தங்கமணி / Thangamani Profile picture
Material Scientist, Naturalist, Bird-watcher. Interested in Tamil heritage, language, literature, archeology and temple architecture.

May 9, 2023, 11 tweets

1/10
சில நாட்களுக்கு முன் #திருவள்ளுவர் பாறைக்கும் #விவேகானந்தர் மண்டபத்திற்கும் சென்றோம். திருவள்ளுவரின் 7000 டன் எடை கொண்ட, 133 அடி உயரச் சிலை (மண்டபம் + சிலை) மிக முக்கியமான, அழகான மிகச்சரியான இடத்தில் அமைக்கப்பட்ட ஒன்று. எல்லா சிலைகளும் பண்பாடு, அரசியல் நோக்கங்கள் கொண்டவை.

2/10
கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்ததாக கருதபட்ட பாறையில் RSS ன் ஏக்நாத் ரானடே 1971ல் #கலைஞர் அரசிடம் அனுமதி பெற்று சிலை எழுப்பிய சில வருடங்களிலேயே அங்கு வள்ளுவருக்கு தக்கதொரு சிலை எழுப்பவேண்டியதை கலைஞர் உணர்ந்து 1973ல் அப்பணியைத் தொடங்கியிருக்கிறார்.

3/10
அப்பாறைக்கு வருகிற ஒவ்வொரு வடநாட்டுப்பயணியும் திருவள்ளுவர் என்கிற சனாதனம் தீண்டாத பெயரை உச்சரிக்கின்றனர். படகில் என் அருகில் இருந்த பதின்பருவப் பெண் போனில் திருவள்ளுவரை விக்கியில் படித்துக்கொண்டு வந்தார். எப்படி அரசுப் பேருந்துகளில் கலைஞரால் எழுதபட்டு திருக்குறள்

4/10
படிக்கத்தெரிந்த ஒவ்வொருவரின் கண்வழியே நுழைந்து தமிழின் தனிப்பெரும் பண்பாட்டுக் குறியீட்டுப்படிமம் ஆனதோ அப்படி வள்ளுவரின் நின்ற திருக்கோலம் குமரி வரும் இந்தியர் அனைவரின் மனதில் தமிழ்ப் பண்பாட்டுப் படிமமாக உறையும். படிமங்கள் அரசியலில் மிக வலிமையான கருவிகள், ஆயுதங்கள்.

5/10
இராமனுக்கும், சிவனுக்கும், அனுமனுக்கும் தமிழ்நாட்டில் இருந்த அழகியல் படிமங்களை மனதில் இருந்து அகற்றி ரெளத்திரம் கொண்ட ஆயுததாரிகளாக அவர்களது படிமங்களை நிரப்பும் வலதுசாரி அரசியலுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பேயே அறிவும் தெளிவும் தமிழுக்கென்றே உரித்தானதுமான திருவள்ளுவரைப்

6/10
தமிழருக்கான அரசியல் படிமமாக உருவக்கியது கலைஞரின் சாதனைகளுள் ஒன்று. இந்த வரிசையில் கண்ணகியும் அடங்கும். பல வடமாநிலத்தவரின் கன்னியாகுமரி நினைவில் திருவள்ளுவரின் பேருருவம் தமிழின் உருவென நிறைந்திருக்கும். அது அவர்கள் இதுவரை அறிந்திராத ஆனால் அறியவேண்டி வந்த வரலாற்றுக் கதையாடல்!

7/10
அங்கு செய்ய வேண்டியவை சில உண்டு.

1. ஐஸ்கிரீம் போன்ற தின்பண்டங்கள் விற்கப்படுகிறது. அது விவேகானந்தர் பாறையில் இல்லை. இது தவறல்ல. ஆனால் உணவுப்பொருட்களை உணவுக்கூடத்துக்கு வெளியே, குறிப்பாக திருவள்ளுவர் சிலை அமைந்த கல்மண்டபத்துக்கு அனுமதிக்கப்படக் கூடாது. நாங்கள் சென்றபோது

8/10
ஐஸ்கிரீம் உறைகள், மீதங்கள் அப்படியே அங்கு ஒரு வடநாட்டு குடும்பத்தினரால் போடப்பட்டதைக் கண்டோம். அது அவர்கள் தவறல்ல. தமிழர்களும் செய்வார்கள். சில இடங்களில் சிலவற்றை அனுமதிக்காமல் இருப்பதே நலம்.

2. திருக்குறள் பலமொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. அங்கு அப்புத்தகங்கள் விற்பனை

9/10
செய்யப்பட வேண்டும். அதே போன்று திருக்குறள் இசைக்கப்பட்டு பல புகழ்பெற்ற பாடகர்களால் பாடப்பட்டுள்ளது. அவை அங்கு கிடைக்கவேண்டும்.

3. திருக்குறள் தொடர்பாக ஆயிரக்கணக்கான உரைகள், விளக்கநூல்கள் உள. அத்தனை நூல்களும் அங்கு கிடைக்கும்படி செய்யமுடிந்தால் அது உண்மையில் மிகவும்

10/10
பெரிய செயல். உண்மையில் மிகவும் கடினமானது. ஆனால் சென்னையில் வள்ளுவர் கோட்டத்திலும் இங்கும் அப்படியான ஒரு நூலகம்/ விற்பனையகம் தனி அமைப்பின் கீழ் உருவாக்கபட வேண்டும். ஏனெனில் திருக்குறள் தமிழரின் தனிப்பெரும் அடையாளம், முகவரி, அரசியல் அறிவாயுதம். @mkstalin @skpkaruna

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling