விழுந்து முறிந்தது. இதை நாங்கள் பார்த்தோம் என்று சொன்னார்கள். 7. அப்பொழுது உன் பெருமையை அறியாதவர்கள், அச்சத்தால் ஒன்றும் அறியாத சிறுவர்கள் உளறுகிறார்கள் என்று உரைத்தார்கள்.
ஆனால் பூதனையைக் கண்டதால் நந்தன் முதலியவர்கள் சிறிது ஐயம் உற்றார்கள். 8. கோபியர்கள், பவழம் போல் சிவந்த இந்தக் கால்கள் அடியுற்றதோ, தாமரை மலர் போல் அழகிய கையகள் முறிந்தனவோ என்று கருணை வெள்ளம் பெருக உன் திருமேனியைத் தொட்டுத் தடவினார்கள். 9. உலகின் தலைவனான இறைவனின் அருள் பெருக்கால்
என் குழந்தை காப்பாற்றப் பட்டுள்ளது. அதை இப்படி கொடு, என்று தன் கையில் எடுத்துக் கொண்ட உன் தந்தை, பின் மயிர்கூச்செறிந்தவராய் உன் திருமேனியை அடிக்கடி தழுவிக் கொண்டார். 10. இவ்வாறு வண்டியில் ஒளிந்து கொண்டு, உன்னைக் கொல்ல வந்த அசுரனைக் கொன்றாய். அந்த அசுரன் தூய சத்வ வடிவமான உன்னிடம்
ஒன்றிவிட்டான். இது உறுதி.அதனால் தான் அவனுடைய துகள் கூட அங்கே காணப்படவில்லை. 11. குருவாயூரின் தலைவனே! அதன் பின் அவ்விடத்தில் பெரிதும் போற்றப்பட்ட அந்தணர்கள் உனக்குச் சிறப்பாக மங்கள வாழ்த்துகளை நல்கினார்கள். நீ உன் இளம் பருவத்திற்குரிய குறும்புகளால் கோகுலத்தை மகிழ்வித்துக்
கொண்டிருந்தாய். அத்தகைய நீயே என் பிணியை அகற்ற வேண்டும்.
#தசகம்_43
திருணாவர்த்த வதம் 1. குருவாயூரின் தலைவனே! ஒரு நாள் உன் தாயான யசோதை உன்னை மடியில் வைத்துக் கொண்டிருக்கையில் திடீரென்று நீ கனமாக தோன்றவே ஆச்சர்யம் அடைந்தாள். உன் பாரத்தை மடி தாங்காமையால் உன்னை படுக்கையில் விட்டு விட்டு, இதென்ன அதிசயம் என்று நினைத்தபடி வீட்டு வேலைகளில்
ஈடுபடலானாள். 2. திருணாவர்த்தன் என்ற பேரசுரன் சுழல் காற்றின் வடிவத்தை பூண்டு, அச்சத்தைக் கொடுக்கக் கூடிய பேரொலியுடன் உயரே கிளம்பிய புழுதிகளின் படலத்தால் திசைகளை மறைத்தான். மக்களின் மனத்தை கவர்பவனான உன்னை எடுத்துச் சென்றான். 3. இடையர்கள், மிகுதியான் புழுதிகளால் உண்டான இருட்டினால்,
ஒன்றையும் காண முடியாமல் தவித்தார்கள். அப்பொழுது உன் தாயான யசோதை. ஐயோ குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டுக் கொண்டே உன்னை இட்ட இடத்திற்கு ஒடி வந்தாள். உன்னைக் காணாமல் கதறி அழுதாள். 4. அப்பொழுது அந்தப் பெரிய அசுரனால் உன் சுமையைத் தாங்க முடியவில்லை. அவன் நடையில் வேகம் குன்றி, உடல
சோர்ந்து, சுருங்கி அசையவும் முடியாதவன் ஆனான். அதன்பின் கோகுலத்தில் புழுதியும் ஒலியும் அடங்கின. உன் தாயின் அழுகைக் குரல் பெருகிற்று, 5. யசோதையின் அழுகையைக் கேட்டு, வீட்டிற்கு ஒடி வந்த நந்தன் முதலிய இடையர்கள் உன்னைக் காணாமல் கதறினார்கள். அப்பொழுது அந்த அசுரனோ, சோர்ந்து,
எல்லோருக்கும் மோட்சத்தை அளிப்பவனான உன்னை விட்டுவிட விரும்பினான். ஆனால் நீ அவனை உன் பிடியில் இருந்து விடவில்லை. அந்த அசுரனோ உன்னுடைய பாரத்தைத் தாங்க முடியாமல் உன் பிடியில் சிக்கி உன்னுடனேயே ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்தான். 6. அழுது கொண்டிருந்த கோபியர்கள் வீட்டிற்கு வெளியில்
இருந்த பாறைமேல் அவனுடைய உடல் விழுந்ததைக் கண்டனர். அந்த அசுரன் மார்பில், எந்த வித காயமும் அடையாமல் களைப்பும் இல்லாதவனாய் நன்கு சிரித்துக் கொண்டிருந்த உன்னைக் கண்டனர். 7. அந்தக் கொடிய அசுரன் பாறை மீது விழுந்ததனால் உடல் சிதைந்து உயிர் துறந்தான். அவன் மேல் நீ உன் தாமரைப் போன்ற
கையால் அடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாய். அப்பொழுது இடையர்களும் அருகில் வந்து பெருமலையில் இருந்து நீல மணியை எடுப்பது போல் உன்னை எடுத்துக் கொண்டார்கள். 8. ஓடிவந்த இடையர்கள் ஒவ்வொருவராக உன்னை எடுத்துத் தழுவிக் கொண்டார்கள். நந்தகோபர் முதலியவர் மகிழ்ச்சிப் பொங்க உன்
அவயங்களில் முத்தம் இட்டார்கள். அப்பொழுது கோபியர்கள் உன்னை எடுத்துக் கொள்ள விரும்பி நின்றதைக் கண்டு, அவர்களின் தாமரை மலர் போன்ற கைகளில் தாவி பாய்ந்தாய். அத்தகைய உன்னை துதிக்கின்றோம். 9. நாம் என்ன செய்வோம்? தன்னை வணங்கியவர்களின் துன்பங்களை அகற்றுபவனான கோவிந்தனே எங்கள் குழந்தையைக்
காத்தருள வேண்டும் என்று பெற்றோரும் கோபியர்களும் துதித்தார்கள். விபுவே! அவர்கள் அவ்வாறு உன்னைக் காக்க உன்னையே மறுபடியும் வேண்டினார்கள். 10. குருவாயூரின் தலைவனே! நீ சுழல் காற்றின் வடிவமாய் வந்த அசுரனை அழித்தாய். வாத நோயினின்று வந்த என் பிணிகளை ஏன் அழிக்கவில்லை? நான் என்ன செய்வேன்?
