புஸ்வாணமான தேர்தல் வாக்குறுதிகள்... மோடி சொன்ன 50 பொய்கள்!

''நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை'' என சொன்ன மோடி எத்தனை பொய்களை சொல்லியிருக்கிறார் தெரியுமா?
``பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை எல்லாம் மீட்டு, ஒவ்வோர் இந்தியக் குடும்பத்தின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம்''. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் மோடி சொன்ன இந்த வாக்குறுதி
இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த தேர்தலில் மோடி இதுபோன்று சொன்ன பொய்கள் ஏராளம்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார் நரேந்திர மோடி. சரியாக ஐந்தாண்டுகளுக்கு முன்பு
நடந்த அந்தத் தேர்தல் களத்தில் மூன்று லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து, 5,827 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார் மோடி. அப்போது பேசிய வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் தோண்டி எடுத்தோம்.
``நாட்டை மீட்பதற்காகக் கடவுள் என்னைத் தேர்வு செய்துள்ளார். நான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதற்காக இங்கே வரவில்லை. உங்கள் சேவகனான எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். 60 மாதங்களில் இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன்.
60 ஆண்டுகளில் அவர்கள் செய்யாததைச் செய்வேன் என வாக்குறுதி அளிக்கிறேன்'' என்று பிரசார மேடைதோறும் முழங்கினார். அப்போது சொன்ன பொய்களும் மெய்களும் இங்கே அணிவகுக்கின்றன.
1. ``பாகிஸ்தானின் ஆயுதங்களாக மூன்று ஏ.கே-க்கள் உள்ளன. அதில் ஒன்று ஏ.கே. 47 ரக துப்பாக்கி. இரண்டாவது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி. மூன்றாவது, அரவிந்த் கெஜ்ரிவால். இவர்கள் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள். இந்தியாவின் எதிரிகள்'' - 2014 மார்ச் 26. ஜம்மு, ஹிராநகர்
ஏ.கே.அந்தோணி, அரவிந்த் கெஜ்ரிவால் மீது மோடி சுமத்திய குற்றச்சாட்டுகள், இன்று வரை நிரூபிக்கப்படவில்லை. டெல்லி சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி-யையும், காங்கிரஸையும் வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார் கெஜ்ரிவால். அந்த ஆட்சிக்கு எதிராக துணை நிலை ஆளுநரை வைத்து, கொம்பு சீவினார்கள்.
அதிகாரிகள் நியமனம் தொடங்கி, அத்தனையிலும் துணை நிலை ஆளுநரின் தலையீடு, ஆம் ஆத்மியை உடைக்க முயற்சி, ஆம் ஆத்மி-யின் 20 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் என வாள்சுழற்ற முடிந்ததே தவிர, வேறு எதையும் பி.ஜே.பி. சாதிக்கவில்லை. ரஃபேல் விவகாரத்தில் அந்தோணியிடம் மல்லுக்கு நின்றார்கள்.
`பாகிஸ்தான் ஏஜென்டுகள்' என்பதற்கான எந்த ஆதாரத்தையும் ஐந்தாண்டுக் காலத்தில் மோடி தூக்கிப் போடவில்லை.

2. ``மன்மோகன் சிங் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்'' - 2014 மார்ச் 26. ஜம்மு, ஹிராநகர்.
மன்மோகன் சிங் ஆட்சியில் 2013-ம் ஆண்டு 11,772 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மோடி ஆட்சிக்கு வந்தபின் 2014-ம் ஆண்டில் இது 12,360 ஆகவும், 2015-ம் ஆண்டில் 12,602 ஆகவும் கூடியது. அதற்குப் பிந்தைய ஆண்டு புள்ளிவிவரங்களை பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் கிடைக்காது.
3. `` `ஊழலை பொறுத்துக் கொள்ள முடியாது' எனச் சொல்லும் ராகுல் காந்தி, ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் கறைபடிந்திருக்கும் அசோக் சவானுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கியிருக்கிறார். மத்தியில் பொறுப்பேற்க உள்ள புதிய பி.ஜே.பி.
அரசிடமிருந்து ஆதர்ஷ் ஊழல்வாதிகள் தப்ப முடியாது'' - 2014 மார்ச் 31. மகாராஷ்டிரா, அகோலா.

52 வழக்குகள் உள்ள பாபு ராவ் சோயம் என்பவருக்கு தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மக்களவைத் தொகுதியில் இந்தத் தேர்தலில் வாய்ப்பு வழங்கியிருக்கிறது பி.ஜே.பி. இப்போது பி.ஜே.பி. மீது கறை விழாதா?
ஆதர்ஷ் ஊழல் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்கு 2017 செப்டம்பரில்தான் கவர்னர் அனுமதி அளித்திருக்கிறார். ஆட்சிக்கு வந்ததுமே நடவடிக்கை எடுத்திருக்கலாமே?
4. ``நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் உள்ள அனைத்துக் கறுப்புப் பணத்தையும் மீட்டு, அதை ஏழைகளின் முன்னேற்றம் மற்றும் நலனுக்காகப் பயன்படுத்துவோம்'' - 2014 ஏப்ரல் 6. உ.பி, அலிகார்.
எவ்வளவு கறுப்புப் பணத்தை மீட்டார்கள், அதை எந்த ஏழைகளின் நலனுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதைச் சொல்லும் ஒரு புள்ளிவிவரம்கூட மத்திய அரசிடம் இல்லை. ஒரு வெள்ளை அறிக்கைகூட வெளியிடவில்லை.
5. ``மேற்குவங்க மாநிலத்திலிருந்து கூர்காலாந்து பகுதியைப் பிரித்து, தனி மாநிலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களது எண்ணம்தான், என்னுடைய எண்ணமும்!'' - 2014 ஏப்ரல் 10. மேற்கு வங்காளம், சிலிகுரி.
கடந்த 2017-ம் ஆண்டு `கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா' சார்பில் காலவரையற்ற போராட்டம் பல வாரங்களாக நடைபெற்றது. அரை நூற்றாண்டாக எழுப்பப்பட்டு வரும் கூர்காலாந்து கோரிக்கையை மோடி நிறைவேற்றவில்லை.
6. ``அரசியலைக் குற்றவாளிகளின் பிடியிலிருந்து விடுவிப்பேன். பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால், குற்றம்புரிந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ -க்கள் ஓராண்டுக்குள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்'' - 2014 ஏப்ரல் 14. குஜராத், காந்தி நகர்.
ஓராண்டல்ல... கடந்த ஐந்தாண்டில் எத்தனை `மக்கள் பிரதிநிதி'களை சிறைக்கு அனுப்பினீர்கள் எனச் சொல்லுங்கள் மோடி அவர்களே!
7. ``தமிழ்நாட்டில் மின்சாரம் கிடைக்காமல் போனதற்குக் காரணம் நிலக்கரி தட்டுப்பாடுதான். காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கில் நிலக்கரி கோப்பும் மாயமாகிவிட்டது'' - 2014 ஏப்ரல் 16. கிருஷ்ணகிரி, கந்திக்குப்பம்.
மன்மோகன் சிங் ஆட்சியில் நிலக்கரி கோப்பு மாயமாகி விட்டது. மோடி ஆட்சியில் ரஃபேல் விமான ஆவணங்கள் ரகசியமாக வெளியே போய்விட்டது. `ரஃபேல் ஒப்பந்த ரகசிய ஆவணங்கள் கசிந்ததால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆவணங்களை ரகசியமாக நகல் எடுத்து
வெளியே கசியக் காரணமாக இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமே தாக்கல் செய்தது மோடி அரசு. தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு இல்லாததால் கூடுதல் நிலக்கரி பெறுவதற்காக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, 2018 செப்டம்பரில் மத்திய நிலக்கரித் துறை
அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்தார். நிலக்கரி பற்றி பேசிய மோடி, தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டபோது, உடனே உதவியிருக்கலாமே. பியூஷ் கோயல், கூட்டணி பேச்சுவார்த்தைக்குத்தான் தமிழகத்துக்கு ஓடிவந்தார்.
8. ``குற்றம்புரிந்த மக்கள் பிரதிநிதிகள் மீதான நடவடிக்கையில் எந்தப் பாகுபாடும் காட்டமாட்டேன். பி.ஜே.பி-யினராக இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும்'' - 2014 ஏப்ரல் 14. குஜராத், காந்தி நகர்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று, மக்களவையில் நுழைந்த 543 பேரில் 184 எம்.பி-கள் மீது வழக்குகள் இருந்தன. இது மொத்த எம்.பி.க்களில் 34 சதவிகிதம். இதில் பி.ஜே.பி. எம்.பி-கள் மட்டும் 97 பேர். இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை.
9. ``சீனாவிலிருந்து பட்டாசுகள் வருவதால் சிவகாசியில் பட்டாசுத் தொழில் நலிவடைந்திருக்கிறது. பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் பட்டாசுத் தொழிற்சாலைகளையும், தொழிலாளர்களையும் பாதுகாப்போம்'' - 2014 ஏப்ரல் 17. ராமநாதபுரம்.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து சிவகாசியில் 1,400-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டதையும் அங்கே கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டதையும் மோடியின் காதுகளுக்கு யார் கொண்டு போவார்கள்?
10. ``பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, அயோத்தி ராமர் கோயில் பிரச்னை, பொது சிவில் சட்ட விவகாரத்துக்குத் தீர்வு காணப்படும்'' - 2014 ஏப்ரல் 22. ஏ.பி.பி. டி.வி. பேட்டி.
இன்னும் தீர்க்கப்படாமல் தேர்தல் கால அஸ்திரமாக அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது வெளியிடப்பட்ட பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையிலும் இவை இடம்பெற்றிருக்கின்றன.
11. ``10 ஆண்டுகளாக சி.பி.ஐ., ஐ.பி, ரா, வருமானவரித் துறை அமைப்புகளை எனக்கு எதிராகப் பயன்படுத்திய போதிலும் காங்கிரஸ்காரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை'' - 2014 ஏப்ரல் 27. ஃபதேபூர்.
`இந்த அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீது மோடி அரசு ஏவுகிறது' என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்படுகிறது.

12. ``மிகப்பெரிய புண்ணிய ஸ்தலமான `ராமேஸ்வரம் சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டு, உலகத்தினர் அனைவரும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்'' - 2014 ஏப்ரல் 17. ராமநாதபுரம்.
ராமேஸ்வரம் சுற்றுலாத் தலமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. 2016-ல் ராமேஸ்வரத்தை அம்ரூத் சிட்டி ஆக மாற்ற மத்திய அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தது. அந்தத் திட்டத்தில் ஐந்து சதவிகிதம்கூட பணிகள் தொடங்கப்படவில்லை.
13. ``பி.ஜே.பி. கூட்டணி ஆட்சிக்குவந்தால், 70 கோடிப் பேருக்கு வேலை கொடுப்போம்'' - 2014 ஏப்ரல் 16. கிருஷ்ணகிரி, கந்திக்குப்பம்

`இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது' எனத் தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.
``இதனால்தான் வேலைவாய்ப்பு பற்றி தேசிய கணக்கெடுப்பு அலுவலகத்தின் அறிக்கை வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' எனக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் காரணமாக,
தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் செயல் தலைவர் பி.சி.மோகனன் உட்பட இரண்டு பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

``காங்கிரஸின் 2009 தேர்தல் அறிக்கையில் 10 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றீர்கள். எவ்வளவு இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்?'' எனக்
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் உத்தரபிரதேசம் சந்த் கபீரில் (2014 மே 3) மோடி கர்ஜித்தார். இப்போது மோடியின் ஆட்சியிலேயே வேலைவாய்ப்புக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள்.
14. ``தமிழகத்தின் மின்தடைக்கும் அனைத்து மின்கட்டமைப்பு தடைபடுவதற்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணிதான் தடையாக இருக்கிறார்'' - 2014 ஏப்ரல் 16. ஈரோடு
மோடி குறிப்பிட்ட அந்தப் பெண்மணி ஜெயந்தி நடராஜன். அவரது அலுவலகங்கள், வீடுகளில் 2017-ல் சி.பி.ஐ. சோதனை போட்டது. அதன்பிறகு அந்த வழக்கு எதற்காகவோ அமுங்கிப் போனது.
15. ```குற்றம்புரிந்த அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்கும் எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சிறப்பு நீதிமன்றங்களை ஓராண்டில் அமைப்பேன்'' - 2014 ஏப்ரல் 14. குஜராத், காந்தி நகர்.
`தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் போட்டார். `குற்றப் பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ-க்களை விசாரிக்க சிறப்பு
நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். 2018 மார்ச் 1-ம் தேதி முதல் அவை செயல்பட வேண்டும்' எனக் கடந்த 2017 டிசம்பரில் உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். அதன் பிறகும் மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்காமல் 12 சிறப்பு நீதிமன்றங்களைக் கடந்த ஆண்டு செப்டம்பரில்தான் அமைத்தது. தன்னிச்சையாகச் சிறப்பு
நீதிமன்றங்களை அமைக்க முன்வராமல் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதையும் காலம் தாழ்த்திதான் அமைத்தார் மோடி.

``குற்றப்பின்னணி எம்.பி-க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்'' என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சொன்ன மோடி,
ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை. அஸ்வினி குமார் என்பவர் போட்ட பொது நல வழக்கில்தான், மத்திய அரசு பதில் அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
16. ``காங்கிரஸ் தலைவர்கள் ஏழைகளைப் பார்க்கப் போகும்போது கூடவே கேமராமேன்களையும் அழைத்துப் போகிறார்கள். சுற்றுலா சென்று தாஜ்மகாலைப் பார்ப்பது போலவே ஏழைகளை காங்கிரஸ்காரர்கள் பார்க்கின்றனர்'' - 2014 ஏப்ரல் 17. ராமநாதபுரம்.
எந்தவொரு விழாவிலோ, நிகழ்ச்சிகளிலோ பிரதமர் மோடி பங்கேற்கும்போது, அவரின் கண்கள், கேமிராக்கள் பக்கம்தான் திரும்பியிருந்தன என்பதை எத்தனை மீம்ஸ்கள் சொல்லியிருக்கும்.
17. ``சி.ஏ.ஜி., சி.பி.ஐ. உட்பட அனைத்து தன்னிச்சையான, ஜனநாயக அமைப்புகளையும் காங்கிரஸ் ஆட்சிதான் மட்டம்தட்டி அவமதித்தது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் தேவைப்பட்டபோதெல்லாம் கட்சிகளை மிரட்ட சி.பி.ஐ-யைப் பயன்படுத்தினீர்கள்'' - 2014 ஏப்ரல் 17. புதுடெல்லி.
இதே கோஷத்தை இன்றைக்கு எதிர்க்கட்சிகள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. சி.பி.ஐ., ஆர்.பி.ஐ. சி.ஏ.ஜி., வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, நிதி ஆயோக், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகள் மோடி ஆட்சியில் தடம் மாறிக் கொண்டிருக்கின்றன என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
விஜயபாஸ்கரின் குட்கா வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., ரஃபேல் விமான முறைகேடு பற்றிப் பேசாத சி.ஏ.ஜி. அமைப்பை எல்லாம் யார் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
``ஒரு நாட்டின் மத்திய வங்கியினைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும்'' என ஆர்.பி.ஐ. துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா கொதிக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கும் ஆர்.பி.ஐ-க்கும் இடையேயான மோதல் போக்கு வெட்டவெளிச்சமானது.
18. ``ஜவுளிகளின் சொர்க்கமான ஈரோட்டில் ஜவுளித் தொழிலுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும். ஈரோட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உறுதியான நடவடிக்கை எடுப்போம்'' - 2014 ஏப்ரல் 17. ஈரோடு.
இந்த அறிவிப்புகள் என்ன ஆனது எனத் தெரியவில்லை.

