My Authors
Read all threads
🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

🌱ராமரின் பயணம்🌱

அயோத்தி திரும்பிய பரதன், அண்ணனுக்கு இணையாக அவரது பாதரக்ஷைகளை சிம்ஹாஸனத்தில் இருத்தி, தான் ஒரு சிறு குடிலில் தங்கி, மரவுரி தரித்து, காய், கனிகளை உண்டு, தரையில் படுத்து,
காவி வஸ்த்ரம் மட்டும் உடுத்தி, ஸந்யாஸியாகவே வாழ்ந்தான்.

சித்ரகூடத்தில் ராமர் இருப்பதை அறிந்த, ராவணனுடைய தமையன் கரன் என்பவன், அவர் மேல் கொண்ட வெறுப்பால், அங்கிருந்த முனிவர்களை யக்ஞம் செய்ய விடாது தொந்திரவு செய்து வந்தான். இதனால் கவலை அடைந்த அவர்கள், ராமரிடம் இது பற்றிக் கூறி,
“ராமா! நீயும் இவ்விடம் விட்டு அகன்று போவது நல்லது. நாங்கள் அச்வ மஹரிஷி ஆஸ்ரமத்திற்குப் போகப் போகிறோம். நீயும் பாதுகாப்பான் ஓரிடம் தேடிச் செல்….”

என்றனர். முனிவர்களின் வார்த்தை ஒருபுறம் இருக்க, அங்கே பரதனைச் சந்தித்ததால், குடும்ப எண்ணம் அதிகமாவது உணர்ந்த ராமரும்,
லக்ஷ்மணர், ஸீதையுடன் அத்ரி மஹரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். அவரது குடிலில் அவரும் அவரது பத்தினி அனஸூயா தேவியும் இவர்களை உபசரித்தார்கள். ஸீதையிடம் அநுஸூயா தேவி,

”உனது திருமணம் பற்றிக் கேள்வியுற்றேன்…. ஆயினும் ராமனின் கரம்பற்றியது பற்றி உன் வாயால் சொல்…”
எனக் கேட்டாள். ஸீதையும், தேவரதரிடம் வருணனால் அளிக்கப்பட்ட சிவதனுஸு தந்தையிடம் இருந்ததையும், அதை நாணேற்றுபவர்க்கே தன்னை மணமுடித்துத் தருவதாய் ஜனகர் அறிவித்ததையும்;

பலப்பல மன்னர்கள் அதை நகர்த்தக்கூட இயலாது தோற்றதையும், விஸ்வாமித்ரருடன் சிவதனுஸைப் பார்க்க வந்த ராமர்,
குருவின் ஆக்ஞைப்படி நாணேற்ற முயன்றதில், அந்த தனுஸே முறிந்து இடிபோல சத்தத்துடன் உடைந்து விழுந்ததையும் கூறினாள்.

மேலும், ஜனகர் உடனே மணமுடிக்க யத்தனித்தும், தந்தை வாய்ச்சொல் ஆணையின்றி, தான் எதையும் ஏற்க இயலாது எனக்கூறி ராமன் பணிந்ததையும், பின்னர் தஸரதர் வந்து நான்கு மகன்களுக்கும்
சகோதரிகள் தங்கள் நால்வரையும் மணமுடித்து வைத்ததையும் கூறினாள்... அவளை ஆஸீர்வதித்த அனஸுயா,

“என்னதான் வனவாசம் சென்றாலும், திருமணமான பெண் ஆபரணமின்றி இருக்கக் கூடாது! எனது முன்னோர் அளித்த ஆபரணங்களைத் தருகிறேன்… இனி எப்போதும் அணிந்து கொள்…”

எனக் கூறி, நெற்றிச்சூட்டி, வளையல், ஆரம்,
காதிற்கு தோடு, கொலுசுத் தண்டை முதலியவற்றைத் தந்து, ”இவற்றை மட்டுமாவது அணிந்து கொள்” எனக் கொடுத்தாள்.

பின்னர் அங்கிருந்து கிளம்பியவர்கள் தண்டகாரண்யம் (தண்டக+ஆரண்யம்) என்னும் காட்டினுள் ப்ரவேசித்தனர். அவர்கள் நடந்து போகையில், திடீரென ஒரு அரக்கன், ராம-லக்ஷ்மணர்களைத் தள்ளிவிட்டு,
ஸீதையைத் தூக்கிக் கொண்டு ஓடினான். துரத்திய ராம சகோதரர்களைப் பார்த்து,

“நான் ஜதன் – சதஹ்ரதையின் புதல்வன் விராதன். ஆயுதங்களால் வெல்லப்படாத வரம் வாங்கியுள்ளேன். நான் முனிவர்களின் மாமிஸம் உண்டு வாழ்பவன். உங்களுக்கெதுக்கு ஆயுதமும் மனைவியும்?
உங்களைத் தின்று, இவளை எனது மனைவியாக்கிக் கொள்வேன்….”

எனச் சிரித்தான். ராமர், தாங்கள் வனத்திற்கு வந்திருக்கும் க்ஷத்ரியர்கள் எனக்கூறி, அவன்மீது அம்புகள் தொடுத்தும், அவை அவனைக் காயப்படுத்தவில்லை. கோபம் கொண்ட விராதன், ஸீதையைக் கீழே விட்டுவிட்டு,
ராம-லக்ஷ்மணர்களைத் தோளில் தூக்கி ஓடினான். அவர்கள் அவனது இரு கரங்களையும் வெட்டினர். அவன் மண்ணில் சாய்ந்ததும், அவன் கழுத்தில் கால் வைத்த ராமர், அவனைப் புதைக்க ஒரு குழி தோண்டச் சொன்னார்.

லக்ஷ்மணன் செய்து முடித்தான். விராதன் ராமனிடம்,

“இந்திரனைப் போல் பலமானவன் நீ என அறிந்தேன்.
தும்புரு என்னும் கந்தர்வனாகிய நான் குபேரனின் சாபத்தால், அரக்கனானேன். நீ எனை வீழ்த்தியதும் சாபவிமோசனம் பெறுவேன் என குபேரன் கூறினான்.

நன்றி ராமா… எனை அக்குழியில் புதைத்து விமோசனம் அளித்துவிடு. நீயும் சரபங்க முனிவரைத் தேடிச் செல். உனக்கு நலம் பயக்கும்…”

என வேண்டினான்.
அதன்படி செய்த ராம-லக்ஷ்மணர்கள் ஸீதையுடன் சரபங்க முனிவர் ஆஸ்ரமத்திற்குப் போனான். அங்கே முனிவருடன் இருந்த தேவேந்த்ரன், தான் ராமனை ராவண வதத்தின் பின்தான் பார்க்க வேண்டும் எனக்கூறி முனிவரிடம் விடை பெற்றான்.

ராமரும் ஆஸ்ரமம் வந்தடைந்து, முனிவரை வணங்கி ஆஸி பெற்றார்.
தேவலோகம் செல்லவிருந்த தன்னை இந்த்ரன் அழைத்துப் போக வந்தும், ராமரைக்காணவே அங்கே காத்திருந்த சரபங்க முனிவர்,

“மந்தாகினி நதியின் நீரோட்டத்திற்கு எதிர்திசையில் சென்றால், ஸுதீக்ஷ்ண முனிவர் ஆஸ்ரமம் வரும். அங்கே சென்று, அவரது ஆஸி பெறு. நான் அக்னி ஸமாதி அடைய வேண்டும்…”
எனக்கூறி, அக்னி வளர்த்து, அதில் புகுந்து மேலுலகம் அடைந்தார். ராமரும் ஸுதீக்ஷ்ண முனிவர் ஆஸ்ரமம் அடைந்தார்.

மந்தாகினி, பம்பை நதிக்கரைகளிலும், சித்ரகூடத்திலும் வாழும் முனிவர்களை அங்கிருக்கும் அரக்கர்கள் துண்புறுத்துவதைக் கூறிய ரிஷிகள், தங்களைக் காக்கும்படி ராமரிடம் வேண்டினர்.
அவர்கள் வேண்டுதலாலும், க்ஷத்ரியன் எனும் பொறுப்பாலும், அங்கே தங்கியிருந்து, அரக்கர்களை அழித்து, அவர்களுக்கு திருப்தி அளித்தார் ராமர்.

பின்னர் அவர்கள் மேலும் தென்திசையில் அகஸ்த்ய முனிவரின் ஆஸ்ரமம் நோக்கிச் சென்றனர். அவரை வணங்கி, ஸுதீக்ஷணரைக் கண்டதையும்,
அவர் அகஸ்த்யரைச் சந்திக்க அனுப்பியதையும் கூறினார் ராமர். அகஸ்த்ய முனிவர், அவர்களைப் பஞ்சவடியில் சென்று குடிலமைத்துத் தங்கும்படிக் கூறினார்.

அவரின் வார்த்தைப்படி பஞ்சவடியில் குடில் அமைத்துத் தங்கினர். அழகிய அந்த இடத்தை ஸீதை மிகவும் விரும்பினாள். மான்களும், பறவைகளும், நிறைய விதமான
மலர்களும், நல்கனிகள் தரும் மரங்களும் இருந்ததால் மனம் குதூகலித்து, ஸந்தோஷத்துடன் நித்ய கர்மாக்களைச் செய்தாள்.

ஒரு நாள் ராமர், லக்ஷ்மணன், ஸீதாதேவி ஆகியோர் அவர்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பக்கம் வந்த ஸூர்ப்பனகை என்னும் அஸுரகுலப் பெண், ராமரையும் லக்ஷ்மணரையும் அங்கே கண்டாள்.

இவள் ராவணன் எனும் அஸுரனின் தங்கை. ராமரின் அழகில் மயங்கிப் போனாள். தன்னை ஒரு அழகிய பெண்ணுருவில் மாற்றிக் கொண்டு அவரிடம் வந்து,
தன்னை மணம் செய்துகொள்ளுமாறு கெஞ்சியும் கொஞ்சியும் பார்த்தாள்.

கம்பன் இவள் வருகையை ஸூர்ப்பனகை படலத்தில் அழகாக வர்ணித்திருப்பார்!

"பஞ்சியொளி விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிகர் சீறடி பெயர்ப்பாள்
அஞ்சொல் இளமஞ்சையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்".
அவளிடம் ராமர்,

“பெண்ணே, நான் ஏகபத்னி விரதன். என மனைவியும் அருகில் இருக்கிறாள். இதோ எனது தம்பி லக்ஷ்மணன் எத்தனை அழகாக இருக்கிறான்... அவனை வேண்டுமானாலும் கேட்டுப்பார்...” எனக்கூறினார்.

அவர் லக்ஷ்மணனின் குணம் அறிந்து சூசகமாக அவளை அவனிடம் அனுப்பினார். லக்ஷ்மணனிடமும் அவள் தன்னை
மணம்புரிந்து கொள்ள வற்புறுத்தினாள். கோபமுற்ற லக்ஷ்மணன், அவளது காது, மூக்கை அறுத்து, அங்கஹீனம் செய்து அனுப்பி விட்டான்.

ஆத்திரம் தாங்க முடியாதவளாக, தனது அண்ணன் ராவணனிடம் சென்று முறையிட்டாள். ஆனால், தான் செய்த தவறை மறைத்துவிட்டு,

“அண்ணா, கானகத்தில் ஒரு பேரழகியை நான் கண்டேன்.
அவள் துறவி போல் வாழ்கிறாள். அவள் உம்மருகே சிம்ஹாசனத்தில் இருக்கத் தகுந்தவளேயன்றி துறவு வாழ்வுக்குத் தகுந்தவள் அல்ல என்பது அறிந்து, உமக்கு அவளை மணமுடித்துத் தரும்படி பேசினேன்...