மறுபடியும் நான் எல்லாப் பிணிகளையும் மிச்சமில்லாமல் அகற்றும்படி அடிக்கடி உன்னை வேண்டுகிறேன்.
#தசகம்_45
பாலகன் கிருஷ்ணனின் விளையாட்டு 1. முராரி! நீயும் உன் சகோதரன் பலராமனும் நந்தகோபன் இல்லத்தில் எல்லா இடங்களிலும் கைகளையும் முழங்கால்களையும் ஊன்றிக் கொண்டு தவழ்ந்தீர்கள். அப்படி தவழும் போது, அசைந்த தாமரை மலர்கள் போன்ற திருவடிகளில் இருந்த சலங்கைகளின் இனிய ஒலியைக் கேட்க
விரும்பி மிக விரைவாகவும் அழகாகவும் தவழ்ந்தாய். 2. நீ மெதுவாக சிரித்ததனால் உன் பற்கள் சிறிது வெளியில் தெரிந்தன. முன் நெற்றியில் கேசக் கற்றைகள் விழுந்து உன் திருமுகத்தை மறைக்கின்றன. வஜ்ரம், அங்குசம் முதலிய லக்ஷணங்கள் பொருந்திய திருவடிகளோடும் புஜங்கங்களில் இருந்து நழுவி மனிகட்டுகளில
தங்கிய வளையல்களோடும் உன்னைக் கண்ட மக்களின் மனத்தை நன்கு கவர்ந்தாய். 3. வாசுதேவனே! ஆவலோடு மக்கள் கூட்டம் மகிழ்ச்சியோடு உன்னைத் தொடர்ந்து வந்தாது. அப்பொழுது இனிய ஒலி உண்டாகும்படி சிரித்துக் கொண்டு ஓடினாய். தாமரை மலர் போன்று மகிழ்ந்த முகங்களை திரும்பிப் பார்த்தாய். அப்பொழுது நீ
அளித்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 4. நீ விரைவாக ஓடும்போது கீழே விழுந்து உடம்பில் சேற்றைப் பூசிக் கொண்டாய். ஆகாயத்தில் இருந்து குற்றமற்ற முனிவர்கள் புன்னகையோடு உன்னை வணங்கினார்கள். அப்பொழுது, தாய்மார்கள் உன்னை எடுத்துக் கொண்டு அன்போடு இறுகத் தழுவி அடிக்கடி முத்தமிட்டார்கள்.
5. கபடமாக இடையனின் வேடம் பூண்டவனே!பால் சுரக்கும் பெரிய ஸ்தனங்களுடன் உன்னை மடியில்வைத்துக் கொண்டு உனக்குப் புல்லைக் கொடுக்கும் யசோதை பெற்ற பாக்கியமே பாக்கியம். நீ பாலைக் குடித்துக் கொண்டிருக்கும் போது இடையிடையே புன்முறுவலாலும், முல்லைப் பூ மொட்டுக்கள் போன்ற பற்களாலும் அழகாக
விளங்கிய உன் திருமுகத்தைக் கண்டு ரசித்தாள் யசோதை. 6. பிறகு நீ நடக்கத் தொடங்கினாய். ஆயச் சிறுவர்களோடு அருகில் இருந்த வீடுகளில் விளையாடிக் கொண்டு துடுக்குச் செயல்களைச் செய்தாய். வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் கிளி, பூனை, கன்றுகள் ஆகியவை பின் தொடர்ந்து சென்றாய். அப்பொழுது
இடையர்கள் சிரித்துக் கொண்டே பெரிதும் முயன்று உன்னைத் தடுத்தார்கள். 7. முரன் என்ற அசுரனைக் கொன்றவனே! கலப்பை ஏந்திய பாலராமனோடு நீ செல்லும் இடங்களில் எல்லாம் வீட்டு வேலைகளைப் பொருட்படுத்தாமல், குழந்தைகளையும் வேலையாட்களையும் மறந்து கோபியர்கள் தன் வயமிழந்த கண்களால் எப்பொழுதும் உன்னையே
கண்டு பரவசம் அடைந்தார்கள். 8. நீ கோபியர்கள் கொடுக்கும் புதிய வெண்ணெயை விரும்பி, மழலை மொழியில் இனிய பாடலைப் பாடிக் கொண்டும், சில இடங்களில் அழகாக ஆடிக் கொண்டும், இளம் பெண்கள் கொடுத்த நெய்யை தின்றுக் கொண்டும், சில இடங்களில் புதிதாகக் காய்ச்சிய பாலைப் பருகிக் கொண்டும் விளையாடினாய்.
9. தேவனே! நீ இரப்பதை விட்டு விட்டு தயிரையும், நெய்யையும் கவர்ந்தாய். அன்று பலியின் இல்லத்தில் இரக்க நேர்ந்தது. ஆனால் அபளைகளிடம் அப்படி செய்ய மாட்டேன் என்று முடிவு செய்து விந்தையான திருட்டு வழியில் ஈடுபட்டாயோ? 10. குருவாயூரின் தலைவனே! நீ தயிர், வெண்ணெய் திருடிய போதிலும் கோகுலத்து
பெண்கள் மனத்தில் சினமோ வருத்தமோ ஏற்படவில்லை. ஏனெனில் நீ அவர்களின் உள்ளத்தையும் கவர்ந்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடித்தாய். அத்தகைய லீலைகளை புரிந்த நீயே என் பிணிகளை தனித்தருள வேண்டும்.