19. ``சிவகங்கை தொகுதி வாக்காளர்களுக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கை சின்னம் பொறிக்கப்பட்ட கைக்கடிகாரத்தை வழங்குகிறார். தேர்தல் ஆணையம் அவர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும்'' - 2014 ஏப்ரல் 17. ராமநாதபுரம்.
``தேர்தல் ஆணையமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது'' என விமர்சனம் வைக்கப்படும் நிலையில், இந்தப் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்கலாமே. ஐந்தாண்டுகளுக்கு முன்பு சொன்ன இந்தக் குற்றச்சாட்டை நிரூபித்து ப.சிதம்பரத்துக்கு தண்டனை பெற்றுக் கொடுத்திருக்கலாம்.
20. ``எம்.பி., எம்.எல்.ஏ-க்களைத் தொடர்ந்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க, ஊராட்சி அடிப்படையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்'' - 2014 ஏப்ரல் 14. குஜராத், காந்தி நகர்.
இதுவும் பொய்களோடு கடந்து போனது.

21. ``தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. இரண்டு கட்சிகளிடமிருந்து மக்கள் விடுபடாவிட்டால் தமிழகத்துக்கு விமோசனம் கிடையாது'' - 2014 ஏப்ரல் 17. கன்னியாகுமரி.
`கழகங்கள் இல்லா தமிழகம், கவலையில்லா தமிழகம்' என கோஷம் எழுப்பிய பி.ஜே.பி. இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துதான் விமோசனம் தேடிக் கொண்டிருக்கிறது.
22. ``பி.ஜே.பி. ஆட்சி அமைந்தால் ஊழலை ஒழிப்பதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொள்வோம். இந்த நடவடிக்கையில் அரசியல் குறுக்கீடு
இருந்தால், அதையும் முறியடிப்போம்'' - 2014 ஏப்ரல் 18. சி.என்.பி.சி., டிவி 18 பேட்டி.
ஊழலை ஒழிப்பதற்கு மோடி காட்டிய வேகத்துக்கு லோக்பால் ஒன்றே சாட்சி. ஊழலை எல்லா மட்டத்திலும் ஒழிக்க... ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக, மன்மோகன் சிங் ஆட்சியின் கடைசிக் காலத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆட்சியில் இருக்கும் வரையில்
இந்த அமைப்பை உருவாக்குவது பற்றி மோடி கவலைப்படாமல் இருந்துவிட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் லோக்பால் அமைப்புக்கு சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பினாகி சந்திரகோஷை தலைவராக நியமித்திருக்கிறார்.
23. ``பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் கங்கை - காவிரி நதிநீர் இணைப்புத் தி்ட்டம் செயல்படுத்தப்பட்டு, தமிழக விவசாயிகளின் பாசன நீர்ப் பிரச்னையைத் தீர்ப்போம்'' - 2014 ஏப்ரல் 17. தமிழ்நாடு, ராமநாதபுரம்.
`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு எப்படியெல்லாம் தண்ணி காட்டியது. கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்காக தமிழகத்தை வஞ்சித்தது' எனக் கடுமையான குற்றச்சாட்டுகள் பி.ஜே.பி. மீது சுமத்தப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக்
கண்டித்து தமிழகத்தில் பெரும் போராட்டம் எல்லாம் நடைபெற்றது. `கோபேக் மோடி' ஹேஷ்டேக் போட்டு எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். காவிரிக்கே இப்படிக் கைவிரித்தவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன கங்கை - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தயைச் செயல்படுத்தப்போகிறார்கள்.
`கங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா' என இன்னும் எத்தனை வருடங்களுக்கு விவசாயிகள் பாடிக் கொண்டிருக்கப் போகிறார்களோ!

24. ``மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்'' - 2014 ஏப்ரல் 16. சேலம்.
எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைப்புதான் நடைபெற்றது.

25. ``காங்கிரஸ் ஏமாற்றுக் கட்சி; 2009-ல் வெளியிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒரு ஏமாற்றுப் பத்திரம். அதில் 100 நாள்களுக்குள் விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள். இது ஏமாற்று வேலை இல்லையா?
தவறுகளை மக்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால், ஏமாற்றுவதை மன்னிக்க மாட்டார்கள்'' - 2014 ஏப்ரல் 29. இமாசலப் பிரதேசம், பாலம்பூர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2014 ஏப்ரல் 7-ம் தேதி அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோருடன் இணைந்து மோடி வெளியிட்ட பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையை இப்போதாவது புரட்டிப் பாருங்கள்.
* சட்டப் பிரிவு 370-ஐ திரும்பப்பெற நடவடிக்கை எடுப்போம்.
* கறுப்புப் பண பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்போம்.
* நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யச் சட்டம் இயற்றுவோம்.
* மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறைக்கு முடிவு கட்டப்படும்.
* வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டு வருவோம்.
இதெல்லாம் மோடி கொடுத்த வாக்குறுதிகள்தானே. இது ஏமாற்று வேலை இல்லையா? ''ஏமாற்றுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்'' என்றீர்களே அது உங்களுக்கும் பொருந்தும்தானே!
26. ``காங்கிரஸ் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமில்லை. பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் தூணாகும். அது எழுத்திலும் செயலிலும் பேணி பாதுகாக்கப்பட வேண்டும்'' - 2014 மே 3. உலகப் பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவு.
இந்த ஐந்தாண்டுக் காலத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பையே மோடி நடத்தவில்லை.