அங்கிருந்த ஆடவன் என் காது, மூக்கினை அறுத்து, அங்கஹீனம் செய்து, என்னை அவமானப் படுத்திவிட்டான்.
உங்களுக்காக அங்கஹீனம் ஆனால், அது உங்களுக்கே ஆனது போலன்றோ…”

எனக்கூறி, அவன் மனதில் முதலில் கோபத்தைக் கிளப்பி விட்டாள்.

பிறகு, ஸீதையின் அழகை அதி அற்புதமாக வர்ணித்து, ராவணன் மனதில் காமத்தீயை மூட்டினாள்.

அவள் வர்ணித்த அழகை கம்பர் இன்னும் அழகாகக் கூறியிருப்பார்.
"தோளையே சொல்லுகேனோ ; சுடர்முகத் துலவுகின்ற
வாளையே சொல்லுகேனோ ; வல்அவை வழுத்துகேனோ
மீளவும் திகப்பதல்லால் ; தனித்தனி விளம்பலாற்றேன்
நாளையே காண்டியன்றே ; நானுனக்கு உரைப்பதென்னா"

அவளது தோள் அழகை வர்ணிப்பேனா, முகத்தில் அங்கும் இங்குமாக அலையும் கருமையான கண்களை வர்ணிப்பேனா,
எழில் கொஞ்சும் அவளது கொங்கைகளை வர்ணிப்பேனா, பார்த்துப் பார்த்துத் திகைத்துப் போனேன்… எப்படி ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியாக வர்ணிப்பேன்?

நீதான் அவளை நாளையே பார்க்கப் போகிறாயே, பிறகு நான் அதைப்பற்றிச் சொல்லுவானேன்?

என்கிறாள். அதன்படி, ராவணன் ஸீதையை அடைந்து விட்டால்,
தான் லக்ஷ்மணனை அடைவதில் கஷ்டம் இருக்காது என்று எண்ணிக் கூறினாள். அவளது வார்த்தைகளால் ராவணன் மனதில் ஸீதையின் மேல் மோகம் பிறந்தது...

மாரீசன் என்னும் அஸுரனை ஸீதையைக் கவர்ந்து வர உதவும்படி கேட்டான். அதற்குள் அவனது தமையனான விபீஷணன் ராவணனிடம்,
”அண்ணா! அவர்கள் தஸரத குமாரர்கள் ராம – லக்ஷ்மணர்கள். அவர்களிடம் போரிடாதே. ஸீதை பூமியின் புத்ரி. எனவே, அவர்களுக்கு மரியாதை செய்து நட்பாக்கிக் கொள்...”

என அறிவுரை கூறினான். ஆனால் ராவணன் காதுகளில் அவை ஏறவில்லை.
Source: From a Balinese Palm Leaf Manuscript of Raamaayanaa, written and illustrated by Ida Bagus Adnyana of Geriya Gunung Sari Pliatan, Bali. Copied @ 1975.

ராமர் – லக்ஷ்மணர் – ஸீதை மூவரும் குடிலில் இருக்கும் போது, அவர்களது நந்தவனத்தில், மாரீசன் ஒரு பொன்மான் போல
மாயத் தோற்றம் கொண்டு, ஸீதையின் கண் முன்னால் அங்கும் இங்கும் ஓடினான். அதைக் கண்ட ஸீதை மானின் அழகில் மயங்கி, அதைக் கொண்டு வந்து தரும்படி ராமரிடம் கேட்டாள்.