#தசகம்_46
யசோதை, கண்ணனின் வாயில் உலகங்களைக் காணுதல் 1. தேவனே! முன்பு நீ தாயின் மடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு பாலை பருகிவிட்டு கொட்டாவி விட்டாய். அப்பொழுது யசோதை உன்னுடைய திறந்த வாயில் உலகம் அனைத்தையும் கண்டாள். 2. உலகின் தலைவனே! மற்றொரு சமயம் நீ குழந்தைகளோடு கூடி பழங்களைப்
பறித்து விளையாடிக் கொண்டிருந்தாய், அப்பொழுது அவர்களை ஏமாற்றி அவர்கள் சேர்த்து வைத்திருந்த பழங்களை உண்டு விட்டாய். அதனால் அக்குழந்தைகள் சினந்து நீ மண் உண்டதாக உன் தாயிடம் கோள் சொன்னார்கள். 3. விபுவே! நீ பிரளய காலத்தில் நிலம் நீர் முதலியவற்றை எல்லாம் விழுங்கும் ஆற்றல் உடையவன். அதை
அறியாத உன் தாய், மண்ணை உண்டதால் நோய் உண்டாகும் என்று அஞ்சி உன்னைக் கடிந்து கொண்டாள். 4. விபுவே! உன் தாய், துடுக்குப் பயலே, அங்கே மண்ணை உண்டாயா என்ன என்று வினவிய பொழுது நீ நீண்ட நேரம் சிரித்துக் கொண்டே இருந்து விட்டு, பின் அவர்கள் கூறியது பொய் என்று சத்தியம் செய்தாய். 5. மேலும்
உன் தாய், அடே எல்லாரும் உறுதியாகச் சொல்கிறார்கள், அப்படி இல்லை என்றால் உன் வாயைத் திற என்று உன்னை அதட்டினாள். அப்பொழுது நீ மலர்ந்த தாமரைப் பூவிற்கு ஒப்பான உன் வாயைத் திறந்தாய். 6. உன் தாய் மண்ணை சிறிதளவு காண விரும்பினாள். ஆனால் நீயோ அவளைப் பெரிதும் மன நிறைவு கொள்ளச் செய்பவன் போல்
நிலம் மட்டும் இல்லாமல் உலகங்கள் அனைத்தையும் காட்டினாய். 7. அப்பொழுது உன் வாயில் காடும், கடலும், மேகமும், ஆகாயமும், பாதாளமும் வெவ்வேறு இடங்களில் காணப்பட்டன. மேலும் வேறிடத்தில் மனிதர்களும், அசுரர்களும், தேவர்களும் தென்பட்டார்கள். இவ்விதம் உன் வாயில் இல்லாதது ஒன்றுமே இல்லை. 8. யசோதை
உன் வாயில் உன்னைப் பாற்கடலில் பள்ளிக் கொண்டவனாகவும், வைகுண்டத்தில் வீற்றிருப்பவனாகவும் கண்டாள். பின் பரந்தாமனே தன் எதிரில் மகனாக நிற்பதையும் கண்டாள். இப்படி எத்தனை வகையாகத் தான் உன்னைக் காணவில்லை? கோகுலத்தையும் தன்னையும் தன்னெதிரில் வாயைத் திறந்து கொண்டு நிற்கும் தன் மகன்
கிருஷ்ணனையும் அந்த வாயில் பார்த்தாள். 9. உலகங்கள் எல்லாம் உன் திருவாயில் விளங்குகின்றன. அந்த முகத்தினுள் மற்றொரு முகமும் வாயும், அதில் எல்லா புவனங்களும், அதில் முன் கண்ட அனைத்தும் கண்டாள். இப்படியாக ஆதியும் அந்தமும் இல்லாத தன்மையை யசோதைக்கு விளக்கிக் காட்டினாய். 10. விந்தைக்
குழந்தையே! பகவானே! அப்பொழுது அந்தத் தாய் உண்மையை அறிந்து கொண்டாள். ஆனால் அடுத்த கணமே உன் மாயையால் அவளை ஆட்கொண்டு, அம்மா பால் கொடு என்று கூறிக் கொண்டு அவளுடைய மடியில் ஏறி அமர்ந்து கொண்டாய். அத்தகைய நீயே என்னைக் காத்தருள வேண்டும்.