27. ``ஏழையாகவே பிறந்து ஏழையாகவே வளர்ந்தவன். ஏழ்மையின் வலியை நன்கு உணர்ந்தவன் என்பதால், ஏழ்மையைப் போக்குவதே எனது முதல் கடமையாக நினைத்து பணியாற்றுவேன்'' - 2014 ஏப்ரல் 17. ராமநாதபுரம்.
கஜா புயல் பாதிக்கப்பட்டபோது, தமிழகத்தை எட்டிக்கூடப் பார்க்காத இறந்தவர்களுக்கு ஓர் இரங்கல்கூட தெரிவிக்காத மோடி, ஏழ்மையின் வலியை எப்படி உணர்ந்தார்?
28. ``ஆட்சிக்கு வந்தால் மாற்றுக் கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநில அரசுகளைப் பழிவாங்க மாட்டேன்'' - 2014 ஏப்ரல் 18. மேற்கு வங்க பத்திரிகை பேட்டி.
தமிழகத்திலும் மேற்கு வங்காளத்திலும் புதுச்சேரி, டெல்லி மற்றும் கேரளா மாநிலங்களில் என்ன நடந்தது என்பதை இந்த நாடறியும்.
29. ``நான் அரசியலையும் நாடாளுமன்றத்தையும் தூய்மைப்படுத்த வந்துள்ளேன். கட்சி வேறுபாடின்றி எம்.பி.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காகக் குழு ஒன்றை அமைப்பேன். இந்தக் குழுவினர், வெற்றி பெற்ற எம்.பி-க்கள், தங்கள் வேட்புமனுக்களில் குறிப்பிட்ட
வழக்குகளின் விவரங்களைச் சேகரிப்பார்கள். குற்றம் செய்தவர்கள் இருந்தால் அவர்கள் தண்டனை பெற்று, சிறைக்குச் செல்வார்கள். அவர்களின் தொகுதியில் மறுதேர்தல் நடைபெறும். அதில், குற்ற வழக்குகள் இல்லாத வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்'' - 2014 ஏப்ரல் 21. உ.பி. ஹர்தோய்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி. சார்பில் நிறுத்தப்பட்ட 428 வேட்பாளர்களில் 143 பேர் மீது குற்ற வழக்குகள் இருந்தன. அரசியலைத் தூய்மைப்படுத்துவதை வேட்பாளர்களிலிருந்தே ஆரம்பித்திருக்கலாம். ஆனால், அவர்கள் ஜெயித்து வந்த பிறகு, `சிறைக்கு அனுப்புவோம்' என்பது எல்லாம் எந்த மாதிரியான
டிசைன். மோடி சொன்ன அந்தக் குழு அமைக்கப்படவே இல்லை.
குற்றப் பின்னணி மக்கள் பிரதிநிதிகளைப் பாதுகாப்பவர்கள் சவுக்கிதார் அல்ல.

30. ``தேர்தல் ஆணையம் பாரபட்சமாகச் செயல்படுகிறது. வன்முறைகளையும், கள்ள வாக்களிப்பதையும் தடுக்கத் தவறிவிட்டது. இப்படிச் சொல்வதற்காக என் மீது வழக்கு போடட்டும்.
நீங்கள் ஏன் செயல்படவில்லை? உங்கள் உள்நோக்கம் என்ன?'' - 2014 மே 5. மேற்கு வங்காளம், அசன்சோல்.

`மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும்' எனச் சொன்ன சையது சுஜா உள்ளிட்டோர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு... 50 சதவிகித ஒப்புகைச் சீட்டை எண்ண முடியாது எனப் பிடிவாதம்,
மோடியின் விண்வெளி சாதனை பேச்சு விதிமீறல் இல்லை எனச் சப்பைக்கட்டு... அறிவிப்புகள், திட்டங்களை மத்திய அரசு வெளியிடுவதற்கு வசதியாகத் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம், எனத் தேர்தல் கமிஷன்
செயல்பாடுகள் சந்தி சிரித்தன. தேர்தல் ஆணையம் இப்போது பாரபட்சமாகச் செயல்படுகிறது என இப்போதும் மோடியால் சொல்ல முடியுமா?