ஆனால், லக்ஷ்மணர் மனதில் ஏதோ சந்தேகம் தோன்றியது. எனவே அவர் ராமரிடம்,

“அது ஏதோ மாயம் போல் தோன்றுகிறது அண்ணா…..
எனவே நீங்கள் அப்பொன்மானைத் தேடிப் போக வேண்டாம்...”

எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், ஸீதை அதன் அழகில் ஈர்க்கப்பட்டு, அது வேண்டும் எனப் பிடிவாதம் செய்தாள்.

அதனால் ராமர், லக்ஷ்மணரிடம் ஸீதைக்குப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லிக் கூறிவிட்டு, அப்பொன் மானைப் பிடிக்கப் போனார்.
வெகு தூரம் சென்ற பின், அதன் காலில் ஓர் அம்பு எய்து அதை வீழ்த்தினார். அம்பு பட்டவுடன் மாரீசன்,

“லக்ஷ்மணா….. என்னைக் காப்பாற்று…..”

என ராமரின் குரலில் பெரிதாகக் கூவினான். குரல் கேட்ட ஸீதை, ராமர் ஆபத்தில் உள்ளார் என நினைத்து, லக்ஷ்மணரைச் சென்று அண்ணனைக் காக்கும்படிக் கூறினாள்.
ஆனால் லக்ஷ்மணரோ, இது ராமபிரான் குரல் இல்லை என எடுத்துக் கூறி, அவர் திரும்பி வருவார் எனக் கூறினார். ஆனால் ஸீதை மனம் அமைதி அடையவில்லை.

“அண்ணன் இறந்ததும் என்னை அடைய நினைக்கிறாயா? அதனால் தான் போக மறுக்கிறாயா?”

எனக் கோபத்தில் லக்ஷ்மணரிடம் கேட்டாள்.
அந்த வார்த்தையால் காயமுற்றவன், குடிலின் வாசலில் ஒரு கோடு இழுத்து,

”தாங்கள் இதைத் தாண்டி எக்காரணம் கொண்டும் வரக்கூடாது…. இது உங்கள் பாதுகாப்பிற்காக நான் இட்ட கோடு”

எனக் கூறிச் சென்றார். அதைத் தான் லக்ஷ்மண் ரேகா (லக்ஷ்மணனிட்ட கோடு) எனக் கூறுகின்றோம்.
அவன் வெளியேறியதும், ராவணன் ஒரு துறவி வேடமிட்டு, குடிலுக்குள் நுழையப் பார்த்தான். ஆனால் லக்ஷ்மணன் இட்ட கோடு, அவனை நுழைய விடாமல் சுட்டது.

அதனால் அவன் வெளியில் நின்று ஒரு துறவி பிக்ஷை கேட்பது போலக் கேட்டான். அந்தனரைக் கண்டதும், ஸீதை தன்னிடம் இருந்த அன்னத்தை எடுத்துக் கொண்டு
பிக்ஷையிட வந்தாள். அவள் கோட்டுக்குள் நின்று கொண்டு,

“அந்தனரே… பிக்ஷை ஏற்க வாருங்கள்….”

என அழைத்தாள். ஆனால் ராவணனோ,

“நான் மிகவும் களைத்துள்ளதால் எழ முடியவில்லை அம்மா. எனது இந்த பாத்திரத்தில் நீயே வந்து பிக்ஷையை இட்டுவிடு” என்று வேண்டினான்.
அவனது ஸூக்ஷ்மம் புரியாத ஸீதை, லக்ஷ்மண் ரேகாவைத் தாண்டி வந்தாள். அவ்வளவு தான்….. ராவணன் ஸீதையைத் தனது புஷ்பக விமானத்தில் ஸீதையைக் கடத்திக் கொண்டு பறக்க ஆரம்பித்தான்.
Source : From a Balinese Palm Leaf Manuscript of Raamaayanaa, written and illustrated by Ida Bagus Adnyana of Geriya Gunung Sari Pliatan, Bali. Copied @ 1975

☘️தொடரும்☘️

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!