#தசகம்_47
உரலில் கண்ணனைக் கட்டுதல் 1. ஒரு நாள் உன் தாய் தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அப்பொழுது நீ அவளிடம் சென்று பால் குடிக்க விரும்பி தயிர் கடைவதைத் தடுத்து நிறுத்தினாய். பின் அவளுடைய மடி மீது ஏறிப் பாலைப் பருகினாய். 2. ஈசனே! நீ தாமரை மொட்டுக்கள் போன்ற மார்பங்களில் பாலைப் பாதி
பருகி விட்டு,உன் தாமரை முகத்தில் புன்முறுவல் அரும்பி இருந்த நேரம், நெருப்பில் பொங்கி வழிந்த பாலை இறக்கி வைக்க உன் தாய் விரைந்து சென்றாள். 3. தேவனே! நீ பாலை பாதி குடித்துக் கொண்டிருந்த போது தடை ஏற்பட்டதால் கடுஞ்சினம் கொண்டு நீ செய்வதறியாது மத்தினை எடுத்து தயிர்க் கலயத்தை உடைத்தாய்
4. அப்பொழுது சட்டியுடைந்த உரத்த ஓசையைக் கேட்டு விரைந்து ஒடி வந்து உன் தாயான யசோதை, உன் புகழ் பரவியது போல நிலத்தில் பரவிய தயிரை கண்டாள். 5. வேத நெறிகளால் தேடப்பட்ட உன்னை பெரும் புண்ணியம் செய்த யசோதை காணாமல் சினத்தோடு தேடிக் கொண்டு வந்த போது, உரலின் மீது அமர்ந்து பூனைக்கு வெண்ணெய்
கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். 6. நீ அஞ்சியவன் போல நடிக்கும்போது,உன் தாமரை மலர் போன்ற உன் முகம் அழகாக விளங்கியது. அப்பொழுது அங்கு வந்த யசோதை, சினத்தால் முகம் சிவக்க, விரைந்து உன்னைப் பிடித்துக் கொண்டு அந்தோ! தோழிகளின் முன்னிலையில் உன்னைக் கட்டுவதற்கு கையிற்றை எடுத்துக்
கொண்டாள் கஷ்டம்! 7. நல்லோர்கள், நெருங்கிய உறவினனாகக் கொள்ள விரும்பும் உன்னை அடந்த யசோதை கட்டுவதற்கு விரும்பிப் பல கயிறுகளை ஒன்று சேர்த்தாள். ஆயினும், அவை எல்லாம் ஒவ்வொரு தடவையும் இரண்டு அங்குலம் குறைவாகவே இருப்பதைக் கண்டாள். 8. ஹரியே! தோழிகள் அவளைக் கண்டு வியந்து சிரிக்க நீ
அவளுடைய வியர்த்துச் சோர்ந்த உடலைப் பார்த்தாய். எப்பொழுதுமே, எதற்குமே கட்டுப்படாத நீ அவள் மீது கருணைக் கொண்டு உன்னைக் கட்ட அவளை அனுமதித்தாய். அது விந்தையிலும் விந்தை. 9. யசோதை கட்டுண்ட உன்னைப் பார்த்து, அதே போக்கிரிப் பயலே! உரலோடு இப்படியே நீண்ட நேரம் இரு என்று சொல்லிவிட்டு
வீட்டிற்குத் திரும்பினாள். அப்பொழுது நீ முன்பே உரல் குழியில் வைத்திருந்த வெண்ணெயை தின்றுக் கொண்டிருந்தாய். 10. விபுவே! குருவாயூரின் தலைவனே! பற்றற்றவர்களுக்கு தான் நீ எளிதில் கட்டுப் படுவாய். அப்படியிருக்க, பாசத்தைக் கையில் கொண்ட யசோதையால் ஏன் கட்டப் பட்டாய்? என்று தேவர்கள் உலகில்
வாழ்பவர்கள் உன்னைத் துதித்தார்கள். அப்படிப்பட்ட நீயே என்னைப் பிணியில் இருந்து காத்தருள வேண்டும்.
#தசகம்_48
நலகூபர மணிக்ரீவர்களின் சாபம் நீங்குதல் 1. உன் லீலைகளைக் கண்ட தேவர்களின் கூட்டங்கள் உன்னைத் #தாமோதரன் என்று சொல்லி மிகுந்த மகிழ்ச்சியோடு துதித்தார்கள். அப்பொழுது, உரலில் தாமாகவே கட்டிற்கு இணங்கியவனும், மென்மையான வயிறு உடையவனுமான நீ உன்னருகில் இரண்டு மரங்களைக் கண்டாய்.
2. குபேரனுக்கு நலகூபரன், மணிக்ரீவன் என்று இரண்டு புதல்வர்கள் இருந்தனர். அவ்விருவரும் சிவபெருமானை வழிபட்டுப் பெருஞ்செல்வத்தைப் பெற்றனர். அதனால் செருக்கு மிகுந்திருந்தனர். உன்னிடம் பக்தி இல்லாமல் தவறான வழிகளில் நீண்ட காலம் விளையாட்டுப் பிள்ளைகளாகவே காலத்தைக்கழித்தனர். 3. அவர்கள்
மதவெறி பிடித்து, மதுவை குடித்து அந்த மயக்கத்தில் ஆடிப்பாடிக் கொண்டிருந்த வாலிபப் பெண்களால் சூழப்பட்டு இடுப்பில் ஆடை இல்லாமல் கங்கையாற்றில் விளையாடிக் கொண்டிருப்பதை உன் திருவடியிலேயே பக்தி கொண்டிருந்த நாரத முனிவர் பார்த்தார். 4. அவர்களை சூழ்ந்த அந்த பெண்கள் சாபத்திற்கு அஞ்சி ஆடைகள
எடுத்து உடுத்திக் கொண்டார்கள். அதை பார்த்தும் கூட மது மயக்கத்தில் அறிவு இழந்த அந்த இருவரும் நாரதரை பொருட்படுத்தவே இல்லை. அதனைக் கண்ட நாரதர் அவர்களுக்கு உன் மீது பக்தியும் மன அமைதியும் கிடைக்க, அவர்களை சபித்தார். மன அமைதி இல்லாதவருக்கு இன்பம் எப்படி கிடைக்கும்? 5. நீங்கள் இருவரும்
நீண்ட காலம் மறுத்த மரங்களாக இருந்து, ஸ்ரீ ஹரியைக் கண்டபின் உங்களுடைய பதவியை மீண்டும் அடையுங்கள் என்று நாரதரால் சபிக்கப் பட்டனர். அவர்களும் உன்னைக் காண ஆவல் கொண்டு கோகுலத்திற்கு அருகில் இரண்டு மரங்களாய் பிறந்தனர். 6. அந்த மறுத்த மரங்கள் தோன்றி நீண்ட காலம் நின்று இருந்ததனால்
வேரறுந்து, பலமிழந்து இருந்தன. அவற்றின் அருகில் நீ களைப்பின்றி மெதுவாகச் சென்றாய். அப்பொழுது உன் இடுப்பில் கட்டப் பட்டிருந்த உரல் குறுக்காகத் தடுத்தது. அதனால் அந்த இரண்டு மரங்களும் முறிந்து விழுந்தன. 7. கோவிந்தனே! இந்த இரண்டு மரங்களும் முறிந்து விழுகையில் அம்மரங்களுக்கு நடுவில்
இருந்து இரண்டு யக்ஷகர்கள் பேரொளியுடன் தோன்றினர். அவர்கள் உடனே தோத்திரங்கள் கூறி உன்னை வழிபட்டனர். 8. இந்த உலகில் மற்ற தேவர்களின் பக்தர்களும், இறுதியில் உன்னையே வந்து அடைவார்கள். அப்படியே ருத்திரனை வழிபாட்டு வந்த இவர்களும் நாரதனின் அருளால் உன் திருவடிகளை அடிக்கலாம் புகுந்தார்கள்.
மேலும், சிறந்த பக்தியையே வரமாகவும் பெற்று சென்றார்கள். 9. பிறகு, இடையர்களின் கூட்டம் மரங்களின் முறிவினால் உண்டாகிய பேரொலியைக் கேட்டு நடுங்கிக் கொண்டு ஒடி வந்தது. அப்பொழுது நந்தகோபன் வெட்கமுற்ற உன் தாயின் முகத்தைப் பார்த்தார். பின், அனைவரின் பந்தபாசமென்னும் கட்டை அவிழ்த்து
மோட்சத்தை அளிப்பவனான உன்னை உரலில் இருந்து அவிழ்த்து விட்டார். 10. நந்தன் முதலியவர்கள், இரண்டு மரங்களுக்கு நடுவில் சென்ற குழந்தை, ஹரியின் அருளால் தான் அடிபடாமல் காப்பாற்றப்பட்டது, இது மிகப் பெரிய விந்தையே என்று சொல்லிக் கொண்டார்கள். பின், உன்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.
அத்தகைய நீயே என்னை நோயினின்றும் காக்க வேண்டும்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#தீக்ஷை
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் ஒருவர் குருவிடம் இருந்து தீட்சை பெறுவது வழக்கம். தீட்சை என்பதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது ஒரு மந்திரத்தின் மூலமாக ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய குருவின் மூலம் பெற்ற உபதேசத்தை தொடங்கி செய்வது என்பது அதன் பொருள். தீட்சைக்கு 3
அடிப்படை விஷயங்கள் தேவை. முதலாவது, தீட்சை தருவதற்கான ஆன்மீக குரு. இரண்டாவது தீட்சை பெறுவதற்கான மாணவன். மூன்றாவது தீட்சைக்கு உரிய மந்திரம் அல்லது நெறிமுறை. இந்த 3 விஷயங்களும் மிகச்சரியாக அமைந்தால் தான் ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது சாத்தியம். ஆன்மீக சான்றோர்கள் அவரவர்களுக்கு
உரிய வழிகளில் பல்வேறு தீட்சைகளை வழங்குகிறார்கள். அவை, ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன. சாஸ்திர ரீதியாக 64 முறைகள் வழக்கத்தில் கடைபிடிக்கப்
#ஆஷாட_ஏகாதசி இன்று 17.7.24
பண்டரி யாத்திரை ஆத்ம சுகத்தை அளிக்கும் என்று நாமதேவர் கூறுகிறார்.
பரப்ரஹ்ம ஸ்வரூபமே பாண்டுரங்கன் அவனைப் பாடுங்கள் என்கிறார் ஆதிசங்கரர். சந்த் ஞானேஸ்வர் முதல் துக்காரம் வரை பல பக்தர்கள் பாடிய ஆயிரக்கணக்கான அபங்கங்கள் பக்தியில் நம்மைத் திளைக்க வைக்கின்றன
தினமும் 24 மணிநேரமும் பகவான் நாம சங்கீர்த்தனம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரே புண்ணியக்ஷேத்திரம் #பண்டரிபுரம் ஜெய் ஜெய் ராமகிருஷ்ண ஹரி என்ற ஒரே நாமம் எங்கும் ஒலித்தபடியே இருக்கும் பண்டரிபுரத்தில், பக்தர்கள் ஒவ்வொருவரும் தனது பாதக் கமலங்களைத் தொட்டு வந்தனம் செய்யும் பாக்கியத்தை
அருளும் ஸ்ரீவிட்டலும் மாதா ஸ்ரீருக்மிணியும் (ஸ்ரீ ரகுமாயி) இங்கு சந்த்ரபாகா நதிக்கரையில் கோயில் கொண்டு உள்ளார்கள். நம்மை மறந்து, நம் இருப்பை மறந்து, அவன் நாமம் ஒன்றே நினைந்து, ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல, பண்டரிபுர விட்டல, ஹர ஹர விட்டல என்று பாடித்
#நம்_முன்னோர்கள்_கடைபிடித்த_32அறங்கள்
1.வழிபோக்கர்களுக்கு சத்திரங்கள் கட்டி வைப்பது.
2.கல்வி கற்கும் ஏழை பிள்ளைகளுக்கு உணவு வசதி அளிப்பது.
3.அறுவகை சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.
4.பசுவுக்கு புல்லும்,வைக்கோலும் கொடுப்பது.
5.சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு அன்னமிடுதல்.
6.வீடு தேடிவரும் ஏழைகளுக்கு பிச்சை இடுதல்.
7.திண்பண்டம் நல்கல்.
8.அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகளுக்கு பசியமர்த்துவது.
9.அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.
10.அனாதைப் பிணங்களை எடுத்து அடக்கம் பண்ணுவது.
11.தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி செய்வது.
12.வாசனைப் பொருட்களை கொடுப்பது
13.நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.
14.துணிவெளுக்கும் தொழிலாளர்களுக்கு உதவி செய்வது.
15.நாவிதர்களுக்கு உதவி செய்வது.
16.ஏழை பெண்களுக்கு பொன் தானம் செய்வது.
17.ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.
18.தலைக்கு எண்ணெய் கொடுப்பது.