31. ``மீன்கள் அதிகம் இருக்கும் இடத்தை சேட்டிலைட் மூலம் கண்டறிந்து அது தொடர்பான தகவல் மீனவர்களின் செல்போன்களுக்குத் தெரிவிக்கப்படும்.
இதனால் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று மீன்களை அதிக அளவில் பிடிக்கலாம். குஜராத்தில் உள்ள இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும். விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் மீனவர்களைப் பாதுகாப்போம்'' - 2014 ஏப்ரல் 17. தமிழ்நாடு, ராமநாதபுரம்
கன்னியாகுமரியில் ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கும் நவீனக் கருவிகள்கூட நம்மிடம் இல்லை. `குகையில் சிக்கிய மாணவனை மீட்டது தாய்லாந்து. ஒகியில் சிக்கிய தமிழக மீனவனை மீட்கவில்லை. 'தாய்நாடு' என்கிற குரல்கள் மத்திய அரசின் செவிகளில் விழவில்லை.
32. ``நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்காள முதல்வர் தனது பணியைச் செய்கிறாரா என்பதை உறுதி செய்வோம். பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததும் மம்தா தன் நாடகத்தை நிறுத்திவிட்டு, அரசைத் தீவிரமாக நடத்துவார்'' - 2014 மே 5. மேற்கு வங்காளம் அசன்சோல்.
மம்தாவின் பணியை எப்படியெல்லாம் மோடி உறுதி செய்தார் என்பதை மத்திய அரசுக்கும் மேற்கு வங்காளத்துக்கும் இடையே நடந்த அறிக்கைப் போர் உறுதிசெய்யும். மேற்கு வங்காள அரசின் அனுமதியைப் பெறாமல் விசாரணை செய்ய வந்த சி.பி.ஐ அதிகாரிகளைக் கண்டித்து
முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி போர்பரணி பாடினார். ஐந்தாண்டுகள் சும்மா இருந்துவிட்டு, தேர்தல் நேரத்தில் மம்தாவுக்கு எதிராக வாள் சுழற்றியது மத்திய அரசு.
33. ``பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தனது ஆட்சியில் `ஜெய் ஜவான், ஜெய் கிஸான்' (ராணுவ வீரர் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்றார். மன்மோகன் சிங் ஆட்சியில், `மர் ஜவான், மர் கிஸான்' (ராணுவ வீரர் ஒழிக, விவசாயிகள் ஒழிக) என்ற கோஷத்தை எழுப்பியுள்ளனர். பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால்
ராணுவ வீரர்களின் உயிர் பாதுகாக்கப்படும். விவசாயிகள் தற்கொலை முற்றிலும் தடுக்கப்படும்'' - 2014 மே 11. உ.பி, ராபர்ட்ஸ்கஞ்ச்.
புல்வாமா தாக்குதலில் இறந்த 40-க்கும் மேற்பட்ட. சி.ஆர்.பி.எஃப் வீரர்களும், டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு நிர்வாணமாக ஓடிய விவசாயிகளும் நம் கண்முன் வந்து போகிறார்கள்.
34. ``காங்கிரஸ் தலைவர்கள் ஊழல்வாதிகளாக இல்லாவிட்டால், அவர்கள் ஏன் கறுப்புப் பணம் குறித்து கவலைப்படுகிறார்கள்? வெளிநாட்டு வங்கிகளில் குவித்த அந்தப் பணத்தை நாங்கள் திரும்பக் கொண்டு வருவோம்'' - 2014 பிப்ரவரி 16. இமாச்சல பிரதேசம், சுஜன்பூர்.
கறுப்புப் பணம் வரவில்லை. கறுப்புப் பணத்தை கொண்டு வருவோம் என்பதைத்தான் இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட கறுப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை மோடிதான் சொல்ல வேண்டும்.
35. ``ஈரோட்டு மஞ்சளை இந்தியாவே நேசிக்கிறது. ஈரோடு விவசாயிகளுக்கு இந்தியா நன்றிக் கடன்பட்டுள்ளது. பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததும் மஞ்சளை ஆயுர்வேதம் மட்டுமன்றி, அழகுசாதனப் பொருளாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்போம்'' - 2014 ஏப்ரல் 17. ஈரோடு
இந்த அறிவிப்பும் புஸ்வாணம்தான். மஞ்சளுக்கு புவிசார் குறியீடே போன மாதம்தான் அளித்திருக்கிறார்கள்.

36. ``2009 தேர்தலில் ஆந்திராவில் பெற்ற வெற்றிதான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உதவியது. ஆனால், இன்று ஆந்திர மக்கள் துயரத்தில் உள்ளனர்'' - 2014 பிப்ரவரி.18. கர்நாடகா, தாவணகெரே
ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஆந்திர மக்களுக்காகக் கவலைப்பட்ட மோடி அந்த மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்தைக் கடைசி வரையில் வழங்கவில்லை.
37. ``மத்திய அரசின் செயல்பாடுகளில் சோனியா காந்தி தலையிட்டு ஆட்சியைச் சீர்குலைத்துவிட்டார். காங்கிரஸை இந்த முறை சி.பி.ஐ-யால்கூட காப்பாற்ற முடியாது'' - 2014 ஏப்ரல் 6. உ.பி., பிஜ்னோர்.
ரஃபேல் ஊழல், அமைச்சர் விஜயபாஸ்கரின் குட்கா உள்ளிட்ட வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் நிலையில், சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவை அதிரடியாக மாற்றிவிட்டு புகார்களுக்கு உள்ளான ராகேஷ் அஸ்தனாவை திணித்தது மத்திய அரசு. அலோக் வர்மாவுக்கும், ராகேஷ் அஸ்தானாவுக்கும்
இடையே நடந்த பனிப்போர் அப்பட்டமாக வெளிப்பட்டது. புதிய இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவை, `பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் மன்னிப்பு வழங்க முடியாது. மூலையில் போய் அமருங்கள்' என உச்ச நீதிமன்றம் விநோத தண்டனை கொடுத்தது எல்லாம் சி.பி.ஐ-க்குக் கிடைத்த சர்டிஃபிகேட்.
38. ``நாட்டுக்காக வாழ்வதும் உயிர் விடுவதும்தான் எங்கள் சித்தாந்தம்'' - 2014 மார்ச் 29. உத்தரப்பிரதேசம், பாக்பத்

எல்லையில் ராணுவ வீரர்களும் வங்கி வாசல்களில் குடிமகனும் உயிரை விட்டதுதான் மிச்சம்.
39. ``ராகுல் காந்தியின் காவலர்கள் யார்? ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய அசோக் சவான், மாட்டுத்தீவன ஊழலில் கைது செய்யப்பட்ட லாலு பிரசாத். இவர்கள் நாட்டின் காவலர்களா? இவர்களோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.
பாலுக்குக் காவலாக இருக்கிற பூனையை நான் இன்னும் பார்க்கவில்லை'' - 2014 ஏப்ரல் 3. ஜார்கண்ட், ஜூமார்டாலியா.