19.திருமணம் ஆகாத ஏழைகளுக்கு
#ஸந்த்_சக்குபாய்
பண்டரிபுரத்துக்கு அருகில் சிஞ்சிருனிபுரம் என்ற கிராமத்தில் கங்காதர ராவ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் மனைவி கமலாபாய். இவர்கள் எப்போதும் பகவான் நாமத்தைச் சொல்லி, நல்லதையே நினைத்து, எல்லோருக்கும் நல்லதையே செய்து வந்தார்கள். இவர்களுக்கு #சக்குபாய் என்ற பெண் குழந்தை இருந்தது.
தினமும் தெய்வ வழிபாட்டையும், பஜனையையும் கேட்டபடியே குழந்தை வளர்ந்தது. ஒரு நாள் தோழிகளுடன் சக்குபாய் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது பஜனைப் பாட்டுகளைப் பாடியபடியே முதியவர் ஒருவர் அந்த வீதி வழியாக வந்து கொண்டிருந்தார். சக்குபாய் கட்டிய மணல் வீடு, அவரின் கால் பட்டு அழிந்தது. கோபத்துடன் சக்குபாய்,
‘‘தாத்தா, நான் எவ்வளவு ஆசையா இந்த வீட்டைக் கட்டினேன் தெரியுமா? நீங்கள் ஒரு நிமிடத்தில் நாசமாக்கி விட்டீர்களே… இது நியாயமா?’’ என்று கேட்டாள்.
‘‘பகவான் நாமத்தில் லயித்து இருந்ததால் தவறு நடந்து விட்டது!” என்று மன்னிப்பு கேட்டார் முதியவர். குழந்தை அல்லவா? தனது வீடு சிதைந்ததை அந்தப் பிஞ்சு மனதால் தாங்க முடியவில்லை.
தனது மணல் வீட் டுக்கு பதிலாக, அவர் கையில் மீட்டிக் கொண்டு வந்த தம்புராவைக் கேட்டாள். அவரும் தம்புராவைக் கொடுத்து அதை எப்படி மீட்டுவது என்று கற்றுக் கொடுத்தார்.
குழந்தையின் காதில் அஷ்டாக்ஷர மகா மந்திரத்தை ஓதி அதை தினமும் ஜபிக்குமாறும் கூறினார்.
‘‘அஷ்டாக்ஷரம் என்ற பெயருடைய பலர் இந்தக் கிராமத்தில் இருக்கிறார்களே? அவர்களில் யாருடைய பெயர் இது?” என்று கேட்டாள் சக்குபாய்.
அவளிடம் கஜேந்திரன் மற்றும் பிரகலாதன் கதைகளைக் கூறிய முதியவர், அஷ்டாக்ஷரத்தின் பெருமைகளையும் எடுத்துரைத்தார்.
அனைத்தையும் கேட்ட சக்குபாய், பெரியவரிடம் தான் விளையாட்டாக தம்புராவைக் கேட்டதாகச் சொல்லி, ‘‘அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!’’ என்றாள்.
சக்குபாயின் முதுகில் அன்புடன் தடவி, ‘‘தம்புராவை மீட்டி, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பஜனைப் பாடல் பாடு!’’ என்று சொல்லி மறைந்தார் முதியவர்.
அதன் பிறகு குழந்தையின் மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது. அவர் சொல்லித் தந்த அஷ்டாக்ஷர மந்திரத்தை எப்போதும் சொல்லிய படியே இருந்தாள். தோழிகளுடன் விளையாடச் செல்லவில்லை.
மனதில் எப்போதும் இறைவன் நாமம் ஒலித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் அந்தப் பெரியவரைக் காண வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது.
10 வயதாகி விட்டதால், உடனே இவளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் வரன் தேடி னர். எப்போதும் மௌனமாக இருப்பதால் இவளை ‘பைத்தியம்!’ என்று ஊரார் பேசத் தொடங்கினர்.
இந்த நிலையில் சிந்து தேசத் திலிருந்து மித்ருராவ் என்ற இளைஞன் வியாபார விஷயமாக அங்கு வந்தான். அவனது அறிவும் அழகும் சக்குபாயின் பெற்றோருக்குப் பிடித்ததால், அவனைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
அதுவரை திருமணமே வேண்டாம் என்று சொன்ன சக்குபாயும் திருமணத்துக்குச் சம்மதித்தாள். திருமணம் சிறப்பாக நடந்தது. சக்குபாய் சிந்து தேசத்துக்குச் சென்றாள்.
கணவர் வீட்டில் மாமியாரும் நாத்தனாரும் நன்றாக வேலை வாங்கினார்கள். சக்குபாயும் எல்லா வேலைகளையும் பொறுமையாகச் செய்தாள். மனம் மட்டும் எப்போதும் பகவான் நாமத்தை சொல்லியபடியே இருந்தது.
தன் மனைவி எதிலும் பற்று இல்லாமல் இருப்பது மித்ருராவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. சக்குபாயோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் தியானம், பஜனை செய்வதுமாக இருந்தாள். இவளை இங்கும் ‘பைத்தியம்’ என்றனர் பலர்.
அவளுக்குப் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மந்திரவாதியைக் கூப்பிட்டு, பேய் ஓட்டச் சொன்னார்கள். அறையில் வைத்து பூட்டி னார்கள். அங்கும் அவள் தியானம் செய்தாள்.
பஜனைப் பாடல்களைக் கண்ணீருடன் மனம் உருகிப் பாடினாள். அவள் குழந்தையாக மணல் வீடு கட்டியபோது முதியவர் வேடத்தில் வந்த பகவான், மீண்டும் அதே வேடத்தில் சக்குபாய் வீட்டுக்கு வந்தார்.
தான் பேய் ஓட்டுவதில் வல்லவன் என்று முதியவர் கூற, சக்குபாயின் மாமியார் அவரை சக்குபாய் அறைக்குச் சென்று பேய் ஓட்டும் படி கூறினாள். அவரைப் பார்த்ததும், சக்குபாய்க்கு அவரை முதலில் சந்தித்தது நினைவுக்கு வந்தது.
அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாள். இதைப் பார்த்த அவள் கணவரும் மாமியாரும் இவரால் சக்குபாய்க்குப் பைத்தியம் தெளியும் என்று சமாதானம் அடைந்தனர்.
முதியவர் சக்குபாயிடம், ‘‘இல் வாழ்க்கையில் இருந்து கணவருக்கும் மற்றவர்களுக்கும் தேவையானவற்றைச் செய்து, அந்த வாழ்க்கையை அனுபவித்த பிறகே அதில் உள்ள பற்றுவிடும். ஆகவே, இனி நீ உன் கணவருக்குத் தேவையானதை இன்முகத்துடன் பூர்த்தி செய்’’ என்றார். அப்படியே இருப்பதாக வாக்குக் கொடுத்தாள். கணவருடன் இனிமையாகப் பேசி, அவரை மகிழ்வித்தாள் சக்குபாய்.
இவர்களின் இல்லறத்தைப் பார்த்து ஊரே வியந்தது. சக்குபாய் சந்தோஷமாக இருந்தாலும், அந்த முதியவரை இனி ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அடிக்கடி தோன்றி அவளை வாட்டியது. இதனால், மனநிலை பாதிக்கப்பட்டு, நீர் எடுக்கச் சென்றபோது கிணற்றில் குதித்தாள். இதைப் பார்த்து பகவான் சும்மா இருப்பாரா? பக்தரின் வடிவில் வந்து காப்பாற்றி, நல்ல வார்த்தைகள் பல கூறி அவளை சமாதானப்படுத்தினார். அதனால் தெளிவடைந்த சக்குபாய் அவரிடம் சகஜமாக மனம் விட்டுச் சிரித்துப் பேசினாள். அங்கு தண்ணீர் பிடிக்க வந்த சில பெண்கள், இந்தக் காட்சியைக் கண்டு மித்ருராவிடம் சென்று சக்கு பாய்க்கும் வேறு ஆடவனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குளக்கரையில் அவர்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறினர். கோபத்துடன் அங்கு வந்த மித்ருராவ், அவளைத் திட்டியதுடன், அவளிடம் பேசிய அந்த மாய பக்தனைப் பார்த்தார். ஆனால், மித்ருராவின் கண்களுக்கு, முன்பு வீட்டுக்கு வந்த முதியவர் போல காட்சி தந்தார் பகவான். சக்குபாய் கால் தவறி கிணற்றில் விழுந்ததாகவும், தான் காப் பாற்றியதாகவும் கூறினார். அவரிடம் மன்னிப்புக் கேட்டு, மனைவியுடன் வீடு திரும்பினார் மித்ருராவ். பழைய படி இல்லற வாழ்க்கை இனிமையாகச் சென்றது.
ஒரு முறை சக்குபாய் தண்ணீர் எடுக்க குளக்கரைக்குச் சென்றபோது, அந்த வழியாக பஜனை செய்தபடி ஒரு குழு பண்டரிபுரம் சென்று கொண்டிருந்தது.
கபீர்தாஸ், ராமதாஸ், நாமதேவர் என்று பலரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். அவர்களை வலம் வந்து தன்னையும் அவர்களுடன் பண்டரிபுரம் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டாள் சக்குபாய்.
அதற்கு அவர்கள், ‘‘கணவரிடமோ, மாமியாரிடமோ உத்தரவு வாங்கி வந்தால்தான் அழைத்துச் செல்வோம்!’’ என்றனர். இல்லத்துக்கு வந்த சக்குபாய் தன் கணவரிடம் விவரத்தைச் சொல்லி, அனுமதி கேட்டாள்.
கணவரோ தற்போது அங்கு செல்ல வசதி இல்லாததால் அடுத்த வருடம் தானே அழைத்துச் செல்வதாகக் கூறி னார். சக்குபாய் பிடிவாதம் பிடிக்கவே அவளை ஓர் அறையில் வைத்துப் பூட்டினார். அறையில் இருந்தபடி பண்டரிநாதனை மனம் உருக அழைத்துக் கதறி அழுதாள். ‘எத்தனையோ பேர் பகவானின் திருவிழாவைக் காணும்போது, தனக்கு மட்டும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே!’ என்று சங்கடப் பட்டாள்.
தன் பக்தை துன்பப்படுவதை பகவான் பொறுப்பாரா? உடனே அவர் ஒரு பெண் உருவில் அந்த அறைக்கு வந்தார். பூட்டை உடைத்து அவளுடைய கயிற்றை அவிழ்த்துவிட்டு, தன்னைத் தூணில் கட்டும்படி கூறினார். ‘‘யாருக்கும் சந்தேகம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக பண்டரிபுரத்துக்குப் போ!’’ என்றார்.
வந்திருப்பது பகவான் என்று தெரியாமல் அவரைத் தூணில் கட்டிப் போட்டாள் சக்குபாய். பிறகு வீட்டின் பின்பக்கமாக வெளியேறி, கபீர்தாஸ் பஜனை கோஷ்டியிடம் சென்று, தானும் பண்டரிபுரம் வரு வதாகக் கூறினாள். தன் ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்த கபீர்தாஸ் சந்தோஷத்துடன் அவளை தன் பஜனை கோஷ்டியில் சேர்த்துக் கொண்டார். சக்குபாய் தனது இனிய குரலால் பாடல்களைப் பாடி, எல்லோரையும் மகிழ்வித்தாள். பக்தர்களின், ‘பாண்டுரங்க விட்டல! ஜே! ஜே! விட்டல பண்டரி நாதா’ என்ற குரல் எல்லா இடத்திலும் ஒலித்தது.
சக்குபாய்க்காக இறைவன் அறைக்குள் இருப்பதை அறியாத அவள் கணவர், பாகவத கோஷ்டி கிராமத்தை விட்டுச் சென்ற பிறகு, அறையைத் திறந்தார்.