40. ``நமது ராணுவத்துக்கு போதிய ஆயுதங்களோ, தளவாடங்களோ இல்லை. நீர்மூழ்கிக் கப்பல்கள் விபத்துக்குள்ளானதால், கடற்படை தளபதி பதவி விலகினார். பாதுகாப்புத் துறைக்கு மத்திய அரசு உரிய
முக்கியத்துவம் அளிக்கவில்லை'' - 2014 ஏப்ரல் 9. கேரள, காசர்கோட்.

இந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்திய மோடி அரசின் மீதுதான் இன்றைக்கு ரஃபேல் விமான முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது.
41. ``சாரதா சிட்பண்ட் மோசடியில், தொடர்புடைய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய கொள்ளையில் ஈடுபட்டவர்கள், அதிக நேரமும், வாய்ப்பும் கிடைத்தால், என்ன செய்வார்களோ?'' 2014 ஏப்ரல் 11. மேற்கு வங்காளம், சிலிகுரி.
42. ``கடந்த 2009 தேர்தல் அறிக்கையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காங்கிரஸ் கட்சி ஏமாற்றிவிட்டது. காங்கிரஸைத் தேர்தலில் இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும்'' - 2014 ஏப்ரல் 20. அஸ்ஸாம். ககோய்ஜன்.
43. ``தேர்தல் நேரத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஏழைகள் நினைவு வருகிறது'' - 2014 ஏப்ரல் 11, ஒடிசா, பாலேஸ்வர்.

பி.ஜே.பி-யின் இப்போதைய தேர்தல் அறிக்கையில், `விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கும் திட்டம்', '60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்'
போன்ற அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். பி.ஜே.பி-க்கு தேர்தல் நேரத்தில்தான் விவசாயிகளின் நினைவு வந்துள்ளதா?
44. ``சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா, ராஜஸ்தான் மாநிலத்தில் நிலங்களை வாங்கிக் குவித்ததாகக் கூறப்படும் புகார் குறித்து பி.ஜே.பி. ஆட்சி அமைந்ததும் விசாரிப்போம்'' - 2014 ஏப்ரல், ராஜஸ்தான், பலோத்ரா.
ராபர்ட் வதேராவின் நில அபகரிப்பு புகார் தொடர்பாக எட்டு நிமிட வீடியோ ஒன்றை 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெளியிட்டது பி.ஜே.பி. இதன் தொடர்ச்சியாகத்தான் மோடி அந்தக் கருத்தை வெளியிட்டார். இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரியங்கா, காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகுதான் ராபர்ட் வதேராவின் மீதான வழக்குகள் வேகமெடுக்க ஆரம்பித்தன.

45. ``2009-ம் ஆண்டு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 100 நாள்களில் விலைவாசியைக் குறைப்பதாகவும், 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
அது, தேர்தல் அறிக்கை அல்ல; மோசடி அறிக்கை'' - 2014 ஏப்ரல் 30, இமாசலப்பிரதேசம், பலம்பூர், மாண்டி, சோலன்.

``கறுப்புப் பணத்தை மீட்டு 15 லட்சம் ரூபாய் போடுவேன்'' என மோடி சொன்னதையும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம்... ராமர் கோயில் கட்டுவோம்...
பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவோம் எனக் கடந்த தேர்தலில் மோடி சொன்ன வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதே கூட்டத்தில் இன்னொன்றையும் சொன்னார் மோடி.
``மக்களை ஏமாற்றினால் மன்னிக்கவே மாட்டார்கள். தவறை மன்னிப்பார்கள், ஆனால் ஏமாற்றுவதை மன்னிக்க மாட்டார்கள்'' என்றார். இப்போது அது மோடிக்கும் பொருந்துகிறது.
46. ``ராகுல் காந்திக்கு வறுமை என்றால் என்னவென்றே தெரியாது. அவர் தாஜ்மகாலுக்கு சுற்றுலா செல்வதுபோல ஏழைகளின் வீடுகளுக்குச் செல்கிறார்'' - 2014 ஏப்ரல் 30, இமாசலப்பிரதேசம் பலம்பூர், மாண்டி, சோலன்.
`சுற்றுலா செல்வதுபோல மோடி வெளிநாடுகளுக்குச் சென்றுவருகிறார்' என்கிற குற்றச்சாட்டை காங்கிரஸ் இப்போது முன்வைக்கிறது.

47. ``மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள நதிகளை இணைப்போம். அது ராயலசீமாவுக்கு பலன் தரும்'' - 2014 மே 1, ஆந்திரா, மதனப்பள்ளி.
பி.ஜே.பி. இப்போது வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையிலும் நதிகள் இணைப்பு பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பை நடிகர் ரஜினி வரவேற்றுள்ளார். 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் ``நதிகளை இணைப்போம்'' என்றார் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்.
அப்போதும் ரஜினி அதனை வரவேற்று, ``என் ஓட்டு நதிகளை இணைக்கும் பா.ஜ.க-வுக்குதான்'' என்றார். தேர்தல்களும், நதிகளும் கடந்து போகின்றன. அறிவிப்பு என்னவோ அப்படியேதான் இருக்கிறது.
48. ``கிரிக்கெட்டைப் பற்றிப்பேச நேரமுள்ள வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவாருக்கு உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகளைக் காப்பாற்ற நேரமில்லை'' - 2014 ஏப்ரல். மகாராஷ்டிரா.

அந்த வார்த்தைகள், இப்போது மோடிக்கே பொருந்தும். பல நாடுகளுக்குச் சுற்றிக்கொண்டிருந்த மோடியால்,
விவசாயிகள் மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் பல்வேறு போராட்டங்களை நடத்தியபோதும், மோடி அரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை. அரைநிர்வாணமாக அவர்கள் ஓடியபோதும் மோடி ஓடி வரவில்லை.
49. ``குற்றவாளிகள் மயமாக அரசியல் மாறுவது வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பு. ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான், குற்றவாளிகளைக் காங்கிரஸ்காரர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள். குற்றப்பின்னணி கொண்ட மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்தப்
பாகுபாடும் நான் காட்ட மாட்டேன்'' - 2014 ஏப்ரல் 14. குஜராத், காந்தி நகர்.

அரசியல் குற்றவாளிகள் மயமாவது பற்றியெல்லாம் அன்றைக்குப் பேசிய மோடிதான், இப்போது முதல்கட்ட
நாடாளுமன்றத் தேர்தலில் குற்றப் பின்னணி கொண்ட 30 பேருக்கும், இரண்டாவதுகட்டத் தேர்தலில் 16 பேருக்கும் சீட் கொடுத்திருக்கிறார்.
50. ``அமிர்தசரஸ் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் வேட்பு மனுவில் வங்கிக் கணக்குகள் குறித்து எதையும் தெரிவிக்காமல் விட்டுள்ளார். அவரின் குடும்பத்துக்கு வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இருப்பதாக புகார்கள் தேர்தல்
கமிஷனிடம் கூறப்பட்டுள்ளன. இந்தப் புகார்களைத் தேர்தல் ஆணையம் விசாரிக்கவேண்டும். உண்மை நிலையை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்'' - 2014 ஏப்ரல் 13. பார்மர்.

அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராகப் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2014 தேர்தல் வேட்பு மனுவில் டெல்லி
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். அப்போது தவறான தகவலைக் கூறுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதே ஸ்மிருதி இரானி, இப்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் `பட்டப்படிப்பை முடிக்கவில்லை' எனக் குறிப்பிட்டிருக்கிறார். மோடி தன் திருமணம்
தொடர்பான விவரத்தை ஏற்கெனவே பல தேர்தல்களில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் குறிப்பிடாமல், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டும் மனைவி யசோதா பென் எனக் குறிப்பிட்டிருந்தார். எனவே, அமரீந்தர் சிங் பற்றிப் பேசுவதற்கு பி.ஜே.பி. தகுதியை இழந்துவிட்டது.

vikatan.com/government-and…


கருப்பு நிறத்தை மீண்டும் கொண்டு வர முடியாவிட்டால் என்னை தூக்கில் போடுங்கள்
கருப்பு பணத்தை களைவதற்கு எனக்கு 50 நாட்கள் கொடுங்கள்

மோடி தருவதாக சொன்ன ரூ.15 லட்சம் பணம் எங்கே.. ஆர்டிஐ மூலம் கேள்வி. டெல்லி: தேர்தலின் போது, மக்கள் எல்லோருடைய கணக்கிற்கும் அளிப்பதாக மோடி கூறிய ரூ.15 லட்சம் பணம் எப்போது போடப்படும் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு பதில் அளிக்க முடியாது என்று தகவல் ஆணையம் மறுத்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்த போது, பிரதமர் மோடி ''பாஜக கட்சி வெற்றி பெற்றால், கருப்பு பணம் மீட்கப்பட்டு எல்லா வாக்காளர்களுக்கும் ரூபாய் 15 லட்சம் வங்கி கணக்கில் கொடுக்கப்படும்'' என்று கூறினார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

15 Sep
#கொலை_செஞ்சியா_எடப்பாடி

கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும், Image
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
Read 23 tweets
15 Sep
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17. Image
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
Read 4 tweets
15 Sep
உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் நாய் தரகர் தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியா ?

அதிமுக முதுகில் சவாரியா ?

@Narayanan3 @BJP4TamilNadu @annamalai_k Image
சொந்தக்கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைத்தால் வெற்றி பெற முடியுமா? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

அதிமுகவை ராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
உள்ளாட்சி தேர்தல்: அமமுக-தேமுதிக கூட்டணி முறிந்தது Image
Read 4 tweets
15 Sep
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
Read 25 tweets
15 Sep
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. Image
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
Read 4 tweets
14 Sep
#HBDarignaranna
#MupperumVizha2021
#முப்பெரும்விழா
#DravidamisaLifestyle
#திராவிடம்_ஒரு_வாழ்க்கைமுறை

தொ. பரமசிவன்

அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.

நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.
Read 40 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(