அங்கு சக்குபாயின் உருவில் இருந்த பகவான், ஒன்றுமே நடக்காதது போல் அவர் சொல்லுக்குப் பணிந்து நடந்தார்.
வழக்கம் போல அந்த வீட்டில் எல்லோரும் அவளை வேலை வாங்கினார்கள். அவளும் சந்தோஷத்துடன் வேலை செய்வதைப் பார்த்து திருப்தி அடைந்தனர்.
பண்டரிபுரம் சென்ற சக்குபாயோ பகவானின் சந்நிதியை விட்டு வர மனம் இல்லாமல், எல்லாவற்றையும் மறந்து, ஒவ்வொரு நாளையும் மிகவும் சந்தோஷமாகக் கழித்தாள். ஒரு நாள் பகவானுக்குப் பூமாலை சூட, பூக்களைப் பறிக்கும்போது, பாம்பு கடித்து பாண்டுரங்கன் சந்நிதியில் மயங்கி வீழ்ந்தாள். அவள் இறந்து விட்டதாகக் கருதிய மற்றவர்கள், அவளை அருகில் உள்ள சத்திரத்தில் போட்டு விட்டு, அவளின் கணவருக்குச் செய்தி அனுப்பினர். இதைக் கேட்ட மித்ருராவ் கோபத்துடன் அவர்களை நோக்கி, ‘‘எப்போதும் என் மனைவியைக் குறை கூறுவதே உங்கள் பிழைப்பாகி விட்டது. அவள் இங்கேதான் இருக்கிறாள். அவளைக் குறை கூறி இனி யாரும் இங்கே வர வேண்டாம்!’’ என்று வந்தவர்களைத் துரத்தினார்.
பாம்பு கடித்த நிலையில் மயங்கிக் கிடந்த சக்குபாயை பகவான் வைத்தியராக வந்து காப்பாற்றினார். பிறகு அவளுக்கு நல்ல வார்த்தைகள் கூறி, அவளை பண்டரிபுரத்திலிருந்து ஊர் வரைக்கும் அழைத்து வந்து மறைந்தார்.
ஊருக்குள் வந்த சக்குபாய், தான் கட்டிப்போட்ட பெண் ஊர்க் குளத்தில் தண்ணீர் எடுப்பதைப் பார்த்தாள். ‘உடனே வருவதாகச் சொல்லி பல நாட்கள் தங்கி விட்டோமே!’ என்று வருந்தி, அவளிடம் மன்னிப்புக் கேட்டாள்.
உடனே அந்தப் பெண், சக்குபாய்க்கு பகவானாகக் காட்சி கொடுத்தார். இன்னும் சில காலம் இல்லறத்தில் இருக்கும்படி கூறி மறைந்தார். வீட்டுக்கு வந்த சக்குபாய் தனக்காக, இங்கு இருந்தது பகவானே என்பதை எல்லோரிடமும் சொன்னாள்.
கணவரும் தன் தவறை உணர்ந்தார். செல்வம் நிறைய இருந்தும் தானம் என்பதை மறந்து வாழ்ந்ததற்காக வருந்தினார். சக்குபாயுடன் சேர்ந்து நிறைய தான தர்மங்கள் செய்தார்.
பல க்ஷத்திரங்களுக்கு தம்பதியாகச் சென்று வணங்கினர். பிறகு பண்டரிபுரத்துக்கே வந்து இறைவன் புகழ் பாடி, தியானத்தில் ஈடுபட்டு தங்கள் வாழ்நாளை இறைவனுக்கு அர்ப்பணித்து இறுதியில் இறைவனடி சேர்ந்தனர்.
#சாதுர்மாஸ்ய_விரதம்
மகான்கள் மற்றும் ஆன்மிக அன்பர்களால் பல வகையான விரதங்கள் அனுஷ்டிக்கப் படுகின்றன. சக்தி மிக்க விரதங்களில் ஒன்று சாதுர்மாஸ்ய விரதமாகும். ‘சதுர்’ என்றால் 4 என்று பொருள். ‘மாஸ்ய’ என்றால் மாதம் என்று பொருள். 4 மாதங்கள் கொண்ட இந்த விரதம், ஆடி மாத பௌர்ணமி முதல்
கார்த்திகை மாத பௌர்ணமி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள் ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று அதாவது, ‘குருபூர்ணிமா’ அன்று தங்கள் குருமார்களை நினைவு கூறும் வகையில் வேத வியாசரை வழிபட்டுத் விரதத்தைத் துவக்குவார்கள். இந்த தினத்தை மகான்கள், #வியாச_பூர்ணிமா என்றும்
அழைப்பது வழக்கம். ஆடி மாதத்தில் துவங்கி கார்த்திகை மாதத்தில் ஏகாதசியில் இந்த விரதம் முடிவடையும். இந்த 4 மாதங்களும் மகாவிஷ்ணு யோக நித்திரையில் இருக்கும் காலமாகும். ஆஷாட மாதத்தின் சுக்லபட்ச ஏகாதசியில் இருந்து கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி வரை மகாவிஷ்ணு ஆதிசேஷனுடன் திருப்பாற்
#Sri_Purandara_Dasa
Srinivasa Nayaka, also known as Purandara Dasa (c. 1484 – c. 1564) was a composer, singer and a Haridasa philosopher from present day Karnataka, India. He was a follower of Madhvacharya's Dvaita philosophy. He was one of the chief founding proponents of
Carnatic music. In honor of his contributions to Carnatic music, he is referred to as the Pitamaha of Carnatic music. According to our Puranas he is considered as an incarnation of Narada. Purandara Dasa was a wealthy merchant of gold, silver and other miscellaneous jewellery
from Karnataka, who gave away all his material riches to become a Haridasa (literally meaning a servant of Vishnu or Krishna), a devotional singer who made the difficult Sanskrit tenets of Bhagavata Purana available to everyone in simple and melodious songs. He was one of the